Tuesday, June 28, 2011

"சாப்மி" : சாமிகளின் நாடு - ஓர் அறிமுகம்

வட ஐரோப்பாவின் பூர்வ குடிகளான சாமி இன மக்களின் தாயக பூமி, நான்கு நாடுகளின் எல்லைகளால் பிரிக்கப் பட்டுள்ளது. இன்று வரை, சாமி மக்களுக்கென்று தனியான நாடு கிடையாது. சாமி மக்கள் உரிமை கோரும் சாப்மி நாட்டை, ஐ.நா. அங்கீகரிக்கக் கோரி யாரும் போராடியதும் இல்லை. கடந்த 600 வருடங்களாக ஒடுக்கப்பட்ட இனம். ஒரு காலத்தில், அந்த மக்கள் தமது தனித்துவமான மொழியைப் பேசுவது கூட தடை செய்யப் பட்டிருந்தது. இன்றைய ஜனநாயக அரசுகள், கலாச்சார சுதந்திரம் வழங்கியுள்ளன. இருந்தாலும், பெரும் வணிக நிறுவனங்கள் அந்தப் பிரதேச வளங்களை சுரண்டுவதை தடுக்கவில்லை. ஐரோப்பாவின் அடக்கப்பட்ட சிறுபான்மை இனங்களில் ஒன்றான சாமிகளைப் பற்றிய சிறிய அறிமுகம் இது.

நோர்வே, சுவீடன், பின்லாந்து மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் வட துருவத்தை அண்டிய பகுதிகளில் சாமி இன மக்கள் வாழ்கின்றனர். ஒரு காலத்தில் இந்தப் பகுதிகளில் பெரும்பான்மையினராக வாழ்ந்த சாமிகளின் வாழ்விடம், வந்தேறு குடிகளால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது. இன்று வளர்ச்சி குன்றிய, மனித நடமாட்டம் குறைந்த ஆர்க்டிக் வட்டத்திற்குள் மட்டும் சிறுபான்மை இனமாக வாழ்கின்றனர். அந்தப் பகுதிகளைச் சேர்ந்த நகரங்களில் பெரும்பான்மையின சமூகம் குடியேறி வருகின்றது. பூர்வ குடிகளான சாமிகள், நாட்டுப்புறங்களில் மட்டும் ஒதுங்கி வாழ்கின்றனர். ஸ்கண்டிநேவிய நாடுகளின் கடந்த ஆயிரம் ஆண்டு கால வரலாற்றில், ஒரு சிறுபான்மை இனத்தின் இருப்பு மறைக்கப் பட்டு வந்துள்ளது. இன்றும் கூட, அந்த நாடுகளின் மக்கள் ஒரே தேசிய மொழியை பேசுவதாகத் தான் வெளியில் உள்ள மக்கள் கருதுகின்றனர். மிக அண்மைக் காலத்தில் தான், சாமி மக்களின் கலாச்சார அடையாளங்கள் அங்கீகரிக்கப் பட்டன.

முதன் முதலாக, 12 ம் நூற்றாண்டின் நோர்வீஜிய (அல்லது டேனிஷ்) இலக்கியங்கள் சாமி மொழி பேசும் மக்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளன. நோர்வீஜியர்கள் அவர்களை "பின் (Finn) மக்கள்" என்று அழைத்தனர். தற்போதும் சாமி மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடமுனையில் உள்ள மாகாணம் பின்மார்க் என்று அழைக்கப் படுகின்றது. பின்லாந்து என்ற பெயரும் அவ்வாறே வந்திருக்கலாம். ஏனெனில், சுவோமி என்ற இயற்பெயரைக் கொண்ட பின்லாந்து மக்கள் பேசும் மொழிக்கும், சாமி மொழிக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. அநேகமாக, புராதன காலத்தில் இருந்து நாடோடி சமூகமாக வாழும் மக்கள், தமது பண்டைய மொழியான சாமியை பேசி வந்திருக்கலாம். விவசாய சமூகமாக நாகரீகமடைந்த மக்கள், பின்னிஷ் மொழியை தனியாக வளர்த்தெடுத்திருக்கலாம். மொழியியல் அறிஞர்களால் "பின்னோ-உங்காரிய" மொழிக்குடும்பம் என்று அழைக்கப் படுகின்றது. சாமி மட்டுமல்ல, பின்னிஷ், கரேலியா, எஸ்தோனியா, ஹங்கேரியா போன்ற மொழிகளும் இந்தக் குடும்பத்தை சேர்ந்தவை. பிற ஐரோப்பிய மொழிகளுடன், ஒரு சொல் கூட ஒற்றுமையற்ற தனித்துவமான மொழிகள் அவை. சொற்கள் மட்டுமல்ல, இலக்கண வடிவம் கூட வித்தியாசமானது. அநேகமாக, இன்றைய ஐரோப்பிய சமூகங்களின் வருகைக்கு முன்பு வாழ்ந்த இனங்களாக இருக்கலாம்.

