Friday, May 24, 2013

சுவீடனின் வேலையில்லா திண்டாட்டம் : ஸ்டாக்ஹோல்ம் நகரம் எரிகின்றது!


சுவீடன், ஸ்டொக்ஹோம் நகரின் புறநகர்ப் பகுதியான ஹூஸ்பி (Husby) யில், ஞாயிற்றுக் கிழமை தொடங்கிய கலவரம், ஐந்தாவது நாளாக தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. உழைக்கும் வர்க்க குடியிருப்புகள் நிறைந்த அந்த புறநகர்ப் பகுதி, தலைநகரின் ஏழைகள் அதிகமாக வசிக்கும் பகுதியாகும். பெரும்பாலும் வெளிநாட்டுக் குடியேறிகளை கொண்டது. பொருளாதார நெருக்கடி, வேலையில்லாப் பிரச்சினையினால் அதிகமாகப் பாதிக்கப் பட்டவர்கள் வாழும் இடம். ஒரு வாரத்திற்கு முன்பு, அந்த இடத்தில் வாழ்ந்த வயோதிபர் ஒருவர்,போலீஸ்காரர்களின் துப்பாக்கிச்சூடு காரணமாக உயிரிழந்தார். "அந்த 69 வயது முதியவர், கத்தி வைத்துக் கொண்டு மிரட்டியதாகவும், தற்பாதுகாப்புக்காக சுட்டதாகவும்..." போலிஸ் கூறுகின்றது. (Man skjuten till döds av polis i Stockholm, http://www.expressen.se/nyheter/man-skjuten-till-dods-av-polis-i-stockholm/)


பொலிஸ் அறிக்கையில் பல உண்மைக்கு புறம்பான தகவல்கள் இருந்ததால், ஆத்திரமுற்ற இளைஞர்கள் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலிஸ் படையை எதிர்த்து கற்களை வீசினார்கள். வணிக நிலையங்கள், வாகனங்கள் எரித்து நாசமாக்கப் பட்டன. பொருளாதார நெருக்கடி காரணமாக, ஐரோப்பிய நாடுகளில் வாழும் இலட்சக் கணக்கான மக்கள் வேலையிழந்து, வறுமையில் வாடுகின்றனர். இதனால், பல ஐரோப்பிய நகரங்கள் எந்த நேரமும் கலவரம் வெடிக்கக் கூடிய நேர வெடிகுண்டுகளாக காணப்படுகின்றன.


சுவீடிஷ் பொலிசின் இனவெறிப் பேச்சுக்களே, ஞாயிறு இரவு ஸ்டொக்ஹோம் நகரில் இடம் பெற்ற கலவரத்திற்கு காரணம் என்று தெரிய வருகின்றது. "குரங்குகள், நீக்ரோக்கள்" போன்ற இனவெறி வசைச் சொற்களை, அங்கு கடமையில் இருந்த போலிஸ் அதிகாரிகள் பயன்படுத்தி உள்ளனர். சுவீடிஷ் போலிஸ் அடிக்கடி இவ்வாறு நடந்து கொள்வதாகவும், ஞாயிற்றுக்கிழமை அதன் எதிரொலியாக வன்முறை வெடித்துள்ளதாகவும் தெரிய வருகின்றது. முகமூடி அணிந்த இளைஞர்களால், குறைந்தது 100 கார்கள் எரிக்கப் பட்டுள்ளன.

பெரும்பாலும் சோமாலிய இளைஞர்களே கலவரத்தில் ஈடுபட்டதால், இதனை "முஸ்லிம் இளைஞர்களின் வெறியாட்டம்" என்ற அர்த்தத்தில், வலதுசாரி சுவீடிஷ் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சுவீடிஷ் இனவெறியர்களும் சோமாலியர், முஸ்லிம்கள், வெளிநாட்டவர்களுக்கு எதிரான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். கலவரம் இடம்பெற்ற ஹூஸ்பி (Husby) என்ற புறநகர் பகுதியில் வசிக்கும் 80 சதவீதமானோர் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த குடியேறிகள் ஆவர். அண்மைக்கால பொருளாதார நெருக்கடி, அதனால் ஏற்பட்ட வேலையில்லாப் பிரச்சினை, வாய்ப்புகள் மறுக்கப்படும் வெளிநாட்டவர்கள், இது போன்ற சமூகப் பிரச்சனைகளை மூடி மறைப்பதற்கு, இனவாத திரிபுபடுத்தல்கள் உதவுகின்றன. "சுவீடன் போன்ற ஸ்கண்டிநேவிய நாடுகளில் இனவாதம் அறவே இல்லை" என்று பலர் அப்பாவித்தனமாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்னர், ஏதோ ஒரு நிறுவனம் நடத்திய புள்ளிவிபர ஆய்வு ஒன்றும் அவ்வாறு தெரிவித்திருந்தது.

ஹூஸ்பி புறநகர் பகுதியில் தொடங்கிய கலவரம், தற்போது ஸ்டொக்ஹோல்ம் நகரின் பிற பகுதிகளுக்கும் பரவி வருகின்றது. வீதியோரமாக நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும் கார்கள் இரவோடிரவாக கொளுத்தப் படுகின்றன. பெரும்பாலும் 15 முதல் 19 வயதான இளைஞர்களே கலவரத்தில் ஈடுபடுகின்றனர். சில நேரம், 12 அல்லது 13 வயது சிறுவர்களும் காணப்படுகின்றனர். நேற்றும் பொலிஸ் நான்கு பேரை கைது செய்தது. கலவரத்தில் ஈடுபடும் இளைஞர்கள் எந்த இனத்தை சேர்ந்தவர்கள் என்பதை பெரும்பாலான ஊடகங்கள் குறிப்பிட்டு எழுதுவதை தவிர்த்து வருகின்றன. இருப்பினும் வலதுசாரி ஊடகங்கள், "சோமாலியர்கள், முஸ்லிம்கள்" என்று குறிப்பிட்டு எழுதி, "பன்முகக் கலாச்சார சமூகத்தின் எதிர்விளைவு" என்று, மூன்றாமுலக நாடுகளின் வந்தேறுகுடிகளுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சியை காட்டி வருகின்றன. ஹூஸ்பி புறநகர் பகுதியில், ஒரு 69 வயது முதியவரை போலீஸ்காரர்கள் சுட்டுக் கொன்றது தான், கலவரத்திற்கு மூல காரணம். போலிஸ் வன்முறைக்கு பலியான வயோதிப நபர், "ஒரு ஐரோப்பிய வெள்ளை இனத்தவர்" என்று போலிஸ் அறிவித்த தகவலை, இந்த வலதுசாரி ஊடகங்கள் மூடி மறைப்பது குறிப்பிடத் தக்கது.

வேலையில்லாதோர் எண்ணிக்கை, ஐரோப்பிய நாடுகளின் பூர்வீக வெள்ளையின மக்களிடையே குறைவாகவும், வந்தேறுகுடி சமூகங்களில் அதிகமாகவும் உள்ளது. அதற்கு அவர்களின் சோம்பேறித்தனம் மட்டுமே காரணம் என்பது, பாதிக்கப்பட்ட மக்களை குறைகூறும் அயோக்கியத்தனம் ஆகும். வந்தேறுகுடி சமூகங்களில், அதிகமாக படித்து, பட்டம் பெற்றவர்களுக்கு கூட வேலை இலகுவில் கிடைப்பதில்லை. பல்வேறு காரணங்களை கூறி தட்டிக் கழிக்கிறார்கள். நீங்கள் எவ்வளவு சரளமாக அவர்களது மொழியை பேசினாலும், மொழிப் புலமை காணாது என்று கூறுவார்கள். உங்கள் நாட்டில் இருந்து கொண்டு சென்ற சான்றிதல்களை காட்டினால், அவற்றை தகுதி போதாது என்று கூறி புறக்கணிப்பார்கள். பொதுவாகவே, தொழில் வாய்ப்புகள் குறைவாகவும், வேலை தேடுவோர் அதிகமாகவும் இருக்கும் காலங்களில், தங்களது இனத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வேலை கொடுப்பார்கள். இது ஏற்கனவே நிரூபிக்கப் பட்ட உண்மை.

நீங்கள் அனுப்பும் CV யில் இருக்கும் பெயர், பிறந்த இடம் போன்ற விபரங்களை பார்த்து விட்டே, உங்களை நேர்முகப் பரீட்சைக்கு கூப்பிட மாட்டார்கள். நீங்கள் அந்த நாட்டை சேர்ந்த பூர்வீக பிரஜை என்றால், வாய்ப்பு அதிகமாக இருக்கும். வேலையில்லா பிரச்சினை ஏற்படும் காலங்களில், வந்தேறுகுடிகள் தான் அதிகமாக பாதிக்கப் படுகின்றனர். அதனால், அவர்கள் அதிகமாக அரசின் உதவிப் பணத்தில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. அது கிடைக்காவிட்டால், திருடியோ, பிச்சை எடுத்தோ தான் வாழ வேண்டி இருக்கும். அது இந்த ஐரோப்பிய நாடுகளின் இமேஜை பாதித்து விடும். அதற்குப் பிறகு, இந்தியா போன்ற மூன்றாமுலக நாடுகளிக்கும், வளர்ச்சி அடைந்த மேற்கு ஐரோப்பிய நாடுகளிக்கும் இடையில் வித்தியாசம் இல்லாது போய்விடும்.

அனேகமாக, எல்லா மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும், வந்தேறு குடிகளின் எண்ணிக்கை மொத்த சனத்தொகையில் ஒரு சதவீதம் கூட இல்லை. அதனால், அவர்களில் எத்தனை இலட்சம் பேர் அரச உதவிப் பணத்தில் வாழ்ந்தாலும், அதே மாதிரி வாழும் பூர்வீக வெள்ளையரின் எண்ணிக்கைக்கு ஈடாகாது. அதாவது, அரச உதவிப்பணத்தில் வாழும் பூர்வீக வெள்ளையின மக்களின் எண்ணிக்கை, வந்தேறுகுடிகளை விட பல மடங்கு அதிகம். இதனை பல புள்ளிவிபரங்கள் உறுதிப் படுத்துகின்றன.

No comments: