Tuesday, August 21, 2012

ரஷ்யாவிலிருந்து புலம்பெயர்ந்த இந்துக்களின் முன்னோர்கள்

[இந்துக்களின் தாயகம் 
சீனாவில் உள்ளது! - 15]

(பதினைந்தாம் பாகம்)
வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த நிகழ்வுகளையும், அவை நடைபெற்ற ஆண்டுகளையும் மட்டுமே, வரலாற்றுப் பாடத்தில் சொல்லிக் கொடுப்பதால், பலருக்கு அந்தப் பாடம் கசக்கின்றது. ஆனால், சரித்திரத்தில் நடந்த சம்பவங்களால் ஏற்பட்ட விளைவுகளையும், அவை எமது அன்றாட வாழ்க்கையில் உண்டாக்கும் தாக்கங்களையும் சொல்லிக் கொடுத்தால், மக்கள் இலகுவாக புரிந்து கொள்வார்கள். ஆனால், அதிலே ஒரு பிரச்சினை. மக்கள் உண்மைகளை அறிந்து விட்டால், வருங்காலத்தில் ஒரு சமூகப் புரட்சிக்கு வழிவகுத்து விடும். அதனால் தான், நான் இங்கே எழுதிய விடயங்களை பற்றி யாரும் பேசுவதில்லை.  உதாரணத்திற்கு, அலெக்சாண்டரின் இந்தியா நோக்கிய படையெடுப்பில் இருந்து ஆரம்பிப்போம். அலெக்சாண்டர் பற்றி நீங்கள் அறிந்தது என்ன? உலகம் முழுவதும் ஆள வேண்டுமென்று ஆசைப்பட்டான். அடுத்தடுத்து பல போர்களில் வெற்றிகளை குவித்தான். இந்தியாவில் தோல்வியுற்று திரும்பிச் சென்றான்.... அதன் பிறகு? அலெக்சாண்டர் வழிநடத்தி வந்த கிரேக்கப் படைகள் என்னவாகின. மாசிடோனியாவுக்கு (அலெக்சாண்டரின் தாய்நாடு) திரும்பிச் சென்றனவா?

கி.மு. 300 ல் படையெடுத்து வந்த அலெக்சாண்டரின் படைகள் திரும்பிச் செல்லவில்லை. வெள்ளையின கிரேக்கர்கள், ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் நிரந்தரமாக தங்கி விட்டிருந்தனர். அலெக்சாண்டர் அதிக காலம் உயிர் வாழவில்லை. 32 வயதில் இறந்தான். உண்மை. ஆனால், அலெக்சாண்டரின் தளபதிகள், அவன் கைப்பற்றிய நாடுகளை ஆண்டு வந்தார்கள். அதாவது, ஆப்கானிஸ்தானும், பாகிஸ்தானின் மேற்குப் பகுதியும், அடுத்த 300 ஆண்டுகளுக்கு கிரேக்கர்களால் ஆளப்பட்டன! கிரேக்க வெள்ளையரின் காலனிகள் ஏற்பட்டன. அவர்கள் தமது மொழி, மதம், கலாச்சாரம் எதையும் விட்டுக் கொடாமல், தொடர்ந்து பின்பற்றி வந்தனர். இன்று அந்த கிரேக்கர்கள் எங்கே? உள்ளூர் மக்களுடன் ஒன்று கலந்து விட்டனர். கிரேக்க வம்சாவளியினர், இந்து, கிரேக்க தெய்வங்களை வழிபட்டு வந்தனர். அந்தக் காலத்தில், ஆப்கானிஸ்தான் முதல் காஷ்மீர் வரையிலான கிரேக்க குடியேறிகளின் நாட்டில், இந்து-பௌத்த மதங்களின் செல்வாக்கு மேலோங்கிக் காணப்பட்டது. (பார்க்க:  India and Central Asia: Classical to Contemporary Periods, by Braja Bihari Kumara)

அலெக்சாண்டரின் படையெடுப்பு மட்டுமல்ல, செங்கிஸ்கானின் படையெடுப்பும் இந்திய மக்கள் சமூகத்தில் மாபெரும்  மாற்றங்களை உண்டாக்கின. செங்கிஸ்கான் தலைமையில், துருக்கி மொழி பேசும் மொங்கோலியர்கள் உலக வரலாற்றில் மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை கட்டி ஆண்டார்கள். அவர்களின் சாம்ராஜ்யத்திற்குள் வட இந்தியாவின் ஒரு பகுதியும் (பஞ்சாப், காஷ்மீர், டெல்லி) அடங்கியது. மொங்கோலியர்களும் வெள்ளை இனத்தவர்கள் தான். அப்போது வந்த வெள்ளையின துருக்கியர்கள், வட இந்தியாவில் நிரந்தரமாக தங்கி விட்டனர். மொங்கோலியர்கள் படையெடுத்த காலத்தில், அவர்கள்  முஸ்லிம்களாக மாறி இருக்கவில்லை.  மொங்கோலிய மக்களின் புராணக் கதைகள் சில, இந்து மத புராணக் கதைகளை ஒத்திருப்பதை ஏற்கனவே எழுதி இருக்கிறேன். பாரசீகத்தில் இருந்து படையெடுத்து வந்த பஹ்லவி மன்னர்கள், தென்னிந்தியா வரை பிடித்து ஆண்டார்கள். அவர்களுடன் ஈரானை தாயகமாக கொண்ட, வெள்ளையின படைவீரர்களும் வந்தார்கள்.  அவர்களும் திரும்பிச் செல்லவில்லை. பல்லவர்கள் என்ற பெயரில் தமிழர்களாக மாறி விட்டனர்!