வட ஐரோப்பாவில் வாழும் சாமி மக்களின் மொத்த எண்ணிக்கை 60000 - 100000. அதிலும் பல்வேறு மொழிப் பிரிவுகள் உள்ளன. பொதுவாக, நாடுகளின் எல்லைகள் அவர்களின் வாழ்விடங்களை பிரித்துள்ளன. நோர்வே, சுவீடன், பின்லாந்து நாடுகளில் வாழும் சாமி இன மக்களுக்கு இடையிலான தொடர்புகள் தொடர்ந்தும் பேணப் பட்டு வந்துள்ளன. இவர்கள் தமது மொழிக்கான எழுத்து வடிவத்தை லத்தீன் அடிப்படையில் அமைத்துள்ளனர். அரிச்சுவடியில் சில விசேட வரி வடிவங்களும் உள்ளன. இதற்கு மாறாக, ரஷ்யாவை சேர்ந்த சாமிக்களின் மொழி, ரஷ்ய எழுத்துக்களைக் கொண்டு எழுதப் படுகின்றது. முன்பு பனிப்போர் காரணமாக, அவர்களுடனான உறவு துண்டிக்கப் பட்டிருந்தது.

குளிர்காலத்தில், - 40 பாகை செல்சியஸ் வரை உறையும் காலநிலைக்கு ஏற்றவாறு, சாமி மக்கள் வாழப் பழகியுள்ளனர். "லவ்வு" என அழைக்கப்படும் எளிமையான கூடாரங்களே அவர்களது வாழ்விடங்கள். அந்தப் பிரதேசத்தில் மட்டும் காணப்படும் துருவ மான் (Reindear) வளர்ப்பு தான், அவர்களது வாழ்க்கைக்கு ஜீவநாடி. மான் பிடிப்பது எப்படி என்று, சிறு குழந்தையில் இருந்தே கற்றுக் கொடுக்கிறார்கள். நமது ஊரில் மாடு வளர்ப்பதைப் போல, இவர்கள் துருவ மான்களை பிடித்து பட்டிகளில் அடைத்து வளர்ப்பார்கள். அந்த விலங்கினத்தின் இறைச்சி, பால், உணவாகப் பயன்படுகின்றது. அதன் தோலை எடுத்து, குளிருக்கேற்ற உடையாகவும், காலணியாகவும், அல்லது படுக்கை விரிப்பாகவும் தயாரிக்கின்றனர். சுமார் ஆறு மாத காலம், பனியால் உறைந்து போயிருக்கும் நிலத்தில் போக்குவரத்திற்கும் மான் பயன்படுகின்றது. பனியில் சறுக்கும் வண்டிலை மான்கள் இழுத்துச் செல்லும். நீங்கள் அனைவரும், கிறிஸ்துமஸ் தாத்தாவின் ஓவியத்தை பார்த்திருப்பீர்கள். உண்மையில் துருவப் பகுதி பழங்குடியினரான சாமி மக்களின் அடையாளம் தான் அது. கிறிஸ்துமஸ் தாத்தாவை சர்வதேச வணிகச் சின்னமாக்கிய ஐரோப்பியர்கள், அவரின் "உறவுக்கார சாமிகளை" அடக்கி ஒடுக்கினார்கள்.

முன்பு சோவியத் யூனியன் இருந்த காலத்தில் ரஷ்ய சாமிகள், கூட்டுறவுப் பண்ணைகளில் மான்களை வளர்க்குமாறு வற்புறுத்தப் பட்டனர். சாமிக்களின் சமுதாயம் ஓரளவு பொதுவுடமைப் பொருளாதாரம் சார்ந்தது. இருப்பினும் சில வேறுபாடுகளும் இருக்கவே செய்தன. குறிப்பாக நாடோடி வாழ்க்கை கட்டுப்படுத்தப் பட்டது. ஓரிடத்தில் நிலையாக தங்க வைக்கப்பட்டனர். பண்ணையின் வருமானத்தின் ஒரு பகுதி அரசுக்கு கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால் அதற்கு பிரதியுபகாரமாக, முதன் முறையாக சாமியின பிள்ளைகள் படிப்பதற்கு பாடசாலைகள் கட்டப்பட்டன. சோவியத் வீழ்ச்சியின் பின்னர் வந்த முதலாளித்துவ அரசு, பண்ணைகளுக்கு சொந்தம் கொண்டாடியது. தனியாருக்கு விற்பதாக அறிவித்தது. ஆனால், சாமி இனத்தவரின் கம்பனிகள் கேட்ட பொழுது அதிக விலை கூறியது. அதே நேரம், ரஷ்ய இனத்தவர்களுக்கு குறைந்த விலைக்கு விற்றது. இன்றைய ரஷ்யாவில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சாமி மக்கள், மதுவுக்கு அடிமையாகவுள்ளனர். சாமி பிரதேசத்தில் பெரிய நகரமான மூர்மன்ஸ்கில் அவர்களின் எண்ணிக்கை 1 % மட்டுமே! கனிம வளத்தை உறிஞ்சும் பெரு நிறுவனங்கள் சாமிகளின் பிரதேசத்தில் முற்றுகையிட்டுள்ளன. அதனால் சுற்றுச் சூழல் பாதிக்கப் படுகின்றது.

பனிப்போர் காலத்தில் சாமிகளின் வாழ்விடம், இராணுவ கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்ந்தது. எல்லைக்கு அப்பால் இருந்த நோர்வே நேட்டோ கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்தது. இதனால் சோவியத் படைகள் அங்கே நிலை கொண்டிருந்தன. ரஷ்ய எல்லையோரம் உள்ள நோர்வேயின் சாமி பகுதியில் நேட்டோ படைகள் தளம் அமைத்துள்ளன. புவி வெப்பமடைதல் காரணமாக, துருவப் பகுதியில் புதிதாக பெட்ரோலிய, எரிவாயு வளங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இதனால் எதிர்காலத்தில் சாமிகளின் தாயகப் பகுதியில் எண்ணைக் கிணறுகள் தோண்டப்படும். இதில் கிடைக்கும் வருமானம் நேரடியாக சாமி மக்களுக்கு போய்ச் சேரும் என்று எதிர்பார்க்க முடியாது. ஐரோப்பாவின் பணக்கார நாடான நோர்வேயிலும், வட பகுதி அபிவிருத்தியில் பின்தங்கியுள்ளது. கரையோரத்தில் மீன்பிடியும், உள்நாட்டில் மான் வளர்ப்புமே, அந்தப் பகுதி மக்களின் வருமானம். மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் தான், வட நோர்வேயின் பொருளாதாரம் சேவைத் துறைக்கு மாறியது. அதன் காரணமாக, சில சாமிகளும் கல்வியறிவு பெற்று முன்னேறினார்கள். ஐம்பதுகளில், அல்லது அறுபதுகளில் சாமி மத்தியதர வர்க்கம் உருவானது. அப்போதிருந்து சாமி தேசியவாதமும் வளர்ந்தது. ஒன்றிணைந்த சாமி மக்களின் தேசத்திற்கு "சாப்மி" (Sápmi) என்று பெயரிடப் பட்டது. அதற்கென தனியான தேசியக்கொடியும் உருவானது.

1987 ல், நோர்வே அரசு சாமி பாராளுமன்றம் அமைக்க அனுமதி வழங்கியது. வட நோர்வேயில் கரஷோக் நகரில் அமைந்துள்ள பாராளுமன்றம் Sámediggi என்று அழைக்கப் படுகின்றது. நோர்வேயை பின்பற்றி, சுவீடனும், பின்லாந்தும், சாமி மக்களை தேசிய இனமாக அங்கீகரித்து பாராளுமன்றம் அமைத்துக் கொடுத்தன. இருப்பினும் இந்தப் பாராளுமன்றங்கள், தொலைக்காட்சி கமேராக்களுக்கு முன்னால் நடக்கும் விவாத மேடையாக மட்டுமே செயற்படுகின்றன. பெரிதாக அதிகாரப் பரவலாக்கல் எதுவும் நடக்கவில்லை. இன்று சாமி பிரதேசங்களில், ஆரம்ப பாடசாலைகளில் சாமி மொழியில் கல்வி புகட்டப் படுகின்றது. நோர்வேயின் தொலைக்காட்சி தனியாக சாமி மொழி சேவை ஒன்றை நடத்துகின்றது. இது போன்ற கலாச்சார சுதந்திரம் காணப்பட்டாலும், பொருளாதாரத் தேவைகளுக்காக ஆதிக்க மொழியில் பாண்டித்தியம் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் போன்று, ஸ்கண்டிநேவிய நாடுகளுக்கான கூட்டமைப்பு ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கின்றது. அந்தக் கூட்டமைப்பில் டென்மார்க்குக்கு சொந்தமான பாரோ தீவுகள், கிரீன்லான்ட், மற்றும் பின்லாந்துக்கு சொந்தமான ஒலான்ட் தீவுகள் என்பனவற்றிற்கு தனியான சுயாட்சி அதிகாரம் வழங்கப் பட்டுள்ளது. சாமிகளின் சாப்மி தேசத்திற்கு அது போன்ற அந்தஸ்து எதுவும் கிடையாது.

இந்தக் கட்டுரை எழுத உதவிய உசாத்துணை நூல்கள்:

1. The Saami language - An introduction (Pekka Sammallahti)
2. Sámit, sánit, sátnehámit (Suomalais-Ugrilainen Seura,Helsinki)
3. Becoming Visible, Indigenous Politics and Self-Government (Centre for Sami Studies)


இணையத்திலும் மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்:
Sami People
Sami Parliament of Norway

No comments: