Friday, August 19, 2011

சாதியத்தை காப்பாற்றும் யாழ்ப்பாணக் கோயில்கள்

எமது ஊரை சுற்றி, நான்கு திசைகளிலும் நான்கு சைவக் கோயில்கள் இருந்தன. கோயில்களால் சூழப்பட்ட கிராமம் என்பதால், "கடவுள்களால் பாதுகாக்கப்பட்ட பிரதேசம்" என்று இளம் வட்டத்தில் சற்று கிண்டலாகவே பேசிக் கொள்வதுண்டு. ஊருக்குள்ளே கோயில்கள் இருந்தாலும், தாழ்த்தப்பட்ட சாதியினரை அந்தக் கோயில்களுக்குள் நுழைய அனுமதிப்பதில்லை. அவர்கள் வேண்டுமானால், சற்றுத் தள்ளியுள்ள சிவன் கோயிலுக்கும், அம்மன் கோயிலுக்கும் சென்று வழிபடலாம். நகரம் சார்ந்த பகுதிகளில் இருந்த அத்தகைய கோயில்கள் கூட, எழுபதுகளில் தான் அனைத்து சாதியினருக்குமாக கதவுகளை திறந்து விட்டன. அதுவும் "ஈழத்தில் நடைபெற்ற முதலாவது ஆயுதப்போராட்டத்திற்கு" பின்னர் தான். அம்மன் கோயிலில், பொங்கல் பானைக்குள் நாட்டு வெடிகுண்டு கொண்டு சென்று வீசிய, ஈழத்தின் முதலாவது பெண் போராளியும் எமது ஊரைச் சேர்ந்தவர் தான்.

எமது ஊரின் கோயில்களை உயர்சாதியினர் சொந்தம் கொண்டாடியததற்கு பின்புலத்தில் முக்கியமான பொருளாதாரக் காரணி ஒன்றிருந்தது. வறண்ட பிரதேசமான யாழ் குடாநாட்டில், குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. நிலத்தடியில் ஓடும் நல்ல தண்ணீர், கோயில் கட்டப்பட்டுள்ள இடங்களில் தான் காணப்படுகின்றது. கோயிலில் மட்டுமல்ல, கோயிலை சுற்றி அமைந்துள்ள சில உயர்சாதி வெள்ளாளரின் குடியிருப்புகளிலும் நன்னீர்க் கிணறுகள் உள்ளன. மற்ற இடங்களில் கிணறு எவ்வளவு ஆழத்திற்கு தோண்டினாலும், குடிக்க முடியாத உப்புத் தண்ணீர் தான் கிடைக்கும். அந்த வீடுகளில் குடியிருக்கும் துரதிர்ஷ்டசாலிகள், "பொது இடமான" கோயில் கிணற்றுக்கு சென்று குடிநீர் அள்ளி வருவது வழக்கம். இங்கே தான் பிரச்சினை ஆரம்பமாகின்றது. உயர்சாதி வெள்ளாளர்களுக்கு மட்டும் கோயில் கிணற்றில் தாமாகவே தண்ணீர் அல்ல உரிமையுண்டு. தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு அந்த உரிமை கிடையாது. யாராவது ஒரு வெள்ளாளர் தண்ணீர் அள்ளி அவர்களின் குடங்களில் ஊற்ற வேண்டும். அப்போது வாளியும், கையும் குடத்தில் படாதவாறு எட்டத்தில் நின்று தண்ணீர் ஊற்றுவார்கள். தாழ்த்தப்பட்டோர் போகும் நேரத்தில், அந்த இடத்தில் வெள்ளாளர் யாராவது காணப்படா விட்டால், காத்திருக்க வேண்டுமே தவிர, தாமாகவே தண்ணீர் அள்ளி ஊற்றிக் கொள்ள முடியாது. காலங்காலமாக தொடர்ந்த மரபு, 1982 ம் ஆண்டு உடைக்கப்பட்டது.

ஆமாம், யாழ் மாவட்டத்தில் ஈழப்போராட்டம் தீவிரமடைந்திருந்த எண்பதுகளிலும் தீண்டாமை தொடர்ந்தது. தமிழீழ விடுதலைக்காக போராடிக் கொண்டிருந்த இயக்கங்கள், பொலிஸ் நிலையங்களை தாக்கி, காவலர்களை கொன்று, ஆயுதங்களை அபகரித்து சென்றார்கள். துணிச்சலுடன் வங்கிகளை கொள்ளையடித்தார்கள். சமூகவிரோதிகளுக்கு மரணதண்டனை வழங்கினார்கள். ஆனால்.... ஆனால்...தீண்டாமைக் கொடுமையை எதிர்க்கவில்லை. இதுவரை எந்தவொரு சாதிவெறியன் கூட "மரண தண்டனை" விதிக்கப்படவில்லை. தாழ்த்தப்பட்ட மக்கள், தமக்குத் தெரிந்த வழிகளில் அவற்றை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தார்கள். இயக்கங்களிடம் உதவி கேட்டால், "சிங்கள பேரினவாதத்தை எதிர்க்கும் பாரிய பொறுப்பு இருப்பதால், சாதிப்பிரச்சினையை கவனிக்க நேரமில்லை." என்றார்கள். "தமிழீழம் கிடைத்தால் போதும், சாதி தானாகவே மறைந்து விடும்." என்று சிலர் சித்தாந்த விளக்கம் அளித்தார்கள். தமிழ் தேசியக் கட்சிகள் மட்டுமல்ல, ஆயுதபாணி இயக்கங்களும் ஆதிக்க சாதியினரை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. ஒரு சில அரசுசாரா அமைப்புகள் மட்டுமே, தலித் விடுதலைப் போராட்டத்திற்கு உறுதுணையாக நின்றன.

கோயிலில் குடிநீர்த் தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுக்கும் வேலையில் சிலர் இறங்கினார்கள். திடீரென ஒரு நாள், ஊர்க் கட்டுப்பாட்டை மீறிய தாழ்த்தப்பட்ட இளைஞர்கள், கோயில் கிணற்றில் தாமாகவே தண்ணீர் அள்ளிச் சென்றனர். ஊருக்குள் இந்தச் செய்தி பரவியதால், சமூகத்தில் பதற்றம் நிலவியது. உயர்சாதியினர் கோயில் கிணற்றை பகிஷ்கரிக்கும் போராட்டத்தில் இறங்கினார்கள். கோயிலுக்கு அருகில் இருந்த "வெள்ளாளக் கிணறுகளில்" தண்ணீர் அள்ளினார்கள். இதனால், கோயில் கிணறு தாழ்த்தப்பட்டோர் வசம் சென்று விட்டது. "தலித் மக்கள் ஆக்கிரமித்த" கோயில் கிணற்றினுள், சாதிவெறியர்கள் உமி கொட்டி, நீரை மாசு படுத்தினார்கள். நஞ்சூட்டப் பட்டிருக்கலாம் என்றும் வதந்தி பரவியது. இதற்கெல்லாம் அஞ்சாத தாழ்த்தப்பட்ட மக்கள், தாமாகவே கிணற்றை சுத்தப் படுத்தும் வேலையில் இறங்கினார்கள். கிணற்றை தூர் வாரி, நீரிறைத்து பயன்பாட்டுக்கு ஏற்றதாக மாற்றினார்கள். அதற்குப் பிறகும் இரண்டொரு தடவை நீரை மாசுபடுத்தும் ஈனச்செயலில் இறங்கிய உயர்சாதியினர், பின்னர் தாமாகவே விட்டுக் கொடுத்தனர். தற்போது அந்தக் கோயில் கிணறு, நிரந்தரமாக தாழ்த்தப்பட்ட மக்களின் சொத்தாகி விட்டது.

தாழ்த்தப்பட்ட சாதி மக்களின் குடிநீர்ப் போராட்டத்திற்கு, எந்தவொரு தமிழ் தேசிய அரசியல் கட்சியோ, அல்லது இயக்கமோ ஆதரவு வழங்கவில்லை. இடதுசாரிக் கட்சிகளிலும், மனித உரிமை நிறுவனங்களிலும் அங்கம் வகித்த ஆர்வலர்கள் போராட்டக் காலத்தில் முன் நின்றார்கள். அன்றைய காலங்களில், அரசு சாராத அல்லது கட்சி சாராத நிறுவனங்கள் மிகக் குறைவு. "சிறுபான்மைத் தமிழர் மகாசபை" தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருந்தது. சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களை குறிக்கும் "சிறுபான்மைத் தமிழர்" என்று பெயரிடப்பட்ட அமைப்பில், தாராளமயத்தை ஆதரிக்கும் பலர் அங்கம் வகித்தனர். "அறவழிப் போராட்டக் குழு" என்றொரு மனித உரிமை நிறுவனமும் அப்போது தான் ஸ்தாபிக்கப் பட்டிருந்தது. சர்வதேச மட்டத்தில், "சர்வதேச மன்னிப்புச் சபையுடன்" நெருங்கிய உறவைப் பேணியது. இத்தகைய அமைப்புகள், அன்று யாழ் மாவட்டம் முழுவதும் நடந்த தலித் விடுதலைப் போராட்டத்தை, வெறும் மனித உரிமைப் பிரச்சினையாக கருதித் தான் ஆதவளித்தன. சிறுபான்மைத் தமிழர் மகாசபையில் சோவியத் சார்பு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் இருந்துள்ளனர். மேலும் எழுபதுகளில் "ஒடுக்கப்பட்ட மக்களின் ஆயுதப்போராட்டம்" நடத்திய சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சியும் அரசியல் குறிக்கோளுடன் இயங்கி வந்துள்ளது.

1983 , ஆடிக் கலவரமும், அதைத் தொடர்ந்த தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டமும், யாழ்ப்பாண சமூக அமைப்பை தலைகீழாக மாற்றி விட்டது. ஈழத்தமிழரில் பெரும்பான்மையானோர் யாழ் குடாநாட்டில் வாழ்கின்றனர். அதிலும் உயர்சாதி வெள்ளாளர்களே பெரும்பான்மை சாதியினராக உள்ளனர். ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே, அந்த சாதியை சேர்ந்தவர்கள் தான் தமிழ் மேட்டுக்குடியை பிரதிநிதித்துவப் படுத்தினர். அரசியலில், பொருளாதாரத்தில், அரச உத்தியோகங்களில் அவர்களின் பங்களிப்பு அதிகம். அதனால், ஈழப்போர் தொடங்கியவுடன், வெளிநாடுகளுக்கு புலம்பெயர்வது அவர்களுக்கு இலகுவாக இருந்தது. வசதி படைத்தவர்கள் ஒன்றில் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தனர், அல்லது பாதுகாப்பாக கொழும்பு சென்று தங்கினார்கள். ஊரில் எஞ்சியது வசதியற்ற ஏழைகளும், தாழ்த்தப்பட்ட சாதியினரும் தான். ஈழப்போரில் அவர்களது அர்ப்பணிப்பும், தியாகமும் சர்வதேச அளவில் பேசப்பட்டது. அடித்தட்டு மக்களின் பங்களிப்பு புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளது. புலிகளும் அதற்குப் பிரதிபலனாக, வெளிநாடு சென்ற உயர்சாதியினரின் வீடுகளை அபகரித்து, தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு வழங்கியிருந்தனர். அந்த நடைமுறை, புலிகளின் வெளியேற்றத்திற்குப் பிறகு இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட யாழ்ப்பாணத்திலும் தொடர்ந்தது.

2002 ல் ஏற்பட்ட போர்நிறுத்தமும், சமாதான காலகட்டமும் புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயகம் திரும்புவதற்கு வழிவகுத்தது. நீண்ட காலத்திற்குப் பிறகு, தமது ஊருக்கு திரும்பிய உயர்சாதியினர் பலர் அதிர்ச்சியடைந்தனர். அவர்களது வீடுகளில், தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருந்தார்கள். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், காணி உறுதியை காட்டி உரிமை கொண்டாடினார்கள். ஆனால், உள்நாட்டில் வாழ்ந்தவர்களோ ஈழப்போரில் பங்கெடுத்த உரிமையில் பேசினார்கள். ஈழப்போருக்கு நிதி வழங்கியதால், தமக்கே உரிமை அதிகம் என்று, மேலைத்தேய குடியுரிமை பெற்றவர்கள் வாதிட்டார்கள். உயர்சாதியினர் வெளிநாடு சென்ற சமயம், சொத்துக்களை பாதுகாக்குமாறு விட்டு விட்டு வந்த உறவினர்கள், கையறு நிலையில் இருந்தனர். அவர்களால் புலிகளினதும், சிறிலங்கா படையினரதும் அதிகாரத்தை எதிர்க்க முடியவில்லை. இரண்டு எதிரெதிரான ஆயுதமேந்திய சக்திகள், தாழ்த்தப்பட்ட மக்களை யாழ்ப்பாணத்தின் நிரந்தர பிரஜைகளாக அங்கீகரித்து விட்டிருந்தன.

யாழ் குடாநாட்டில், அல்லது வட மாகாணத்தில், உயர்சாதி அல்லது பிற்படுத்தப்பட்ட சாதியினர் என்று கருதப்படுவோரின் விகிதாசாரம் அதிகம். இலங்கையில், சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்படுவதில்லை. அதனால், சரியான எண்ணிக்கை தெரியாது. இருப்பினும், கடந்த முப்பதாண்டுகளாக பெருவாரியான மக்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். இவ்வாறு புலம்பெயர்ந்து வாழும் தமிழரில், உயர்சாதியினரின் விகிதாசாரம் குறைந்தது என்பது சதவீதமாகிலும் இருக்கலாம். அதிலும் யாழ் குடாநாட்டை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இதனால், யாழ் குடாநாட்டின் மொத்த சனத்தொகையில், தாழ்த்தப்பட்ட சாதியினரின் எண்ணிக்கை அதிகரித்திருக்க வாய்ப்புண்டு. இந்த சமூகத்தை சேர்ந்த பலர், ஈழப்போரினால் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சமூகத்தில் மேன் நிலைக்கு வந்துள்ளனர். ஈழப்போருக்கு முன்னர், 95% பதவிகள் உயர்சாதியினருக்கு கிடைத்து வந்தன. தற்போது அந்த நிலைமை பெருமளவு மாறிவிட்டது. தாழ்த்தப்பட்ட சாதியினர் மத்தியில் இருந்து, பணபலமுள்ள நடுத்தர வர்க்கம் ஒன்று உருவாகியுள்ளது.

யாழ்ப்பாண சாதிய சமூகத்தின் சமநிலையில் மாற்றம் வரலாம் என்ற அச்சம், உயர்சாதியினர் மத்தியில் நிலவுகின்றது. இன்றைக்கும், யாழ்ப்பாணத்தில் ஆதிக்க சாதியாக இருப்பது தாமே என்பதை நிறுவ பெரும் பிரயத்தனப் படுகின்றனர். போரினால் கவனிக்கப்படாது விடப்பட்ட கோயில்களை புனரமைப்பதும், கோலாகலமாக திருவிழாக்கள் நடத்துவதும் அத்தகைய மனோபாவத்தில் இருந்தே எழுகின்றது. கிராமங்களில் இருக்கும் சிறு கோயில்கள் கூட, வெளிநாட்டுப் பணத்தில் பெரிதாக கட்டப்பட்டு வருகின்றன. இடிபாடுகளுடன் சிதைவடைந்த கோயில்கள் கூட திருத்தப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கின்றது. (அதே நேரம், பொது மக்களின் இடிந்த வீடுகள் கவனிப்பாரற்று கிடக்கின்றன.) கோயில்களை புனரமைக்கவும், திருவிழா செலவுகளுக்கும் நிதி சேகரிக்கும் படலம், வெளிநாடுகளில் முடுக்கி விடப்படுகின்றது. குறிப்பாக ஒரே ஊர்க்காரர்கள், ஒரே சாதிக்காரர்கள் வாழும் இடங்களில் அத்தகைய நிதி சேகரிப்புகள் மும்முரமாக நடந்து வருகின்றன. நிதி கோரும் போது, அவர்கள் தமது பங்கை செலுத்த வேண்டும் என நிர்ப்பந்திக்கப் படுகின்றனர்.