செங்கிஸ்கானின் சாம்ராஜ்யம் இந்தியா வரை விரிந்த அதே காலகட்டத்தில்,  தென்னிந்தியாவில் சோழர்கள் ஒரு சாம்ராஜ்யத்தை கட்டியிருந்தனர். சோழர்களுக்கும், செங்கிஸ்கானின் அரசுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருந்த விடயம் எத்தனை பேருக்குத் தெரியும்? சீனாவில் குவான் ஸௌ என்னும் நகரத்தில்,  சோழ நாட்டு வணிகர்கள் கட்டிய சைவக் கோயில் ஒன்றிருந்தது. அந்தக் கோயில் செங்கிஸ்கானுக்காக கட்டப்பட்ட விபரம், தமிழிலும், சீன மொழியிலும் ஒரு கல்வெட்டில் பொறிக்கப் பட்டுள்ளது. அந்தக் கல்வெட்டை இன்றைக்கும் குவான் ஸௌ அருங்காட்சியகத்தில் காணலாம். சோழர்கள் காலத்தில் சைவ மதம் நிறுவனமயப் படுத்தப் பட்டது. இன்றைய இந்து மதத்திற்கு அடிப்படையான, சோழர்களின் சைவ மதத்திற்குள், பல மொங்கோலிய கலாச்சாரக் கூறுகள் உள்வாங்கப் பட்டன. 

"என்னது! நாங்கள் (மொங்கோலிய) துருக்கியரின் கலாச்சாரத்தை பின்பற்றுகிறோமா? அதை ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா?"
நீங்கள் தமிழ்க் கலாச்சாரம் என்று கருதிக் கொண்டிருக்கும் பல விடயங்கள், மொங்கோலியாவில் இருந்து இறக்குமதியானவை! இன்றைய முற்போக்காளர்கள் அவற்றை பழமைவாதம் என்று ஒதுக்கலாம். உதாரணத்திற்கு, ஒரு குடும்பத்தில், ஆண்களுக்கும், விருந்தினருக்கும் உணவளித்த பின்னர் எஞ்சியதை தான், அந்தக் குடும்பத்து பெண்கள் சாப்பிட வேண்டும்.  மணமாகாத பெண்கள் கற்பைக் காப்பற்றப் பாடுபடும் கலாச்சாரமும், துருக்கியரிடம் இருந்து கடன் வாங்கியது தான். இன்றைக்கும், தமிழ் சினிமாக்களில் வரும் கதாநாயகன், தன்னை காதலிக்காத பெண்ணை பலவந்தப் படுத்தி தாலி கட்டுவான். அதற்குப் பிறகு, அந்தப் பேதைப் பெண், கல்லானாலும் கணவன் என்று வாழத் தொடங்கி விடுவாள். அதெல்லாம்  தமிழரின் கலாச்சாரம் அல்ல. இன்றைக்கும், மத்திய ஆசிய நாடுகளில், துருக்கி மொழி பேசும் மக்கள் மத்தியில் அது போன்ற சம்பிரதாயம் பின்பற்றப் படுகின்றது. 

வரலாற்றில் எழுதப்பட்டுள்ள அன்னியப் படையெடுப்புகளுக்கு முன்னரும், வெள்ளையினத்தவர்களின் ஊடுருவல் இருந்துள்ளதை மறுக்க முடியாது.  கி.மு. 3000 அல்லது 5000 ஆண்டுகளுக்கு முன்னர், ஆசியாக் கண்டம் எவ்வாறு காட்சியளித்தது? நாம் இலகுவாக புரிந்து கொள்வதற்காக, அன்றைய ஆசியாவை மூன்றாக பிரித்துப் பார்ப்போம். இந்தியாவுக்கு மேற்கே ஆப்பிரிக்க-திராவிட இனத்தவரின் நாகரீகம், இன்றைய ஈராக், ஈரான் ஆகிய நாடுகளை உள்ளடக்கி இருந்தது. இந்தியா, இலங்கை, பர்மா, தாய்லாந்து, மலேசியா, கம்போடியா ஆகிய நாடுகளில் நாகா இன மக்களின் நாகரீகம் காணப்பட்டது. இந்த இரண்டு நாகரீகங்களும், பல துறைகளில் சிறந்து விளங்கின. 

மேற்கேயிருந்து ஆப்பிரிக்க-திராவிடர்கள், கிழக்கு நோக்கி நகர்ந்தனர். அந்த தருணங்களில், திராவிடர்-நாகர் மோதல்கள் நடந்துள்ளன. (இன்று மியான்மரில், நடக்கும் ரோஹிங்கியா பிரச்சினையையும், ஒரு வகையில் திராவிடர்-நாகர் போரின் தொடர்ச்சியாக கருதலாம்.) இருப்பினும், ஆப்பிரிக்க-திராவிடர்கள் இலங்கையின் அம்பாந்தோட்டை வரை வெற்றிகரமாக நகர்ந்து, தமது குடியிருப்புகளை அமைத்துக் கொண்டனர். அதாவது, இந்திய உப கண்டத்தைப் பொறுத்த வரையில், திராவிடர்களும் வந்தேறு குடிகள் தான். ஆனால், இரு இனங்களும் பரஸ்பரம் நட்பு பாராட்டி, ஒன்று கலந்து விட்டன. ஒரு இனத்தின் நாகரீகத்தை, மற்ற இனம் அழிக்கவில்லை. இரண்டும் சேர்ந்து புதிய நாகரீகம் உருவாகியது. (பார்க்க: Sun and the Serpent, by C.F. Oldham &  The Ruling Races of Prehistoric Times in India, South- Western Asia, and Southern Europe, By James Francis Katherinus Hewitt)

ஆசியாக் கண்டத்தின் தெற்குப் பகுதில், நாகரீகத்தில் சிறந்து விளங்கிய திராவிடர், நாகர் இனங்கள் வாழ்ந்த காலத்தில், வெள்ளையின மக்கள் நாடோடிகளாக அலைந்து திரிந்தனர். அவர்களின் தாயகம், இன்றைய ரஷ்யாவுக்கு சொந்தமான சைபீரியா, காசகஸ்தான், அல்லது மொங்கோலியா. அவர்களது தாயகப் பூமி விவசாயத்திற்கு ஏற்ற நிலவமைப்பை கொண்டிருக்கவில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்த புல்வெளிகள், கால்நடைகளை வளர்ப்பதற்கு ஏற்ற இடம். அதனால், கோடை  காலத்தில் ஓரிடம், பனிக் காலத்தில் இன்னொரு இடம் என்று, கால்நடைகளுடன் இடம்பெயர்வது வழக்கம். இன்றைக்கும் அந்த நாடுகளில் வாழும் கிராமப்புற மக்கள், கால்நடைகளை வளர்க்கும் நாடோடிக் கலாச்சாரத்தை பின்பற்றுகின்றனர். அவர்கள் குதிரைகளையும் சவாரி செய்யப் பயன்படுத்தி வந்தனர். ஓடிக் கொண்டிருக்கும்  குதிரைகள் மீது மாறி மாறி சவாரி செய்யும் திறமை காரணாமாக, பிற இனங்களுடனான போரில் வெல்ல முடிந்தது. 

திராவிட, நாக இன மக்கள் குதிரைகளின் பயன்பாட்டை அறிந்திருக்கவில்லை.  வடக்கே இருந்து படையெடுத்து வந்த வெள்ளையின நாடோடிக் குழுக்களுடன் நடந்த போர்களில், இதன் காரணமாக தோல்வியை தழுவி இருக்கலாம். வெள்ளையின நாடோடிக் குழுக்கள், சில்லுகளின் பயன்பாட்டையும் அறிந்திருந்தனர். அதனால், நாற்புறமும் மூடப்பட்ட வண்டிகளுக்கு சில்லு பூட்டி, குதிரைகளில் இழுத்துச் சென்றனர். அந்த குதிரை வண்டிகள் சிறிய வீடு போன்று, (நமது காலத்தில் "கரவன்" போன்று) காணப்பட்டன. முழுக் குடும்பமும் அதற்குள் இருந்து, நாடு விட்டு நாடு குடிபெயர்ந்தது. பிற்காலத்தில், மிகப்பெரிய கூடார வீட்டைக் கூட, குதிரைகள் கட்டி இழுத்துச் சென்றனர். இதை எல்லாம் உங்களுக்கு நிரூபிப்பதற்கு, நான் அதிகம் சிரமப் படத் தேவையில்லை. காசகஸ்தான் போன்ற மத்திய ஆசிய நாடுகளுக்கு சென்று, நீங்களே நேரில் பார்க்கலாம்.  

தாயக பூமியில் அரிதாகக்  கிடைத்த இயற்கை வளங்கள், வெள்ளையின நாடோடிக் குழுக்களை தெற்கு நோக்கி இடம்பெயர வைத்ததில் வியப்பில்லை. ஏற்கனவே பல குழுக்கள் மேற்கு நோக்கி இடம்பெயர்ந்திருந்தன. இன்றைய ஐரோப்பிய இனங்களின் மூதாதையர் அவர்களே. வெள்ளையின நாடோடிக் குழுக்கள், இயற்கையை வழிபட்டு வந்தன. மரம், குன்று, ஆகாயம், நீர், இடிமுழக்கம் எல்லாமே அவர்களின் தெய்வங்களாக இருந்தன. இன்றைக்கும் சைபீரியாவில் வாழும் மக்கள், இயற்கை வழிபாட்டாளர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. பல ஆயிரம் வருடங்களாக, இயற்கை வழி வந்த தெய்வங்கள் தான், வெள்ளையினத்தவரின் மத நம்பிக்கையை தீர்மானித்தன. ஸ்கன்டிநேவியர்கள், ரோமர்கள், கிரேக்கர்கள் வழிபட்ட தெய்வங்களுக்கும், இந்திரன், வருண பகவான், அக்னி போன்ற இந்து-சம்ஸ்கிருத மக்கள் வழிபட்ட தெய்வங்களுக்கும் இடையிலான ஒற்றுமையே அதனை நிரூபிக்க போதுமானது. ஆனால், அந்த மத நம்பிக்கைகளுக்கும், எமக்குத் தெரிந்த இந்து மதத்திற்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அதனை எப்படி விளக்குவீர்கள்?  எங்கோ ஒரு இடத்தில், வெள்ளையின நாடோடிக் குழுக்கள் தம்மை இந்துக்களாக, அல்லது பிரம்மாவை முழுமுதற் கடவுளாக வழிபடும் பிராமணர்களாக, தம்மை மாற்றிக் கொண்டன. அந்த மாற்றம் எங்கே நடந்தது? 

சமர்கண்ட் நகரம், இன்றைய உஸ்பெகிஸ்தான் நாட்டில், தாஜிகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது. மூவாயிரம் வருடங்களுக்கு முன்பும் அது பல்லின கலாச்சாரங்களைக் கொண்ட நகரமாக திகழ்ந்தது. அப்பொழுது அதன் பெயர் "மார்க்கண்டு".  சொக்டியானா அல்லது சுகுதா என்ற ராஜ்யத்தின் தலைநகரம். அந்த நகர மக்கள், பிரமா, இந்திரன், சிவன், விஷ்ணு ஆகிய தெய்வங்களை வழிபட்டு வந்தனர்.இந்த தெய்வங்களுக்கு, அவர்களின் மொழியில் வேறு பெயர்கள் இருந்தன. அவை முறையே, சிரவன்  (பிரமா), அட்பட் (இந்திரன்), வெஷ்பாகர் (சிவன்). ஆனால், கடவுளர் உருவங்கள் ஒரே மாதிரி உள்ளன.   (அந்த சுவரோவியங்கள் சமர்கண்ட்  நகரில் இருந்து 60 கி.மி. தூரத்தில்  Penjikant ல்  உள்ளன. அல்லது ரஷ்யாவில், சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் உள்ள  Hermitage Museum ல் பார்வையிடலாம்.) அன்றைய மத்திய ஆசியாவின் வேறு பகுதிகளிலும், இந்து மத வழிபாடு நிலவி இருக்கலாம். எப்போதும் பொருளாதார வளர்ச்சி காணும் நாடு, தன்னை விட அதிக வளர்ச்சி கண்ட நாட்டு நாகரீகத்தை பின்பற்றுவது வழமை. பண்டைய காலத்திலும் அது தான் நிலைமை. சொக்டியானா, தெற்கில் வாழ்ந்த திராவிடர்களின் மத வழிபாட்டை பின்பற்றி இருக்கலாம். ஏற்கனவே திபெத் பகுதிகளில், திராவிடர்களின் தாந்திரிய மதம் பரவி இருந்தது. 

வெள்ளையின நாடோடிக் குழுக்களின் தெற்கு நோக்கிய இடப்பெயர்வு, இரண்டு திசைகளில் நடந்துள்ளது. ஒன்று, சீனாவில் இருந்து திபெத் ஊடாக நடந்த இடப்பெயர்வு. மற்றது, ஈரானில் இருந்து பாகிஸ்தான் ஊடாக நடந்த இடப்பெயர்வு. இன்றைய நவீன காலத்திலும், சீனாவும், இந்தியாவும் ஆயிரக்கணக்கான மைல் நீளமான எல்லையைக் கொண்டுள்ளன. ஆகவே, பெருமளவு வெள்ளையின மக்களின் ஊடுருவல், சீனாவில் இருந்து நடந்திருக்க வாய்ப்புண்டு. இடைப்பட்ட காலத்தில், அவர்கள் இந்து மத தெய்வங்களை, தமது கடவுளராக மாற்றிக் கொண்டனர். ஏனெனில், சைபீரியாவில் வாழ்ந்த காலத்தில் பின்பற்றிய இயற்கை வழிபாட்டை விட, திராவிட-நாகர்களின் "இந்து மதம்" வளர்ச்சி அடைந்திருந்தது. ஈரானில் இருந்து நடந்த இடப்பெயர்வு, குறைந்தது ஆயிரம் வருடங்களுக்குப் பின்னர் நடந்திருக்கலாம். ஈரானில் தங்கி விட்ட வெள்ளையின மக்கள், தனியான நாகரிக மாற்றத்திற்கு உட்பட்டனர். சரதூசர் என்ற தத்துவ ஞானி, திராவிட மக்களின் தெய்வங்களில் ஒன்றை வைத்து, ஓரிறைக் கொள்கை கொண்ட புதிய மதம் ஒன்றை உருவாக்கி இருந்தார்.  அது புதியதொரு நாகரிக வளர்ச்சிக்கு வழி திறந்து விட்டது. 

சரதூசரின் மதத்தை பின்பற்றிய ஈரானியரின் மத நூல்கனான, அவெஸ்தா போன்ற இலக்கியங்கள், இந்து மத வேதங்களின் வடிவில் எழுதப் பட்டுள்ளன. இரண்டுமே செய்யுள் வடிவில் எழுதப் பட்டுள்ளது மட்டுமல்ல, பல கதைகள் ஒரே மாதிரி உள்ளன. சில சுவாரஸ்யமான விடயங்களையும் அவதானிக்க முடிகின்றது. பண்டைய ஈரானிய மத நூல்களில், "தேவர்கள் கெட்டவர்கள், அசுரர்கள் நல்லவர்கள்!"  மேலும், சரதூசரின் மதத்தின் ஒரேயொரு கடவுளின் பெயர், "அசுரா" மாஸ்டா! அப்படியானால், எதற்காக இந்து மத நூல்கள், தேவர்களை நல்லவர்களாகவும், அசுரர்களை கெட்டவர்களாகவும் சித்தரிக்கின்றது? காரணத்தை நாங்கள் ஊகிக்க மட்டுமே முடியும். 

அநேகமாக, ஈரானில் குடியேறிய வெள்ளையின மக்கள், ஏற்கனவே அங்கிருந்த உன்னதமான திராவிட நாகரீகத்தை பின்பற்ற விரும்பி இருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் குடியேறிய வெள்ளையினத்தவர்கள், அசுரர்கள் (நாகர்கள்), தாசர்கள் (திராவிடர்கள்) ஆகிய இனங்களுடனான யுத்தங்களில் வென்றனர். அத்தோடு நில்லாது, யுத்த வெற்றிகளை பறைசாற்றும் புதிய மதம் ஒன்றையும் உருவாக்கிக் கொண்டனர். அதுவே, பிராமண மதம் என்றும், பிற்காலத்தில் இந்துமதம் என்றும் அழைக்கப் பட்டது. ஈரானில் தோன்றிய சரதூசரின் மதத்திற்கும், இந்தியாவில் தோன்றிய இந்து மதத்திற்கும் இடையில், நடைமுறையில் பாரிய வித்தியாசங்கள் இருந்தன. இந்து மதத்தில், சைபீரியப் பழங்குடியின மக்களின் கலாச்சாரம் தொடர்ந்தும் பின்பற்றப் பட்டு வந்தது ஒரு முக்கிய வேறுபாடு ஆகும். 

மேற்கு சீனப் பிரதேசத்தில், தொகாரியன் என்ற ஐரோப்பியர் போன்ற தோற்றம் கொண்ட, ஒரு வெள்ளையினம் வாழ்ந்து வந்தது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், பட்டு வாணிபம் காரணமாக உண்டான பொருளாதார வளர்ச்சியினால், அவர்களும் நகரங்களை கட்டி நாகரீகமடைந்த சமுதாயமாக திகழ்ந்தனர். பிற்காலத்தில், கிழக்கே இருந்து படையெடுத்து வந்த சீனர்களுடனான போரின் விளைவாக, இன்று அந்த இனம் அழிந்து விட்டது. எஞ்சிய மக்கள், தாஜிக், துருக்கி இன மக்களுடன் ஒன்று கலந்து விட்டனர். சீனாவில் இன்றைக்கும் அழியாமல் உள்ள, துகாரியன் நகர இடிபாடுகளில் காணப்படும் ஓவியங்கள் சில உண்மைகளை உணர்த்துகின்றன. சுவரோவியங்களில் காணப்படும்  வெள்ளையின துகாரியன் மக்கள், இந்தியர்களைப் போல நெற்றியில் பொட்டு வைத்திருக்கிறார்கள்! சில முகங்கள் (வெள்ளை நிற) இந்திய முகங்கள் போல தெரிகின்றன.
(மேலதிக தகவல்களுக்கு இந்த இணைய வீடியோவை பார்க்கவும்:

China's Tocharian mummies - Silent witnesses of a forgotten past, http://video.google.com/videoplay?docid=-1362674044731979808)   

பண்டைய இந்துக்களின் சடங்கு, சம்பிரதாயம், கலை, கலாச்சாரங்களை எடுத்துப் பார்த்தாலே புரிந்து விடும், அவர்கள் எங்கிருந்து வந்திருக்கிறார்கள் என்று. பிராமணர்கள் அஸ்வமேத யாகம் வளர்த்து, குதிரைகளை யாகத்தீயில் தூக்கிப் போடுவது வழக்கம்.  ஊர் மத்தியில், பெரியதொரு நெருப்பை உண்டாக்கி, அதனருகில் விருந்துண்டு மகிழ்வது, ஆதி கால வெள்ளையரின் பண்டைய காலப் பழக்கம். பிற்காலத்தில் கிறிஸ்தவ மதம் அந்த சம்பிரதாயத்தை தடை செய்து விட்டாலும், அது இன்னமும்  சில இடங்களில் தொடர்கின்றது. சில வருடங்களுக்கு முன்னர், நோர்வேயிலும், சைப்பிரசிலும், நானே நேரில் சென்று பார்த்திருக்கிறேன்.

