Thursday, April 25, 2024

பு‌லிக‌ளி‌ன் ஈழத்திலும் சாதிக்கொரு நீதி!


புலிகளின் காலத்தில் சாதி வெறியர்களுக்கு மிக மென்மையான "தண்டனை" கொடுத்து சாதிய கட்டமைப்பை பாதுகாத்து வந்துள்ளனர். இதனை "அதி தீவிர புலி விசுவாசி" ஒருவர் தானாகவே உறுதிப் படுத்தி உ‌ள்ளா‌ர். 

ஒரு கோவிலில் தாழ்த்தப்பட்ட சாதியினர் சாமி தூக்க விடாமல் உயர்த்தப் பட்ட சாதியை சேர்ந்த நிர்வாகத்தினர் தடுத்துள்ளனர். அதற்கு தண்டனை என்ன? 
தாழ்த்தப்பட்ட சாதியினர் முதுகில்/கையில் சீனியை கொட்டி நக்க வைத்து ஒரு வேடிக்கையான, மிகவும் மென்மையான தண்டனை கொடுத்துள்ளனர்! 

ஏனென்றால் அந்தக் குற்றவாளிகள் சாதியால் உயர்ந்தவர்கள். அவ‌ர்களு‌க்கு கடுமையான தண்டனை கொடுக்க முடியாது. குறைந்த பட்சம் துரோகிகள், ஒட்டுக் குழு என்று முத்திரை குத்தி சமூகத்தில் இருந்து ஒதுக்க முடியாது. காரணம் அவர்கள் சாதியால் உயர்ந்தவர்கள்! பண வசதி படைத்த ஆதிக்க சாதியினரின் நிதி போராட்டத்திற்கு தேவை. அதனால் அவர்களை பகைக்க கூடாது.
இது தான் புலிகளின் நீதி! 
சாதிக்கொரு நீதி.

சரி, அதற்கு பிறகாவது சாமி தூக்க அனுமதித்தார்களா? 
இல்லை. கோயிலை மூடி விட்டார்கள். இதனால் யாருக்கு இலாபம்? நிச்சயமாக ஆதிக்க சாதியினருக்கு தான் ஆதாயம். போர் நடந்த காலத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினரின் பங்களிப்பு அவ‌சிய‌ம். அதனால் அவர்களை திருப்திப் படுத்த தற்காலிகமாக கோயிலை மூடி விட்டனர். போர் முடிந்த பின்னர் திறக்கப் படும். ஆனால் பழைய நிலைமையே தொடரும். அதுவும் புலிகளுக்கு நன்றாகத் தெரியும். 

புலிகள் உண்மையிலேயே சாதியத்தை ஒழிக்க விரும்பி இருந்தால் சாதி வெறியர்களுக்கு மரண தண்டனை வழங்க எது தடையாக இருந்தது? 

கண்டிக்கு சென்று சிங்கள இனவெறி யின் சின்னமாக கருதப்பட்ட தலதா மாளிகைக்கு குண்டு வைக்க தெரிந்தவர்களுக்கு, அருகில் இருந்த சாதி வெறிக் கோயிலுக்கு குண்டு வைக்க முடியவில்லை. 
என்ன காரணம்? 

#அறிவோம்ஈழம்


Saturday, April 20, 2024

தமிழ்த் தேசியம்- ஒரு அதிகார வர்க்க ஒத்தோடி அரசியல்

மலையக தமிழ் தொழிலாளர்களை யாழ் தமிழ் கங்காணிகள் ஒடுக்கியது பற்றிய விவாதம் அண்மைக் காலமாக சமூக வலைத்தளங்களில் நடந்து வருகின்றது. 

இந்த வரலாற்றை மறுப்பவர்கள் கூறும் (வழமையான) காரணம், இந்த குற்றச்சாட்டு தமிழர்களை "பிளவு படுத்துகிறது"(!) என்பது தான். இப்படி பேசுவோர், "தமிழர்கள் ஒரே இனமாக ஒற்றுமையாக வாழ்ந்தார்கள்..." என்ற இனவாதக் கோட்பாட்டின் அடிப்படையில் அதை சொல்கிறார்கள். உண்மையில் அது ஒரு கற்பனை (myth). உலகில் உள்ள ஏனைய இனங்கள் போன்று தமிழர்களும் "ஒரே இனமாக, ஒற்றுமையாக" வாழவில்லை. பகை முரண்பாடு கொண்ட சமூகங்களாக பிரிந்து நின்றனர். இன்றைக்கு அதில் பெருமளவு மாற்றம் வந்திருந்தாலும் வர்க்க முரண்பாடு மாறவே மாறாது. காரணம், இவர்கள் வாழும் முதலாளித்துவ பொருளாதார கட்டமைப்பு. 

பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவில் இருந்து பெருந்தோட்ட தொழிலாளர்களை அழைத்து வரும் போதே கங்காணிகளையும் கொண்டு வந்தனர் என்று சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் அப்படி நடந்திருக்கிறது. மறுக்கவில்லை. ஆனால் பிரித்தாளும் கொள்கையில் சிறந்த பிரிட்டிஷ்காரர்கள் காலப்போக்கில் யாழ்ப்பாண கங்காணிகளை பணியில் அமர்த்தினார்கள்.

அதற்கு மூன்று காரணங்கள் உள்ளன:

1. இலங்கைத் தமிழர்கள், இந்தியாவில் இருந்து வந்த தமிழர்களை விட தனித்துவமான வரலாறு, பண்பாட்டை கொண்டவர்கள்.

2. இரண்டு வகை தமிழர்களுக்கு இடையில் உள்ள சாதி வேறுபாடு. அந்தக் காலத்தில் யாரிடமும் மொழி உணர்வு அல்லது இன உணர்வு இருக்கவில்லை. சாதிய உணர்வே மேலோங்கி  இருந்தது.

3. யாழ்ப்பாணத் தமிழர்கள் பிரிட்டிஷ் காலனிய எஜமானர்களுக்கு விசுவாசமாக இருந்தனர். இது மிக முக்கியமானது. எந்த அதிகார வர்க்கமும் தமக்கு விசுவாசமாக நடக்கும் பிரிவினருக்கு பதவிகளை கொடுக்கும். 

பொதுவாக முதலாளித்துவ கட்டமைப்பு எவ்வாறு இயங்குமோ அ‌வ்வாறு தான் மலையகத்தில் நிலைமை இருந்தது. 

அதாவது முதலாளித்துவ சமுதாயத்தில் 3 வகையான வர்க்கப் பிரிவினைகள் இருக்கும்:

1. பெரும் முதலாளிகள். மலையகத்தில் பெருந்தோட்ட முதலாளிகள். அவர்கள் பெரும்பாலும் ஆங்கிலேய அல்லது ஐரோப்பிய இனத்தவர்கள். 

2. முதலாளிகளுக்கு சேவை செய்யும் நடுத்தர வர்க்கம் அல்லது குட்டி முதலாளிய வர்க்கம். மலையகத்தில் கங்காணிகள், கீழ் மட்ட மனேஜர்கள், அலுவலக ஊழியர்கள். அவர்கள் பெரும்பாலும் யாழ்ப்பாணத் தமிழர்கள். 

3. அடித்தட்டு பாட்டாளி வர்க்கம். அவர்கள் பெரும்பாலும் இந்தியாவில் இருந்து அழைத்து வரப் பட்ட தொழிலாளர்கள். தமிழ் பேசினாலும் ஒடுக்கப்பட்ட சாதியினர். அதைவிட பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்கள். தம்மைத் தாமே அடிமைகளாக விற்றுக் கொள்ள தயாராக இருந்தவர்கள். 

இவ்வாறு மூன்று வர்க்கப் பிரிவுகளாக மலையகம் இருந்தது. இவர்களுக்குள் இணக்கப்பாடுகள் மட்டுமல்ல முரண்பாடுகளும் இருந்தன. அவற்றைப் பற்றி பேசாமல் மூடி மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் கடந்த கால வர்க்கப் போராட்ட  வரலாற்றை முற்றிலுமாக இருட்டடிப்பு செய்து விட்டு இனவாதக் கண்ணோட்டத்தில் வரலாற்றை திரிபுபடுத்துவது  அதிகார வர்க்க ஒத்தோடித்தனம் அல்லாமல் வேறென்ன? இதைத் தான் தமிழ்த் தேசியம் காலாகாலமாக செய்து கொண்டிருக்கிறது.

Monday, April 15, 2024

"இராணுவத்திற்கு ஆள் சேர்த்துக் கொடுத்த ஜே.வி.பி!" நடந்தது என்ன?

ஜேவிபி க்கு எதிராக தமிழ் தரப்பில், தமிழ் வலதுசாரிகள், முன்வைக்கும் குற்றச்சாட்டு: "யுத்தம் நடந்த காலத்தில் ஜேவிபி யினர் கிராமம் கிராமமாக பிரச்சாரமும் செய்து இராணுவத்திற்கு ஆள் சேர்த்து கொடுத்தனர்!" 

இந்த குற்றச்சாட்டை வைப்பவர்கள் கூட அதை இனவாதக் கண்ணோட்டத்தில் தான் சொல்கிறார்கள். 

1. புலிகளின் காலத்தில், அவ‌ர்களது பிரச்சாரங்களில், "இராணுவம் என்பது தமிழர்களின் இரத்தம் குடிக்க காத்திருக்கும் காட்டேரிகள்" என்று தான் சித்தரிக்கப்பட்டது. உ‌ண்மையான விடுதலைப் போராட்டம் என்றால் இராணுவத்தை வென்றெடுக்க வே‌ண்டு‌ம். ஆனா‌ல் அதை விடுத்து தமிழர்களுடன் எந்தப் பகைமையும் காட்டாத இராணுவ வீரர்களையும் எதிரிகள் ஆக்கியது தான் புலிகளின் "சாதனை". 


2. வி.பு. தலைவர் பிரபாகரன் "துப்பாக்கிக் குழலிருந்து அதிகாரம் பிறக்கிறது" என்ற மாவோவின் மேற்கோளை சொல்லிக் காட்டுவார். அவர் உண்மையில் மாவோ எழுதிய "தேர்ந்தெடுத்த இராணுவப் படைப்புகள்" என்ற நூலை வாசித்து அறிந்து இருந்தால், சிறிலங்கா இராணுவத்தை தமிழர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக மாற்றுவதன் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டிருப்பார். இந்த விஷயத்தில் புலிகள் விட்ட தவறை ஜேவிபி பயன்படுத்தி கொண்டது. 


3. ஜேவிபி தொடர்பான குற்றச்சாட்டில் ஒரு விஷயத்தை கவனிக்கவும்: "கிராமம் கிராமமாக இராணுவத்திற்கு ஆள் சேர்த்தார்க‌ள்." கவனிக்கவும்: நகரம் நகரமாக அல்ல "கிராமம் கிராமமாக". இலங்கையின் கிராமங்கள் பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கி இருப்பதால், வேலைவாய்ப்பு குறைவாக இருப்பதால் அங்குள்ள இளைஞர்களுக்கு  இராணுவத்தில் சேர்வது வறுமையில் இருந்து மீள்வதற்கு ஒரு தெரிவாக உள்ளது. 


4. ஜேவிபி அன்று நடந்த போரை பயன்படுத்தி தனக்கு ஆதரவான ஆட்களை இராணுவத்திற்குள் சேர்த்து விட்டால் பிற்காலத்தில் உதவும் என்று கணக்குப் போட்டதில் தப்பில்லை. ஆ... வந்து... என்று இழுப்பவர்கள் பிரபாகரன் மேற்கோள் காட்டிய மாவோவின் படைப்புகளை வாசித்து விட்டு வாருங்கள். அரச இயந்திரமான இராணுவத்தை கொள்கை ரீதியாக வென்றெடுப்பது விடுதலைப் போராட்டத்தில் அரைவாசி வெற்றியை அடைந்ததற்கு சமன். தற்போது இராணுவத்திற்கு உள்ளே ஜேவிபி ஆட்கள் இருப்பதால் எதிர்காலத்தில் அரசு ஜேவிபி யை ஒடுக்கி அழிப்பது மிக கடினமாக இருக்கும். 


5. வழமையாக ஜேவிபி புலிகளை எதிர்த்து ஏதாவது பேசி விட்டால் அதை தமிழர்களுக்கு எதிராக பேசியது போன்று திரித்து செய்தி வெளியிடுவது வலதுசாரி தமிழ் ஊடகங்களின் வாடிக்கை. பெரும்பாலான தமிழர்களுக்கு சிங்களம் தெரியாது. அதனால் யாரும் ஆராய மாட்டார்கள் என்பது அவர்களது நம்பிக்கை. சுனாமி கட்டமைப்பு ஒப்பந்தம் அந்நிய நிதி உதவி மூலம் புலிகளை பலப் படுத்தி விடும் என்று ஜேவிபி எதிர்த்தது. ஆனால் அதை தமிழர்களுக்கு எதிரானதாக தமிழ் ஊடகங்கள் சித்தரித்தன. 

1989 ம் ஆண்டு நடந்த ஜேவிபி அழித்தொழிப்பில் புலிகள் அரச படையினருடன் கூட்டுச் சேர்ந்து ஈடுபட்டனர். தமிழ்த் தேசியவாதிகளுக்கு புரியும் மொழியில் சொன்னால் "அன்று புலிகள் ஒட்டுக் குழுவாக செயற்பட்டு இனப் படுகொலையில் பங்கெடுத்தனர்!" 

அதன் விளைவு: பழிக்கு பழி வாங்குவது மாதிரி பிற்காலத்தில் புலிகளை அழிக்க ஜேவிபி அரச படையினருடன் ஒத்துழைத்தது. இதை சரியென்று சொல்ல வரவில்லை. மேலே வீசுவது தான் கீழே வரும். நீங்கள் மற்றவர்களுக்கு என்ன செய்கிறீர்களோ, அதே தான் உங்களுக்கு திருப்பிக் கிடைக்கும்.

Thursday, February 15, 2024

யாழ்ப்பாணத்தில் தீண்டாமை மதில் சுவர்!

"பிரபாகரன் மண்" என அழைக்கப்படும் தமிழீழத்தில் தொடரும் தீண்டாமைக் கொடுமைகள்!!

*****

யாழ் குடாநாட்டில் வட மேற்கு முனையில் உள்ள கீரிமலையை  அண்டிய நிலப் பகுதிகள், போர் முடிந்த பின்னர் இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்கப் பட்டன. அவ்வாறு விடுவிக்கப்பட்ட  பகுதி ஒன்றில் உருவான "நல்லிணக்கபுரம்" என்ற பெயரிலான புதிய கிராமத்தை சுற்றி, ஆதிக்க சாதியினர் 15 அடி உயரத்தில் தீண்டாமை மதில் சுவர் கட்டி எழுப்பி உள்ளனர். காரணம்: அங்கு வாழ்பவர்கள் ஒடுக்கப்பட்ட தலித் சாதியை சேர்ந்த மக்கள். 

மயிலிட்டி போன்ற காரையோர பிரதேசங்களில் இருந்து போர் காரணமாக 30 வருடங்கள் இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்த தலித் மக்கள், அந்த புதிய கிராமத்தில் மைத்திரிபால ஆட்சிக் காலத்தில் மீள் குடியேற்றம் செய்யப் பட்டனர். அந்த இடத்தில் ஏற்கனவே ஒரு சைவக் கோயில் இருந்துள்ளது. ஆனால் அங்கு இந்த ம‌க்களை வழிபட அனுமதிப்பதில்லை. அது மட்டுமல்ல தாழ்த்தப்பட்ட சாதியினரின் வாடை கூட படக் கூடாது என்பதற்காக கோவிலுக்கும், கிராமத்திற்கும் நடுவில் 15 அடி உயரத்தில் மதில் சுவர் கட்டியுள்ளனர். 