மேலைத்தேய நாடுகளில் வாழும் தமிழர்கள் பலர், அந்த நாட்டு சூழலுக்கேற்றவாறு வாழப் பழகியுள்ளனர். அவர்களது பிள்ளைகளுக்கு யாழ்ப்பாணம் திரும்பிச் சென்று வாழ வேண்டும் என்ற எண்ணம் துளியும் கிடையாது. அதனால், கோயில் திருவிழாக்களுக்கு நிதி வழங்க பலர் தயங்கி வருகின்றனர். அவ்வாறு அலட்சியமாக இருக்கும் நபர்கள் மீது, "சாதி அபிமானம்" என்ற இறுதி அஸ்திரம் பிரயோகிக்கப் படுகின்றது. "இப்போதே கோயில் நிர்வாகத்திற்குள் தாழ்த்தப்பட்ட சாதியினர் அங்கத்துவம் வகிக்கின்றார்கள். திருவிழா நடத்துவதற்கு தாங்கள் பணம் தருவதாக கூறுகின்றனர். அவர்களின் பணத்தில் திருவிழா நடந்தால், எதிர்காலத்தில் கோயில் நிர்வாகம் முழுவதையும் கைப்பற்றி விடுவார்கள். அதன் பிறகு, நாங்கள் கோயிலுக்கு வெளியே நின்று தான் சாமி கும்பிட வேண்டும்." என்றெல்லாம் கூறி மனதை மாற்றுகின்றனர். நிச்சயமாக, "முன்னர் தீண்டாமல் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் கோயிலின் உள்ளேயும், ஆதிக்கம் செலுத்தியவர்கள் கோயிலின் வெளியேயும் நின்று வழிபடும் நிலைமை," அவர்களைப் பொறுத்தவரை கெட்ட கனவு தான். அதனால், யாழ்ப்பாணத்துடன் பிணைப்பற்றவர்கள் கூட, சாதிய ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக நிதி கொடுக்கின்றனர்.

சிறிலங்கா அரசு, "இந்து அறநிலையத் துறை அமைச்சு" மூலம் சைவக் கோயில்களுக்கு நிதி வழங்கி வருகின்றது. சிறிலங்காவின் அரசியல் சாசனம், "பௌத்த மதத்தை அரசு மதமாக" பிரகடனப் படுத்தியுள்ளது என்பதும், அந்த மதத்திற்கு அரச கருவூலத்தில் இருந்து அதிகளவு நிதி வழங்கப்படுகின்றது என்பதும் தெரிந்த விடயங்கள் தான். அதே சிங்கள- பௌத்த பேரினவாத அரசு, இந்துக் கோயில்களுக்கும் நிதி அள்ளிக் கொடுக்கின்றது என்பது பலருக்கு தெரியாது. (மக்களின் விடுதலை உணர்வை மழுங்கடித்து, பிற்போக்குத்தனங்களை வளர்ப்பதற்காக அரசு அவ்வாறு நடந்து கொள்கின்றது. கோயில்கள் சாதி ஆதிக்கத்தை நிலைநாட்டும் நிறுவனங்களாக இன்றும் உள்ளதால், வலதுசாரி தமிழ் தேசியவாதிகளும் அதனை எதிர்க்க மாட்டார்கள்.) அநேகமாக, வடக்கு- கிழக்கு மாகாணங்களில் உள்ள இந்துக் கோயில்கள் எல்லாமே அரசு நிதியைப் பெறுவது இரகசியமல்ல. வர்த்தக நிறுவனங்களை அரசு நடத்துவதற்கும், தனியார் நடத்துவதற்கும் இடையிலான வித்தியாசம் கோயில் என்ற நிறுவனத்திலும் பிரதிபலிக்கின்றது. ஒரு கோயில் முழுவதும் அரச நிதியில் இயங்கினால், அங்கே நிர்வாகத்தினுள் தாழ்த்தப்பட்ட சாதியினர் ஊடுருவதை தடுக்க முடியாது. அதற்கு மாறாக, சுயசாதியை சேர்ந்தவர்களின் நிதியில் கோயிலை இயக்கினால், அந்தக் கோயில் தொடர்ந்தும் ஒரே சாதியின் ஆதிக்கத்தின் கீழே இருக்கும். உயர்சாதியினரைப் பொறுத்த வரையில், கோயில் என்பது வெறும் மத வழிபாட்டு ஸ்தலமல்ல. சமுதாயத்தில் சாதிய கட்டமைப்பை வளர்க்கும் நிறுவனமும் அது தான். தமிழ் சமூகம், சாதி, மதம் போன்ற பிற்போக்கு அம்சங்களுக்கு எதிராக போராடாத வரையில், விடுதலை என்பது வெறும் கனவாகவே இருக்கும்.

9 comments:

மாசிலா said...

Excellant post. Thanx.

ஓசூர் ராஜன் said...

very good issue, thanks , congraulation!

NICHAAMAM said...

இனிய கலையரசன்!

சாதியம் மதத்திற்குள்ளூம் அதைக்கடந்தும் மதம் இல்லாமலும் இயங்கக்கூடியது.

