Friday, August 20, 2010

மேற்குலகின் இஸ்லாமிய எதிர்ப்பு பெண்ணியம்

ஆம்ஸ்டர்டாம் நகரில் வெளிநாட்டுப் பிள்ளைகள் கல்வி கற்கும் இடைநிலை தொழில்நுட்பக் கல்லூரி. சுமார் எட்டு வருடங்களுக்கு முன்னர் நான் அங்கே அலுவலகப் பணியாளராக வேலை செய்து கொண்டிருந்தேன். ஒரு நாள் வேலைக்கு வரும் போது வாசலில் போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஒரு பாடசாலைக்கு போலிஸ் பாதுகாப்பளிப்பதை அப்போது தான் பார்க்கிறேன். கல்லூரியின் பெண் நிர்வாகிக்கு தொலைபேசி மிரட்டல்கள் விடுக்கப்பட்டதால், அந்த ஏற்பாடு என்று பின்னர் அறிந்து கொண்டேன். மிரட்டல்களுக்கு காரணம் இரண்டு மாணவிகளின் தற்காலிக இடைநிறுத்தம். அந்த மாணவிகள் செய்த குற்றம், பாடசாலைக்கு முகத்தை மூடும் பர்தா அணிந்து வந்தது தான். விடுமுறைக்கு மொரோக்கோ சென்ற இஸ்லாமிய மதப்பற்றுள்ள மாணவிகள், பாடசாலை தொடங்கிய போது "விசித்திரமான கருப்பு ஆடை" அணிந்து வந்தார்கள்.

ஆம்ஸ்டர்டாம்வாசிகள் பலருக்கு கூட எமது கல்லூரியின் பெயர் தெரியாது. ஆனால் பர்தா விவகாரம் நாடு முழுவதும் பேச வைத்தது. "பொது இடங்களில், பாடசாலையில் பர்தா அணிய அனுமதிக்கலாமா?" என்று ஊடகங்கள் அனல் பறக்கும் விவாதம் செய்து கொண்டிருந்தன. எமது அலுவலகத்தின் உள்ளேயும் அது குறித்த பேச்சு அடிபட்டது. மதிய உணவு இடைவேளையின் பொழுது, பர்தா அணிவதன் சாதக,பாதகங்கள் குறித்து விவாதித்தார்கள். எனது சக - ஊழியர்களில் பெரும்பான்மையானோர் வெளிநாட்டவர்கள். லத்தீன் அமெரிக்காவை சேர்ந்த கறுப்பினப் பெண்மணி, "பர்தா மாணவிகள்" ஆரம்ப வகுப்பு ஆசிரியைகளாக பயிற்சி எடுப்பதை குறிப்பிட்டு விமர்சித்தார். "இவர்கள் நாளை ஒரு ஆரம்ப பாடசாலையில் வேலைக்கு சேர்ந்தால், குழந்தைகள் பேயைக் கண்டவர்களாக அலறித் துடித்து ஓடுவார்கள்" என்றார். எமது குழுவில் இருந்த மொரோக்கோ, துருக்கியை சேர்ந்த முஸ்லிம் ஊழியர்களும், சம்பந்தப்பட்ட மாணவிகளுக்கு மூளைக் கோளாறு என்றனர். இதற்கிடையில் சர்ச்சையை தோற்றுவித்த மாணவிகள் சில நாட்களில் தோற்றுப்போன நீதிமன்ற வழக்கின் பின்னர், வழமையான உடையில் பாடசாலைக்கு வந்தார்கள்.

2001 செப்டம்பர் 11 க்குப் பிறகு, நெதர்லாந்திலும் இஸ்லாம் ஒரு முக்கிய பிரச்சினை. கடைசியாக நடந்த தேர்தலில் அதிக ஆசனங்களை வென்ற கட்சி ஒன்று (PVV ), முஸ்லிம் நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு குடியேற அனுமதி வழங்கக் கூடாது என்று கூறி வருகின்றது. இருபது வருடங்களுக்கு முன்னர் இது போன்ற கருத்துகளை கூறுபவர்கள் இனவெறியர்களாக முத்திரை குத்தப்பட்டனர். ஆனால் இன்று அவை சாதாரண கருத்துச் சுதந்திரமாக பார்க்கப்படுகின்றது. PVV என்ற இஸ்லாமிய எதிர்ப்பு கட்சியின் வெற்றிக்கு ஊடகங்களும் கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளன. அந்தக் கட்சியின் தலைவர் வில்டர்ஸ் பெரும்பான்மை (வெள்ளையின) நெதர்லாந்துக்காரரின் மனக்குமுறலை பிரதிபலிப்பதாக போற்றப்படுகின்றார்.

உண்மையில் ஐரோப்பாவில் இஸ்லாமிய எதிர்ப்பு, அந்நிய நாட்டு தொழிலாளரின் வருகையோடு தொடங்குகின்றது. ஐம்பதுகளில், அறுபதுகளில் லட்சக்கணக்கான முஸ்லிம் தொழிலாளர்கள் கட்டுமானப் பணிகளுக்காக தருவிக்கப்பட்டனர். இன்று வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் தெற்காசிய தொழிலாளர்களின் நிலையுடன் ஒப்பிடத்தக்கது. ஆனால் ஐரோப்பாவில், காலப்போக்கில் தொழிலாளர்களின் குடும்பங்களை கூட்டி வர அனுமதிக்கப்பட்டது. அவர்கள் வரும் பொழுது தங்களுடன் மதத்தையும், கலாச்சாரத்தையும் எடுத்துக் கொண்டு வந்தார்கள். இதனால் ஐரோப்பியரிடம் இருந்து அந்நியப்பட்ட மக்கள் குழுவொன்று இங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்றது. தமிழ் கலாச்சாரக் காவலர்களைப் போலவே, முஸ்லிம்களும் தமது பெண்களை கலாச்சாரக் காவிகளாக வைத்திருக்க விரும்புகின்றனர். ஐரோப்பியர்கள் அதனை வேறு விதமாக புரிந்து கொள்கின்றனர். "முஸ்லிம் குடும்பங்களில் ஆண்கள் பெண்களை அடக்கி வைத்திருப்பதன் வெளிப்பாடு தான் முக்காடு." முஸ்லிம் பெண்கள் அணியும் தலையை மூடும் முக்காடு பற்றிய சராசரி ஐரோப்பியரின் புரிதல் அது.

ஐரோப்பாவில் இப்போதெல்லாம் முஸ்லிம் பெண்களுக்கு சம உரிமை வழங்குவது குறித்து அதிகம் பேசுகிறார்கள். இந்த "நவீன பெண்ணிய" சிந்தனை, பல வெள்ளையின ஆண்களையும் ஆட்கொண்டுள்ளது. ஐரோப்பிய பெண்கள் எப்போதோ சம உரிமை பெற்று விட்டதாகவும், தாம் இப்போது முஸ்லிம் பெண்களின் உரிமைக்காக போராடுவதாகவும் நினைத்துக் கொள்கின்றனர். முஸ்லிம் குடும்பங்களில் கணவன்மார் தமது மனைவிகளை அடித்து வதைப்பதாக தொலைக்காட்சியில் தனியான நிகழ்ச்சி ஒளிபரப்புகிறார்கள். அதே நேரம், வெள்ளையின குடும்பங்களுக்குள்ளும் கணவன் மனைவியை அடிக்கும் பிரச்சினை இருப்பது குறித்து பேசப்படுவதில்லை. அதே போலத் தான், சமபாலுறவுக்காரரின் உரிமைகள் பற்றிய கதையாடல். முஸ்லிம் சமூகத்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் தாக்கப்பட்டால் அது செய்தி. அதற்காக வெள்ளையினத்தவர்கள் எல்லோரும் அவர்களுக்கு மரியாதை கொடுக்கிறார்கள் என்று அர்த்தமல்ல. இன்றைக்கும் ஓரினச்சேர்க்கையாளரை வெறுக்கும் வெள்ளையர்கள் சந்தர்ப்பம் கிடைத்தால் தாக்குகிறார்கள். கிறிஸ்தவ பாடசாலைகளில் ஓரினச் சேர்க்கையாளர்கள் அவமதிக்கப்படுகினறனர். மேலும் இது போன்ற பிரச்சினைகள், இங்கு வாழும் இந்து, பௌத்த மதங்களை பின்பற்றும் சமூகங்களிலும் காணப்படுகின்றன. ஆனால் அதைப் பற்றி எந்த ஊடகத்திற்கும் அக்கறை இல்லை.

அதி உன்னத நாகரிக வளர்ச்சியடைந்த நெதர்லாந்தில் SGP என்றொரு கிறிஸ்தவ கட்சி இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்னர் வரை அந்தக் கட்சியில் பெண்கள் உறுப்பினராக சேர முடியாது என்ற விதி இருந்தது. தற்போது அதனை தளர்த்திய போதிலும், தேர்தலில் பெண்கள் வேட்பாளராக நிற்க தடை உள்ளது. "ஏனெனில் பெண்கள் அரசியலுக்கு லாயக்கற்றவர்கள். கணவனுக்கு பணிவிடை செய்வதும், பிள்ளை பராமரிப்பதும் ஒரு நல்ல கிறிஸ்தவ பெண்மணியின் கடமை." இவ்வாறு தான் SGP தலைமை பிற்போக்காக சிந்திக்கிறது. இந்த நாட்டில் முஸ்லிம் பெண்கள், துப்பரவுப் பணியாளர்களாக குறைந்த ஊதியம் பெறும் தொழில் செய்கிறார்கள். அவர்களது ஊதிய உயர்வுக்காக பெண்ணியவாதிகள் போராட மாட்டார்கள். கணவனால் துன்புறுத்தப்பட்ட முஸ்லிம் பெண்கள் அடைக்கலம் கிடைக்காமல் அல்லல் படுகின்றனர். அரசு அதற்கான நிதி ஒதுக்கீடு எதுவும் செய்யவில்லை. ஆனால் பெண்ணியம் பேசும் இஸ்லாமிய எதிர்ப்பு வலதுசாரி அரசியல்வாதிகள், முஸ்லிம் பெண்களின் முக்காடுகளையும், பர்தாக்களையும் கழற்றுவதில் மட்டுமே குறியாக இருக்கின்றனர்.

5 comments:

Mohamed Faaique said...

அவர்களின் கூட்டம் சீரழிந்து விட்டது.. அடுத்தவர்கள் கண்ணியமாக வாழ்வதை பார்க்க பிடிப்பதில்லை.

Anonymous said...

//அவர்களின் கூட்டம் சீரழிந்து விட்டது.. அடுத்தவர்கள் கண்ணியமாக வாழ்வதை பார்க்க பிடிப்பதில்லை.//

யார் சீரழிந்தார்கள்? யார் கண்ணியமாக வாழ்கிறார்கள்? எல்லோருக்கும் தங்களை நல்லவர்களாகக் காட்டிக் கொள்வதில் ஆர்வம்தான். ஆனால் உண்மை அப்படியில்லை. எல்லா இடத்திலும் சீரழிவும் வெறித்தனமும்தான் உள்ளது.

Anonymous said...

இதே போல் முஸ்லிம் நாடுகளிலும் அனேக அநியாயங்கள் நடக்கின்றவவே.. அதையும் பற்றி விரிவாக எழுதுங்களேன். உங்கள் பதிவுகள் எல்லாம் எங்கும் வாசித்தறியாத பதிவுகள். மிகவும் அருமை. ஆனால் ஒட்டுமொத்தமாக கிருஸ்தவர்களை அடிப்படையில் தாக்குதாவக இருக்கிறதன் காரணம்? நான் பிறப்பில் சைவம். தற்போது எந்த மதமும் கிடையாது. அனைத்து மதங்களுமே மக்களை வெறியர்கள் ஆக்குகின்றன என்பது என் கனிப்பு.
காட்டான்.

Kalaiyarasan said...

//இதே போல் முஸ்லிம் நாடுகளிலும் அனேக அநியாயங்கள் நடக்கின்றவவே.. அதையும் பற்றி விரிவாக எழுதுங்களேன்.//
இதற்கு ஏற்கனவே ஒரு பதிவில் பதிலளித்து இருக்கிறேன். நான் ஒரு கிறிஸ்தவ நாட்டில் (நெதர்லாந்து) வாழ்கிறேன். இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் கிறிஸ்தவர்கள். அரசியல் சிந்தனைப் போக்கிலும் கிறிஸ்தவ ஆதிக்கம் அதிகம். அதனால் நான் வாழும் நாட்டில், என்னை சுற்றி நடப்பதை எழுதுவதில் என்ன தவறு? நான் இஸ்லாமிய நாட்டில் வாழ்தால் நீங்கள் கேட்பது போல அங்கு நடப்பனவற்றை பதிவு செய்யலாம். இருப்பினும் இஸ்லாமிய மதத்தின் தவறான கொள்கைகளை பல பதிவுகளில் எழுதியிருக்கிறேன். அவற்றையும் வாசித்து பாருங்கள். அப்போதெல்லாம் அந்தப் பதிவுகள் முஸ்லிம்களை தாக்குவதாக இருப்பதாக உங்களைப் போல பலர் கருத்து தெரிவித்துள்ளனர். எல்லோரையும் எல்லா நேரமும் திருப்திப் படுத்த முடியாது.

Anonymous said...

உலகின் நீதி இதுவாகத்தான் உள்ளது. இஸ்லாமியன் தவறு செய்பவனாகவே காட்டபடுகிறது. உதாரணம் ஃபர்தா. அது பெண்ணை கண்ணியப்படுத்துமே தவிற அடிமைப்படுத்துவது கிடயாது.