Wednesday, November 14, 2012

கொலம்பிய புரட்சி இயக்கத்தில் ஒரு ஐரோப்பிய பெண் போராளி


கொலம்பியாவில் ஒரு ஆயுதப் புரட்சி மூலம் மார்க்சிய-லெனினிச அரசை அமைப்பதற்காக, கடந்த பல தசாப்தங்களாக போராடிக் கொண்டிருக்கும் FARC இயக்கம், தற்பொழுது அரசுடன் சமாதான பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றுகின்றது. நோர்வே, கியூபாவின் மத்தியஸ்தத்துடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் ஒரு நெதர்லாந்து பெண்மணியும் கலந்து கொள்கிறார்.

தான்யா நைமையர் (Tanja Nijmeijer), பல்கலைக்கழக பட்டப் படிப்பை முடித்த பின்னர், கொலம்பியா சென்று FARC  இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். இயக்கத்தில் அவரது பெயர் அலெக்சான்ட்ரா. ஒரு தடவை, கொலம்பிய இராணுவ நடவடிக்கையின் பின்னர், கைப்பற்றப்பட்ட FARC முகாமில் இருந்து, தான்யாவின் தினக்குறிப்பேடு கண்டுபிடிக்கப் பட்டது. அது ஊடகங்களுக்கு பகிரங்கப் படுத்தப் பட்ட பின்னரே, நெதர்லாந்து பெண் போராளி பற்றி உலகம் அறிந்து கொண்டது. கொலம்பியா தலைநகர் பகொட்டாவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்றில் சம்பந்தப் பட்டதற்காக, கொலம்பிய அரசினாலும், அமெரிக்க அரசினாலும் தேசப்படும் பயங்கரவாத சந்தேகநபரான தான்யா, ஒஸ்லோவில் நடந்த முதலாம் கட்ட பேச்சுவார்த்தையில் பங்குபற்ற தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், இந்த வாரம் கியூபாவில் நடைபெறும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள அனுமதிக்கப் பட்டார். கியூபா வந்த தான்யாவை, நெதர்லாந்து பத்திரிகையாளர்கள் சந்தித்து பேட்டி கண்டனர். அந்தப் பேட்டியில் பேசப்பட்ட விடயங்களை இங்கே மொழிபெயர்த்து தருகிறேன். 
----------------------------------------------------------------------------------------------------------

(நெதர்லாந்து நாட்டை சேர்ந்த FARC பெண் போராளி தான்யா நைமையர், முதல் தடவையாக நெதர்லாந்து ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணல்)

FARC இயக்கத்தில், அலெக்சான்ட்ரா என்று அழைக்கப் படுபவர், அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்க தயாராக இருக்கிறார். தான்யா நைமையர் (34 வயது), ஒரு வாரம் கியூபாவில் தங்கியிருக்கும் வேளை, இணையம் ஊடாக அவரைப் பற்றியும், கொலம்பிய நிலைமை, FARC  இயக்கம் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்.

FARC  இயக்கம் குறித்து, ஊடகங்கள் எதிர்மறையான கருத்துக்களை கொண்டிருப்பதையிட்டு அவர் அறிந்திருக்கிறார். "பல வருடங்களாக, ஊடகங்கள் FARC  எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. நாங்கள் ஏன் போராடுகின்றோம் என்று, எமது பக்க நியாயம் குறித்து பேசுவதற்கு, எமக்கு சந்தர்ப்பம் வழங்கப் படவில்லை." குண்டுத் தாக்குதல்கள், கடத்தல்கள் இவற்றை சுற்றித் தான் அந்த உருவகம் கட்டமைக்கப் படுகின்றது, என்று அவர் கருதுகிறார். "எவராவது அரசுக்கு வரி செலுத்தா விட்டால், சிறைக்கு செல்ல வேண்டும். எவராவது எமது இயக்கத்திற்கு புரட்சிகர வரி கட்டா விட்டால், எங்களது சிறையில் அடைத்து வைப்போம். நாம் அப்படிச் செய்தால், அதனை ஆட் கடத்தல் என்று கூறுகின்றனர்." தான்யா இங்கே புரட்சிகர வரி என்று குறிப்பிடுவது, வணிக நிறுவனங்கள் FARC  இயக்கத்திற்கு மாதாமாதம் கட்ட வேண்டிய தொகையை ஆகும். 