உதாரணங்கள் அதிகம் நான் உங்களூக்குத் தரத்தேவையில்லை.
கிறீஸ்தவத்துள் சாதியம், ஆபிரிக்காவில் சாதியம் யப்பானில்சாதியம்..இப்படி.
இந்துத்துவம் சமன் சாதியம் சமன் வருணாச்சிரமம் என்பதிலிருந்து நாம் இப்போது அதிகதூரம் வெளியே போகவேண்டியுள்ளது.
தற்போது யாழ்ப்பாணத்தில் அதிகம்கோவில்கள் தலித்துகளீடமும் ஏனைய பிற்படுத்தப்பட்டவர்களீடமுமே இருக்க்கின்றன.
இவ்வளவுகாலமாக மறுக்கப்பட்ட வெளீயை இப்போது கைப்பற்றுகிறார்கள்.

வெள்ளாளர்கள் பெரும்பாலும் வெளியேறிய பின்னர் கல்வி மதம் வேலைவாய்ப்பு இவைகளில் ஒருபெரும்பாய்ச்சல் இப்போது நிகழ்கிறது.
பேராசிரியர் ரத்தின ஜீவன் கூல் மட்டுந்தான் இப்போது படித்தும் வேலயில்லாமல் இருக்கிறார்.
கல்விக்கு சாதியம் இப்போது பெரும் தடையல்ல.

ஏற்கனவே அகிகாரத்திலுள்ள வெள்ளாளர்களால் சில சிக்கல்கள் ஏற்படுவதுண்டு.
அவற்றை அற்பமானதன கருதி புறாமொதுக்கிவிடலாம்.
ஆனாலும் தற்போதைய நிலைமைகள் தாழ்த்தப்படோருக்குச்சாதகமாகவே உள்ளன.
சுகன்

naren said...

ஈழ சமூகம் one dimensional ஆக இல்லாமல் அது multi dimensional ஆக இருப்பதை பதிவிட்டதற்கு நன்றி.

வேகநரி said...

கோயில் என்பது வெறும் மத வழிபாட்டு ஸ்தலமல்ல. சமுதாயத்தில் சாதிய கட்டமைப்பை ஈழதேசியவாதிகளால் வளர்த்து எடுக்கும் நிறுவனமும் அது தான் என்பதில் சந்தேகம் இல்லை. இலங்கையில் கோவில்கள் எல்லாம் இலங்கை அரசால் பாழடைந்து விட்டன என்ற பிரசாரமும் தமிழகத்தில் நடப்பது கவனிக்க தக்கது.

aotspr said...

சூப்பர் பதிவு.
Thanks,
Kannan
http://www.ezdrivingtest.com

tamilan said...

click and read the link

>>> இந்துக்களே! விழிமின்! எழுமின்! 6. இந்துகளுக்கு இறைவன் பிராமணனே? உன்னுடைய இறைவன் யார்? கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்; மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை; பிராமணர்களே நமது கடவுள் ?


>>> பகுதி 31. கோவில் கட்டியவனுக்கு சாமியை சுமக்க, பூசை செய்ய தடையா? ‘சூத்ராள் பூஜை பண்றது, அதுவும் தமிழ்ல பண்றது ஏத்துக்க முடியாது.

>>> பகுதி 27. சூத்ரனோ, பஞ்சமனோ கோயிலுக்குள் பாதம் வைத்தால் விக்ரகம் வெறுங்கல்லாகி பகவான் பட்டென ஓடிப் போய் போய்விடுவார். பரிகாரம் கும்பாபிஷேகம். அதாவது குடமுழுக்கு.

.

krrish said...

ஆஹா !!!

Dr.Anburaj said...


Hindu society already have sent such items to the dust pin.Please turn your eyes to Thirukkural Thirumanthiram Vallalar Sri Narayana Guru etc. Do not blame darkness.Let us light a candle.
Sri Narayana Guru once visited a Ezhava village temple. The temple had 59 sannathis. Sri Narayana Guru ordered 58 sannathis to be destroyed. One Sri Vinayagar temple is left . Guru advised them to follow One temple one Idol one Vizhakku-light .Temple administration had been a great burdon on them. Guru made it easy for them.After 3yrs Ezhava had bnuild one School Libray and a Poly techni school with their surplus funds.Sri Ramakrishna Tapovanam is conducting " ANTHAR YOGAM' which is a good medicine for Non-brahmins /Let us conductt " AN THAR YOGAM' in oue house temple schools. Non-Brahmins will evolve into Brahmins in terrms of Varanam.