நல்லிணக்கபுரத்தில் குடியேறிய ஒடுக்கப்பட்ட தலித் மக்களில் கணிசமான அளவில் கிறிஸ்தவர்களும் உள்ளனர். ஆகவே அவர்கள் கட்டிய கிறிஸ்தவ தேவாலயத்தில் சைவ சமயத்தவர்கள் ஒற்றுமையாக வழிபட்டு வருகின்றனர். இது சிவ சேனை போன்ற இந்துத்துவா சங்கிகளின் கண்களை உறுத்தியது.  கீரிமலையை அண்டிய பகுதி என்பதால், "இந்துக்களின் புனித பூமிக்குள் கிறிஸ்தவ மதவாதிகளை அனுமதிக்காதீர்கள்" என்று போஸ்டர் அடித்து ஒட்டி பிரச்சாரம் செய்தனர். அவர்களுக்கு பிரதேச சபையிலும் செல்வாக்கு இருப்பதால் அவர்களிடம் முறையிட்டு, "சட்டவிரோதமாகக் கட்டிய" தேவாலயம் உடைக்கப்பட வேண்டும் என அச்சுறுத்தி  வருகின்றனர். இதற்குள் சைவமும் சாதியமும் கைகோர்த்து செயற்படுகின்றன. 

இதை விட தலித் சமூகத்தில் இறந்தவர்களை அருகில் உள்ள மயானத்தில் தகனம் செய்யும் அனுமதியும் மறுக்கப் பட்டு வருகின்றது. குடியிருப்புக்கு மிக அருகில், 50 மீட்டர் தூரத்தில் உள்ள மயானத்தை ஆதிக்க சாதி பிணங்களை எரிக்க பயன்படுத்துவதால், தலித் மக்கள் உள்நுழைய அனுமதிப்பதில்லை. ஆகவே அவர்கள் பிணத்தை காவிக் கொண்டு ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மயானத்திற்கு செல்ல வேண்டி உள்ளது. இது குறித்து உள்ளூராட்சி சபையில் முறையிட்டும் எந்தப் பயனும் இல்லை. இதற்குள் சாதிப் பிரச்சினை இருப்பதாக அவர்களே வெளிப்படையாக சொல்கின்றனர். தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகளின் பிரதிநிதிகள் தான் உள்ளூராட்சி சபையில் உள்ளனர். அவர்களே பகிரங்கமாக ஒத்துக் கொண்டாலும், இந்த விஷயம் குறித்து எந்தவொரு தமிழ் ஊடகமும் தெரிவிக்காமல் இருட்டடிப்பு செய்து வருகின்றன. 


யாழ் தீண்டாமை மதில் சுவர் தொடர்பாக அங்கு வாழும் மக்கள் வழங்கிய வாக்குமூலம்:

https://youtu.be/3BQJ8eg0sIc?si=5rDfYm80AWmk0nfh

Sunday, January 28, 2024

புதுக்குடியிருப்பில் வெள்ளாள பேரினவாதிகள் நில ஆக்கிரமிப்பு!



பிரபாகரன் குடியிருந்த புதுக்குடியிருப்பு பகுதியில் வெள்ளாள பேரினவாதிகள் நில ஆக்கிரமிப்பு! 
தமிழ்த் தேசிய அரசியல் தலைவர்கள் பாராமுகம்!
****************
தலித் மக்களின் விவசாய நிலம் அபகரிப்பு! 
தமிழ் ஊடகங்கள் இருட்டடிப்பு!
****************

வன்னியில், புதுக் குடியிருப்பு பகுதியில், ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் வாழும் மந்துவில் என்ற கிராமம் வெள்ளாள பேரினவாதிகளின் நில ஆக்கிரமிப்பு காரணமாக "சிவ நகர்" என்று பெயர் மாற்றப் படும் அபாயம் காணப் படுகிறது. நிலத்தை அபகரித்து 
சிவன் கோயில் கட்டி, அதை விஸ்தரித்து வருகின்றனர்.

குறிப்பாக இந்துக்கள் வாழாத ஓர் இடத்தில் (மந்துவில் மக்கள் பெரும்பாலும் கிறிஸ்தவர்கள்), திடீரென சிவன் கோயில் கட்ட வேண்டிய தேவை என்ன? இது இந்து ஆலயத்தின் பெயரால் நடக்கும் நில ஆக்கிரமிப்பு அல்லாமல் வேறென்ன? அதாவது, அங்கிருந்த மணற் கேணி என்ற மிகப்பெரிய குளத்தினை மணல் இட்டு நிரப்பி, அதை ஒரு குட்டையாக மாற்றி வருகின்றனர். இதனால் நீர்ப் பாசனத்திற்காக குளத்தை நம்பியிருந்த சுமார் 90 ஏக்கர் விவசாய நிலம் வறட்சி வந்தால் தரிசாக மாறும் அபாயம் காணப்படுகிறது. அதை நம்பி வாழ்ந்த ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 