"(குண்டுத்) தாக்குதல்கள் பற்றிய எமது நிலைப்பாடு இது: நாங்கள் ஒரு இராணுவம். உயிர்களைக் கொல்லும்  ஆயுதங்களுக்கு எதிராக நாங்களும் ஆயுதங்களை பாவிக்கிறோம். நாங்கள் இராணுவம், துணைப்படை, பொலிஸ் ஆகிய அரச படைகளை எதிர்த்து போராடி வருகின்றோம். அந்தப் போராட்டத்தில் மரணங்கள் சம்பவிக்கின்றன. ஏனென்றால் இது ஒரு யுத்தம். அவர்கள் எங்களை தாக்குகிறார்கள். நாங்கள் அவர்களை தாக்குகின்றோம்." ஆயுதப் போராட்டம் பின்னடைவை அடையவில்லை என்று அந்த நெதர்லாந்து பெண்மணி கருதுகின்றார். கொலம்பியாவில் அமைதியான வழியில் அரசியல் நடத்துவதற்கு இடமில்லை. எண்பதுகளில் எமது அரசியல் கட்சி, முற்று முழுதாக அழித்தொழிக்கப் பட்டது. இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள் கொன்றொழிக்க பட்டனர். அது நியாயமானது அல்ல. மக்களுக்கு எதிராக அளவுக்கதிகமான அடக்குமுறையை பிரயோகிக்கும் நாட்டில் ஜனநாயகம் பற்றி பேச முடியாது. ஒரு வேளை உணவுக்காக, தமது ஓட்டுக்களை விற்குமளவிற்கு வறுமை அங்கே தாண்டவாடுகின்றது. இப்படியான நிலைமையில், அந்த நாட்டில் ஜனநாயக அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் இருப்பதாக கூற முடியாது. 

தான் சமாதான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வது, சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக என்ற கூற்றை தான்யா மறுக்கின்றார்.  "பத்து வருடங்களாக FARC  இயக்கத்தில் போராளியாக இருப்பதாலும், ஆங்கிலம் பேசுவதாலும், ஆவணங்களை மொழிபெயர்க்க முடியுமென்பதாலும்...." கலந்து கொள்வதாக அவர் தெரிவித்தார். ஒரு வசதியான செல்வந்த நாட்டில் வாழ்ந்த, பட்டதாரியான தான்யா, தான் ஒரு கெரில்லா போராளியாக கொலம்பிய நாட்டிற்கு வேண்டிய உதவிகளை செய்யலாம் என நம்புகின்றார். "எல்லா வகையான போராட்டங்களும் முக்கியமானவை. ஒரு கெரில்லா போராளியாவதை நானாகவே தெரிவு செய்து கொண்டேன். பிற போராளிகளுடன் உணர்வுத் தோழமையை வகுத்துக் கொண்ட மன நிறைவை அளிக்கின்றது. நான் ஒரு ஊடகவியலாளர் ஆக இருந்திருந்தால், சிலநேரம் நடுநிலையான செய்திகளை பகிர்ந்திருக்கலாம். ஆனால், அதனால் நான் அடையப் போவது என்ன?" 

கொலம்பியாவில் நடந்த தாக்குதல்களுக்காக குற்றம் சாட்டப் பட்டுள்ளதால் தனது எதிர்கால வாழ்வுக்கு எந்தவித இடையூறும் வராது என்று தான்யா நம்புகின்றார். "பேரூந்து ஒன்றில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில், எவருமே கொல்லப்படவோ, காயப்படவோ இல்லை. வரி செலுத்த மறுக்கும் வணிக நிறுவனங்கள் மீதான தாக்குதல்களும், நாடு இரவில் தான் இடம்பெறுகின்றன. அந்த தாக்குதல்களில் ஒரு பொதுமகனும் கொல்லப் படவில்லை என்பதை, நான் நூறு சதவீதம் உறுதியாக கூற முடியும்." சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப் பட்டாலும், தான்யா கொலம்பியாவில் தங்கி விடவே விரும்புகின்றார். "FARC  ஒரு புரட்சிகர இராணுவம் என்பதற்கு அப்பால், ஒரு அரசியல் கட்சி ஆயுதமேந்தியுள்ளது என்றும் கூறலாம். சமாதானம் வந்தால், ஒரே இலக்கை நோக்கி அமைதியான வழியில் போராடுவோம். நான் எனது வாழ்நாள் முழுவதும் அந்த நாட்டிலேயே தங்கியிருப்பேன். எனது கனவு நனவாகும் வரையில், நான் அதற்காக போராட விரும்புகின்றேன்." 

(நன்றி: Het Parool, 12 november 2012)

(மொழிபெயர்ப்பு: கலையரசன்) 


கொலம்பியா பற்றிய முன்னைய பதிவுகள்:
1.கொலம்பியா: தென் அமெரிக்காவின் வியட்நாம்
2.FARC கெரில்லாக்களுடன் 10 நாட்கள்


1 comment:

தமிழ் காமெடி உலகம் said...

அந்த பெண்ணிற்கு என் பாராட்டுக்கள்.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)