உலக வரலாற்றில், எந்த இனம் அதிகளவு குதிரைகளை வீட்டுத் தேவைகளுக்காக பயன்படுத்தியது? மத்திய ஆசியாவிலோ வாழும், மொங்கோலிய/துருக்கி மொழிகளை பேசும் மக்களின் வாழ்வில் இன்றைக்கும் குதிரைகள் முக்கிய இடம் வகிக்கின்றன. வேத நூல்களில் எழுதப் பட்டுள்ள உணவுப் பதார்த்தங்கள் பல, இன்றைய இந்தியர்கள் யாருக்கும் தெரியாது. உதாரணத்திற்கு, சோம பானம். இன்றைக்கும் நீங்கள் ஆப்கானிஸ்தான் சென்றால், அங்கே சோம பானம் பருகலாம்! அடுத்தது, பெண்களை கடத்திச் சென்று மணம் முடிக்கும் கலாச்சாரம். வேதங்களில் எட்டு வகை திருமணங்கள்  பற்றி கூறப் பட்டுள்ளன. அசுரம், ராக்ஷசம், மற்றும் காந்தர்வம் போன்ற மண முறைகள், ஒரு பெண்ணை பலவந்தமாக கடத்திச் சென்று மணம் முடிப்பதைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. அப்படியானால், அந்த மண முறைகள் எல்லாம், பண்டைய (ஆரிய) இந்துக்களின் பண்பாடாக இருந்துள்ளது. அந்தப் பண்பாடு, உலகில் வேறெந்த நாட்டிலாவது இருக்கின்றதா? கிரிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் போன்ற மத்திய ஆசிய நாடுகளில், இன்றைக்கும் இளைஞர்கள் தனது வருங்கால துணைவியாரை கடத்திச் சென்று மணம் முடிக்கின்றனர். 

இந்துக்களின்  தாயகம் எது? பூர்வீக இந்துக்கள் எந்த இனத்தை சேர்ந்தவர்கள்? இது போன்ற விபரங்களை இந்தத் தொடர் கட்டுரை தெளிவாக விளக்கி இருக்கும் என்று நம்புகின்றேன். இதற்குப் பிறகும் நம்ப மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பவர்கள், சீனா, ரஷ்யா, அல்லது மத்திய ஆசிய நாடுகளுக்கு சென்று, அங்குள்ள கலாச்சார, சம்பிரதாயங்களை மேற்கொண்டு ஆராயும் பொறுப்பை அவர்களிடமே விட்டு விடுகிறேன். இந்தக் கட்டுரையை முடிப்பதற்கு முன்னர் சில வார்த்தைகள் கூற விரும்புகிறேன். சமஸ்கிருதம், ஒரு இனத்தை சேர்ந்த மக்களின் தாய் மொழியாக இருந்ததற்கான ஆதாரம் எதுவுமில்லை. அது, இறைவனை வழிபடவும், மத இலக்கியங்களை புனையவும், பிராமணர்களால் பயன்படுத்தப் பட்ட "இரகசிய" மொழியாகும். ஆதி காலத்தில், பிராமணர் என்பது சாதியைக் குறிக்கவில்லை. பௌத்த பிக்குகள் போன்று, ஒரு துறையில் பாண்டித்தியம் பெறுவதற்காக தெரிந்தெடுக்கப் பட்டவர்களை குறிக்கும். 

ஆரியர் என்பதும், சிறந்தவர்கள் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப் பட்டது. அது ஒரு இனத்தைக் குறிக்கும் சொல் என்பதற்கோ, அல்லது ஆரியர்கள் எல்லோரும் வெள்ளையர்கள் என்பதற்கான ஆதாரம் எதுவும் கிடையாது. "ஆரியர்கள் வெள்ளையர்கள்" என்பது ஒரு நிறவெறிக் கோட்பாடு. சமஸ்கிருதத்திற்கும், ஜேர்மனிய மொழிகளுக்கும் இடையிலான ஒற்றுமை, இவற்றுடன் சிவந்த நிற இந்தியர்களையும் ஒன்று சேர்த்து பார்த்து, பிரிட்டிஷ் காரர்கள் உருவாக்கிய கோட்பாடு.  "ஈரான்" (ஆரியர்களின் நாடு) என்ற பெயர் கூட, ஒரு இனத்தைக் குறிக்கும் பெயர் என்ற அர்த்தம் கொள்ளத் தேவையில்லை. "மேன் மக்களின் நாடு", என்ற ஒரு சிறப்பு தேசிய அடையாளமாகவும் இருக்கலாம்.  பண்டைய வரலாற்றை இலகுவாக புரிந்து கொள்வதற்காக, சில அறிஞர்கள் உருவாக்கிய ஆரியர், திராவிடர் போன்ற சொற்கள், இன்று வெகுவாக அரசியல் மயப் படுத்தப் பட்டு விட்டன. 

வரலாறு நெடுகிலும், மக்கள் மாறாமல் அப்படியே இருந்ததில்லை.  ஆனால், இருபதாம் நூற்றாண்டு இனவாதிகள் மட்டுமே, ஒரு இனத்தின் மாறாத் தன்மை பற்றிய மூட நம்பிக்கைகளை கொண்டுள்ளனர்.  எமது மூதாதையர் யாரும், எம்மைப் போல இனவாதிகளாக இருக்கவில்லை. அதற்கு மிகச் சிறந்த உதாரணம், இந்து மதம். இந்திய நாகரக்ளினதும், திராவிடர்களினதும் மத நம்பிக்கைகளை ஆரியர்களும் பின்பற்றினார்கள். மதம், மொழி, இவை எல்லாம் மக்களால் இலகுவில் மாற்றிக் கொள்ளக் கூடியவை.  ஒருவர் பிறப்பால் மட்டுமே இந்துவாக முடியும் என்று இன்னமும் நம்புகிறவர்கள், தமது முன்னோர்களை  சீனாவிலோ, ரஷ்யாவிலோ தேடிச் செல்லட்டும். 

(முற்றும்) 

உசாத்துணை :
1. The Horse, the Wheel, and Language: How Bronze- Age Riders from the Eurasian Steppes, by David W.Anthony
2.Lost Cities of China, Central Asia and India, by David Hatcher Childress
3. Sons of the Conquerers, by Hugh Pope
4. In Centraal Azië, Een reis langs tradities en godsdiensten, by Linda Otter
5. Sun and the Serpent, by C.F. Oldham
6. India and Central Asia: Classical to Contemporary Periods, by Braja Bihari Kumara 


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:
1.இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!
2.திபெத்தில் தோன்றிய இந்து மத சின்னங்கள்
3.சீனாவுடைய சிவனே போற்றி! தாந்திரிய மதத்தின் இறைவா போற்றி!!
4.சிவபெருமானின் "சைவ மத பாலியல் புரட்சி"
5.காஷ்மீரத்து திருமூலரின் சோஷலிச திருமந்திரம்
6.தமிழ் இலக்கணம் எழுதிய சீன தேச முனிவர்
7.பழனி முருகன்: தமிழக- சீன நட்புறவுக் கடவுள் !
8.கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி?
9.தமிழர் தொலைத்த விமானம் செய்யும் தொழில்நுட்பம்
10.எல்லாளனை வீழ்த்திய, "தமிழ்த் துரோகக் கடவுள் கந்தன்!"
11. புத்தரின் பல்லுக்காக போரிட்ட, சிங்கள-தமிழ் மன்னர்கள்
12.நாக நாட்டு குகைக் கோயில் மர்மம்
13. விஷ்ணுவின் வாகனமான, "ஷாருக்கான்" என்ற கருடன்!
14.காஷ்மீரில் மறைந்த நாகர்களின் நாகரீகம்

7 comments:

சார்வாகன் said...


வணக்கம் சகோ,

அருமையான பதிவு.

// சமஸ்கிருதம், ஒரு இனத்தை சேர்ந்த மக்களின் தாய் மொழியாக இருந்ததற்கான ஆதாரம் எதுவுமில்லை. அது, இறைவனை வழிபடவும், மத இலக்கியங்களை புனையவும், பிராமணர்களால் பயன்படுத்தப் பட்ட "இரகசிய" மொழியாகும்.//


சமஸ்கிருதம் பற்றிய வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் ஒரு கட்டுரை எழுது ஒரு வேண்டுகோள்.

நன்றி!!!

Kaththukutti Communist said...

தோழரே நீங்கள் சொல்லுவது உண்மை தான்,ஆனால் யுடுப் போன்றவற்றி காட்டப்படும் ஆவண படம் எப்படி பொய்யாக இருக்குமா என்பது என் கேள்வி ஆப்பிக்கவில் தான் நாம் முன்னோர் வந்து இருப்பார்.ஆனால் you tube போடுவது எப்படி உண்மை இல்லை என்று நம்புவது.உங்கள் அந்த உரலியை ஏற்கவே படித்துவிட்டேன்.ஆனால் அறிஞர்கள் சொல்லுவது எப்படி பொய்யாக் இருக்கும் ஆப்பிரிக்காவில் இருந்து வந்து நாம் குமரி கண்டத்தில் குடியேறி இருக்கலாம் அல்லவா? உங்கள் பதில் அவசியம் தேவை. பக்ளிறு நதி ஏன் நைல் நதியா? என்று கேள்வி எழுக்கின்றது.அதே போல நாகர்களின் மொழி தமிழா? அதே போல தமிழ் என்று பெயர் எப்போது தமிழுக்கு வைக்கப்பட்டது.முற்காலம் எத்தனை இனங்களுக்கு தமிழ் தாய் மொழியாக கொண்டது.தெரிந்தால் விடை பகிரவும்

Kalaiyarasan said...

யு டியூப் ஆவணப் படத்தை எனக்கு காட்டுங்கள். நானும் பார்க்கிறேன். எனக்குத் தெரிந்த வரையில், பல தமிழினவாதிகள் ஆவணப்படங்கள் சொல்வதை திரிபுபடுத்தி தமது அரசியல் நலன்களுக்காக பயன்படுத்தி வருகின்றனர். ஆப்பிரிக்காவில் இருந்து குமரி கண்டத்தில் குடியேறி இருக்கலாம், அல்லது குமரி கண்டத்தில் இருந்தும் ஆப்பிரிக்காவில் குடியேறி இருக்கலாம். அதுவல்ல பிரச்சினை இங்கே. எமது கண்ணுக்கு முன்னால் தெளிவாக தெரியும் சாட்சியங்களை விட்டு விட்டு, எதற்காக ஒரு கற்பனையான குமரி கட்னத்தை தேடிச் செல்ல வேண்டும்? கையிலே வெண்ணையை வைத்துக் கொண்டு அலையும் முட்டாள்தனமாக தெரிகின்றது.
தமிழின வாதிகளைப் பொறுத்த வரையில், உலகில் முன் தோன்றிய மூத்த குடி தமிழ் என்பார்கள். உலக மக்கள் அனைவரும் தமிழ் பேசினார்கள் என்பார்கள். அப்படியானால் எதற்காக, தமிழ் சகோதர இனங்களுடன் பகைமை பாராட்டுகிறார்கள் என்ற கேள்விக்கு அவர்களிடம் விடை கிடையாது. அவர்களது அரசியல் முழுக்க முழுக்க பேரினவாத தன்மை கொண்டது. சிங்களவர்கள், கன்னடர்கள், ஜெர்மானியர்கள், என்று அனைத்து சமூகங்களிலும் இவ்வாறான பேரினவாதம் பேசுவோர் காணப் படுகின்றனர். இதெல்லாம் விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப் பட்ட உண்மைகள் அல்ல. பஹ்ருளி ஆறு நைல் நதியா என்பது எனக்குத் தெரியாது. நாகர்கள் எல்லோரும் ஒரே மொழி பேசியிருக்க வாய்ப்பில்லை. தென்னிந்திய நாகர்கள் தமிழ் போன்ற ஒரு மொழி பேசி இருக்கலாம். இலங்கைத் தீவில் வாழ்ந்த நாகர்கள் எலு மொழி பேசினார்கள். எலு என்ற சொல்லில் இருந்து தான், ஈழம், சிங்களம் ஆகிய சொற்கள் வந்தன. சிங்கள இனவாதிகளும், தமிழ் இனவாதிகளும் இந்த உண்மையை ஒத்துக் கொள்ள மாட்டேன் என்று அடம் பிடிப்பார்கள்.

iRFAN said...

அருமையான தொடருக்கு நன்றி கலையரசன். இந்த தொடரில் நீங்கள் தொட்டுச் சென்ற எல்லாளன், துட்டகைமுனு, கந்தன், நாகர், எலு மொழி (குறிப்பாக இலங்கையின் தொன்மை) சம்பந்தமாக விரிவாக எழுத முடியுமாயின் தொடருங்கள்..மிகவும் உபயோகமாக இருக்கும். வாழ்த்துக்கள்.

செங்கதிரோன் said...

ஆப்பிரிக்காவில் இருந்து குமரி கண்டத்தில் குடியேறி இருக்கலாம், அல்லது குமரி கண்டத்தில் இருந்தும் ஆப்பிரிக்காவில் குடியேறி இருக்கலாம். அதுவல்ல பிரச்சினை இங்கே. எமது கண்ணுக்கு முன்னால் தெளிவாக தெரியும் சாட்சியங்களை விட்டு விட்டு, எதற்காக ஒரு கற்பனையான குமரி கட்னத்தை தேடிச் செல்ல வேண்டும்?

நண்பர் கலை அவர்களே குமரிக்கண்ட்த்தினை பற்றி முழுவதும் அறிந்து கொள்வதன் மூலம் மட்டுமே தமிழர்களின் உண்மையான வரலாற்றினை வெளிக்கொணர முடியும். அது மட்டுமன்றி ஆபிரிக்காவில் இருந்து இடம் பெயர்ந்து வந்திருந்தாலும் அங்கிருந்த கலாசார மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களிருந்து முற்றிலும் மாறுபட்ட தன்மையினை தமிழனம் அடைந்திருக்கிறது அது எவ்வாறு ஏற்பட்டது என்பதனை அறிய குமரிக்கண்டத்தினை பற்றிய முழுமையான ஆராய்ச்சி மட்டுமே உதவும் மற்றபடி ஆரியர்களைப் போன்றலாமல் தமிழர்கள் தாங்கள் ஆப்பிரிகாவிலிருந்து இடம் பெயர்ந்தவர்கள் என்பதனை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

கட்டுரையில் வரும் பல்வேறு வகையான் தகவல்களைப் படிக்கும்பொழுது அதற்குப் பின்னால் உள்ள உங்களின் அபரிமிதமான உழைப்பு தெரிகின்றது..மிக்க நன்றி..

mubarak kuwait said...

கலைஅரசன் அவர்களே உங்கள் உழைப்பு அளப்பரியது தொடருங்கள், வாழ்த்துக்கள் என்று ஒரு வரியில் சொல்ல முடியாது, நீங்கள் எழுதுகின்ற ஒவ்வொரு பதிவும் பிற்காலத்தில் பல்கலைகழகத்தில் ஆராய்ச்சி கட்டுரைகளாக மாணவர்களுக்கு வர வேண்டும் என்பது என்னுடய விருப்பம், தொடருங்கள் உங்கள் பணியை.

mubarak kuwait said...

கலைஅரசன் அவர்களே உங்கள் உழைப்பு அளப்பரியது தொடருங்கள், வாழ்த்துக்கள் என்று ஒரு வரியில் சொல்ல முடியாது, நீங்கள் எழுதுகின்ற ஒவ்வொரு பதிவும் பிற்காலத்தில் பல்கலைகழகத்தில் ஆராய்ச்சி கட்டுரைகளாக மாணவர்களுக்கு வர வேண்டும் என்பது என்னுடய விருப்பம், தொடருங்கள் உங்கள் பணியை.