உண்மையில் ஒடுக்கப்பட்ட மக்கள் விவசாயம் செய்து தன்னிறைவு அடைய விடாமல் தடுத்து, அவ‌ர்களை தமது கூலி அடிமைகளாக வைத்திருப்பது தான் வெள்ளாள பேரினவாதிகளின் நோக்கமாக உள்ளது. இலங்கையில் சுதந்திரம் அடைந்த காலம் வரையில், வடக்கில் வெள்ளாளர் வயல்களில் வேலை செய்யும் கூலித் தொழிலாளர்களாக பள்ளர் இருந்தனர். அதை மீண்டும் கொண்டு வரும் நோக்கம் வெள்ளாள பேரினவாதிகள் மனதில் இருக்கலாம். 
இது சாதி ஒடுக்குமுறையின் பெயரால் நடக்கும் ஒரு வர்க்கப் பிரச்சனை. காலங்காலமாக நடந்து வருகிறது.

சிங்களப் பேரினவாதிகளின் நில ஆக்கிரமிப்புக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? அவர்கள் புத்த விகாரை கட்டினால் இவர்கள் சிவன் கோயில் கட்டுகிறார்கள். அது மட்டுமே வித்தியாசம். மற்றும் படி இரண்டுமே நில அபகரிப்பு தான். 

வெள்ளாள பேரினவாதிகள் நில அபகரிப்பு செய்யும் மந்துவில் கிராமத்தில் இருந்து, சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குருந்தூர் மலையில், சிங்களப் பேரினவாதிகள் விகாரை கட்டிய நேரம், தீவிர தமிழ்த்தேசியக் கட்சியான TNPF பெரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. "எமது தாயக நிலம் பறிபோகிறது" என்று கோஷம் இட்டனர். அந்த செய்திகளை ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன. ஆனால் அதே அரசியல்வாதிகளும், ஊடகங்களும் மந்துவில் பக்கம் எட்டியும் பார்க்கவில்லை! 

ஏனிந்த பாரபட்சம்? ஏனென்றால் இங்கே ஆதிக்க சாதி அபிமானம் மேலோங்கி உள்ளது. சிங்களவர் செய்யும் அதே ஆக்கிரமிப்பு தான் வெள்ளாளர் செய்கின்றனர். அது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் எந்த ஊடகமும் அதைக் கண்டு கொள்ள மாட்டாது. 

வட இலங்கையில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களும் சாதியால் உயர்த்தப்பட்ட வெள்ளாளர்கள் தான். அதனால் அவர்களது மனதிலும் சாதிவெறி இருக்கும். தேர்தலில் ஓட்டு பிச்சை கேட்டு தலித் மக்களின் வீட்டுக் கதவுகளை தட்டுவார்கள். ஓட்டு போட்ட பின்னர் மறந்து விடுவார்கள். மந்துவில் கிராம மக்கள் நில ஆக்கிரமிப்பு குறித்து அரசியல் தலைவர்களிடம் முறைப்பாடு செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணம் என்ன? இத்தனைக்கும் தமிழரசு கட்சித் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அந்த தொகுதியில் இருந்து தான் தெரிவானார். 

நில ஆக்கிரமிப்பு தொடர்பாக மந்துவில் மக்கள் அரச அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. கவனிக்கவும்: தமிழ்த் தேசியவாதிகள் குற்றம் சாட்டும் அதே சிங்கள அரசின் அதிகாரிகளாக இருப்பவர்கள் தமிழர்கள்! ஆனால் சாதியால் வெள்ளாளர்கள். அதனால் அவர்களும் தமது சாதியின் பக்கமே நிற்பார்கள். இலங்கையில் சிங்களப் பேரினவாதமும், தமிழ்- வெள்ளாள பேரினவாதமும் அடிப்படையில் ஒன்று தான். 

Source: