Sunday, January 26, 2014

போர்க் குற்றவாளிகளை காப்பாற்றும் "இனியொரு சதிக் கும்பல்"


"இனியொரு" (http://inioru.com/) என்ற பெயரில் இணையத் தளம் நடத்தும், "அசோக்- சபா நாவலன் கும்பல்", 2009 ம் ஆண்டிலிருந்தே, என் மீது "INSD உறுப்பினர்" முத்திரை குத்துவதற்கு படாத பாடுபடுகின்றது. எதற்காக? யாரைத் திருப்திப் படுத்துவதற்காக இந்த முத்திரை குத்தல்? அதற்கான காரணம் மிகத் தெளிவானது.

International Network of Sri Lankan Diaspora (INSD) என்பது, ஜெர்மனியை தளமாகக் கொண்ட புலம்பெயர் இலங்கையரின் அமைப்பு. 2009 ம் ஆண்டு, இலங்கை அரசும், அரசுக்கு ஆதரவான சிங்கள ஊடகங்களும், INSD உறுப்பினர்களை "தேசத் துரோகிகள்!" என்று பிரகடனம் செய்தன. இலங்கையில் வாழும் உறவினர்களுக்கு, அரச புலனாய்வுத் துறையினால் அல்லது சிங்கள இன வெறியர்களினால், கொலைப் பயமுறுத்தல்கள் விடுக்கப் பட்டன.

அதற்குக் காரணம், அந்த நேரத்தில் தான் இலங்கை அரசின் போர்க்குற்றங்களை உலகிற்கு எடுத்துக் காட்டிய, Channel 4 ஆவணப் படம் வெளியானது. (பார்க்க: Sri Lanka's Killing Fields: War Crimes Unpunished) இறுதிப் போர் முடிந்த பின்னர், நிர்வாணமான புலிக் கைதிகளை, ஸ்ரீலங்கா இராணுவம் சுட்டுக் கொல்லும் வீடியோவை அநேகமானோர் பார்த்திருப்பார்கள்.

அந்த போர்க்குற்ற ஆவண வீடியோவை, சனல் 4 இடம் ஒப்படைத்தவர்கள், தொடர்புகளுக்கு ஜெர்மனியில் உள்ள  INSD அலுவலக முகவரியை எழுதி அனுப்பினார்கள். உண்மையில், அந்த வீடியோவை சனல் 4 க்கு அனுப்பியது, JDS என்ற புலம்பெயர்ந்த சிங்கள ஊடகவியலாளர்களின் அமைப்பு. அவர்கள் இப்போதும் தமிழர்களுக்கு ஆதரவாக சர்வதேசத்தில் குரல் கொடுத்து வருகின்றனர். JDS ஊடகவியலாளர்கள் சிலர், INSD உறுப்பினர்களாகவும் இருந்துள்ளனர். (JDS இணையத் தளம்: Journalists for Democracy in Sri Lanka

2009 ஆகஸ்ட் மாதம், இலங்கையின் போர்க்குற்றங்களை காட்டும், சனல் 4 ஆவணப் படம் வெளியானது. அதே ஆண்டு செப்டம்பர் மாதம், ஸ்ரீலங்கா பாராளுமன்றத்தில் உரையாற்றிய, அமைச்சர் மகிந்த சமரசிங்க, "INSD என்ற புலம்பெயர்ந்த இலங்கையர் அமைப்பின் உறுப்பினர்களே, இலங்கைக்கு களங்கம் ஏற்படுத்தும் வீடியோவை, சனல் 4 க்கு கொடுத்து வெளியிட்டதாக" பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். மேலும், "INSD, ஒரு ஏகாதிபத்திய சதியில் இயங்கும், புலி ஆதரவு NGO" என்றும் பழி சுமத்தினார்.

ஸ்ரீலங்கா அரசின் தூண்டுதலின் பேரில், அரச ஆதரவுப் பத்திரிகைகள், INSD உறுப்பினர்களை "தேசத் துரோகிகள்" என்று தூற்றும் தலைப்புச் செய்திகளை வெளியிட்டன. INSD மீதான அரசின் பிரச்சாரம் காரணமாக, பெரும்பான்மை சிங்கள மக்கள் "INSD தேசத் துரோகிகளுடன்" தொடர்பு கொள்ள விடாது தடுக்கப் பட்டனர். INSD உறுப்பினர்கள், புலம்பெயர்ந்த ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த போதிலும், இலங்கையில் இருந்த அவர்களது உறவினர்கள் பயமுறுத்தப் பட்டனர். இதனால், பல குடும்ப உறுப்பினர்கள், INSD உறவினருடனான தொடர்புகளை முற்றாகத் துண்டிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.  

"அசோக்- சபா நாவலன் கும்பல்", சிறிலங்காவில் சிங்கள இனவெறியர்கள் செய்த அதே வேலையை, புலம்பெயர்ந்த நாடுகளில் திட்டமிட்டு செய்து வருகின்றது. அதே வருடம் (2009), நவம்பர் மாதம், வினவு தளத்தில், போலிப் பெயரில் ஒருவர், என் மீதான அவதூறு ஒன்றை 'கொமன்ட்' பகுதியில் எழுதினார். அதில்,  " நான் ஒரு INSD உறுப்பினர்" என்று பழி சுமத்தினார். (பார்க்கவும்: "இனியொரு சதி செய்வோம்") அதை "நிரூபிப்பதற்காக", ஜெர்மனியில் வாழும் INSD இளைஞர் ஒருவரின் தனிப்பட்ட வலைப்பூவில் (Blog), எனது "கலையகம்" வலைப்பூவுக்கு கொடுத்திருந்த இணைப்பை சுட்டிக் காட்டினார்கள். (அதன் முகவரி இது: Sri Lankan Diaspora Blog

ஒரே வருடத்தில், ஒரே காலத்தில், இலங்கையிலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் INSD உறுப்பினர்களை, அரசுக்கு எதிரான தேசத் துரோகிகளாக சித்தரிக்கும், விஷமத்தனமான அவதூறுப் பிரச்சாரம் நடந்துள்ளது. இதெல்லாம் தற்செயலாக நடந்திருக்க முடியுமா? 

அந்த நண்பரின் வலைப்பூவை பார்ப்பவர்களுக்கு, "நான் மட்டுமே INSD யில் அங்கம் வகிக்கும் ஒரேயொரு உறுப்பினராக"  நினைக்கத் தோன்றும். ஏனென்றால், வேறு யாருடைய பெயரும் அதில் இல்லை. நட்பு அடிப்படையில், எத்தைனையோ பேர் என்னுடைய வலைப்பூவுக்கு இணைப்புக் கொடுத்திருக்கிறார்கள். அது போலத் தான், INSD ஆதரவாளரான அந்த இளைஞரும், தனது சொந்த வலைப்பூவை பயன்படுத்தி இருக்கிறார். (INSD கருத்தரங்கில் கலந்து கொண்ட பின்னரே, நான் அவருக்கு அறிமுகமானேன் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.) மேலும், அசோக்- சபா நாவலன் கும்பல் குறிப்பிடும் Blog, INSD அமைப்பின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அல்ல. (INSD யின் உத்தியோகபூர்வ இணையத் தளம் இது: International Network of Sri Lankan Diaspora)

INSD நடத்திய மகாநாடுகளில், பல விதமான அரசியல்- சமூக ஆர்வலர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். சமாதான பேச்சுவார்த்தை காலத்தில், இலங்கையில் இருந்து அழைக்கப் பட்ட, தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள். நானும் ஒரு தடவை, INSD கருத்தரங்கில் கலந்து கொண்டது உண்மை. ஆனால், கூட்டங்களில் கலந்து கொண்ட எல்லோரும் INSD அமைப்பின் செயற்பாட்டாளர்கள் ஆகி விட முடியாது. அந்த அமைப்பினால் சேர்த்துக் கொள்ளப் பட்ட உறுப்பினர்களது பட்டியலும், வெறும் ஆதரவாளர்களின் எண்ணிக்கை தான். ஜெர்மனியில் புலம்பெயர்ந்து வாழும், INSD ஆதரவாளர் ஒருவர், தனது இணையத் தளத்தில் எனது வலைப்பூவுக்கு 'லிங்க்' கொடுத்தார் என்பதற்காக, என்னையும் அதனுடன் தொடர்பு படுத்துவது அபத்தமானது.

இப்போது மீண்டும், பேஸ்புக்கில், அதே "ஆதாரத்தை" கொண்டு வந்து காட்டி, அதே குற்றச்சாட்டை (INSD உறுப்பினர்) என் மேல் சுமத்துகிறார்கள். அசோக், சபா நாவலன் மாபியா கும்பல், யாரைத் திருப்திப் படுத்துவதற்காக, இவ்வாறான அவதூறுகளை தொடர்ந்தும் சொல்லி வருகின்றது என்பது தெரியாததல்ல. அவர்கள், எங்கிருந்து தமது தகவல்களை பெற்றுக் கொள்கிறார்கள் என்பதற்கான ஆதாரத்தை என்னால் தர முடியும். 

மேலே உள்ளது, " புலி ஆதரவு NGO வான,  INSD ஒரு தேசத் துரோகிகளின் அமைப்பு"  என்ற தலைப்புச் செய்தியை வெளியிட்ட ஸ்ரீலங்கா அரச ஆதரவு பத்திரிகையின் முன் பக்கம். சிங்களம் தெரிந்தவர்கள் வாசித்து அறிந்து கொள்ளலாம். (சிங்களம் தெரியாதவர்கள், நம்பிக்கையான ஒருவரிடம் கொடுத்து மொழிபெயர்த்து அறிந்து கொள்ளுங்கள்.)

அசோக்- சபா நாவலன் கும்பல் என்னைப் பற்றியும், INSD பற்றியும் கூறிய அத்தனை அவதூறுகளும், இது போன்ற சிங்கள இனவாத ஊடகங்களில் இருந்து அவர்களுக்கு கிடைக்கப் பெற்றவை தான். பெரும்பான்மையான தமிழ் மக்கள், சிங்கள பத்திரிகைகளை வாசிப்பதில்லை. அது இந்த சதிக் கும்பலுக்கு சாதகமானது. அப்பாவி வாசகர்களை  ஏமாற்றி, அவர்களுக்கு தவறான தகவல்களை கொடுப்பதன் மூலம், போர்க் குற்றவாளிகளை தப்ப வைப்பது தான், அசோக்- சபா நாவலன் கும்பலின் நோக்கமாக உள்ளது.

மேலதிக தகவல்களுக்கு:
1.Sri Lankan origin German linked by government to Channel-4 execution video reveals crucial facts
2.இனியொரு சதி செய்வோம்

3 comments:

Bhagath said...

தோழரே வணக்கம். நான் ம.க.இ.க, வினவு தளத்தின் ஆதரவாளன். ரயாகரனுடன் ம.க.இ.க விற்கு சில பிரச்ச்னைகளுடன் இருந்தாலும், என்னைப் பொறுத்தவரை நான் கலையரசன், ரயாகரன், இனியொரு மற்றும் புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சி ஆகியவற்றை நட்பு சக்திகளாகத் தான் பார்த்து வருகிறேன். ஆனால், இவர்களுக்குள் ஒற்றுமையில்லாமல் ஒருவரையொருவர் திட்டிக் கொள்வதும், அவதூறு கூறிக் கொள்வதும் மிகவும் வருத்தத்துக் குரியது.

தோழர்.கலையரசன் அவர்களே, யாழ்ப்பாண இலக்கியச் சந்திப்பில் லீணா மணிமேகலை, ஷோபா சக்தி உள்ளிட்டோருடன் நீங்களும் கலந்துகொண்டது பற்றி இனிஒருவில் ஒரு கட்டுரை வந்தது.

http://inioru.com/?p=36465

பிரதிகளை பெற நெதர்லாந்துக்கு உங்கள் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் நீங்கள் கலந்து கொண்டது சரியா? இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இதை நான் எதிர் நிலயில் இருந்து கேதவில்லை. நீண்ட காலம் உங்களுடைய தளத்தை வாசித்து வருபவன் என்ற முறையில் நட்புடன் தான் கேட்கிறேன்.

Kalaiyarasan said...

வணக்கம் தோழர் பகத்,

நானும் இனியொரு குழுவினரை நட்பு சக்தியாகக் கருதித் தான் நடந்து கொண்டேன். அவர்களுக்கும் எனக்கும் தனிப்பட்ட பிரச்சினை எதுவும் கிடையாது. நீண்ட காலமாக பழகி வந்தார்கள். இடையில், தாங்களாகவே தொடர்பை துண்டித்துக் கொண்டார்கள். அசோக், சபா நாவலன் ஆகியோர் எந்த நிகழ்விலும் கலந்து கொள்வதில்லை. யாருடனும் சேர்ந்து வேலை செய்வதில்லை. தங்களைத் தாங்களே தனிமைப் படுத்திக் கொண்டார்கள்.

சிறிது கால இடைவெளி விட்டு, இணையத்தில் என்னைப் பற்றிய அவதூறுகளை பரப்பி வந்தார்கள். நீங்கள் எடுத்துக் காட்டிய இணைப்புகளில் இருப்பது, அவதூறுகளும், தனி மனித தாக்குதல்களும் தான். அவற்றை நான் கண்டுகொள்ளாமல் புறக்கணித்து வந்தேன். அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

ஒன்று, நான் என்ன விளக்கம் கொடுத்தாலும், அதை ஆராய்ந்து பதிலளிக்கும் மனநிலையில் அவர்கள் இல்லை. நான் என்ன சொன்னாலும், திரும்பவும் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று வாதிப்பார்கள். அதனால், அவர்களுக்கு பதில் சொல்வதில் அர்த்தமில்லை.

இரண்டு, வேண்டுமென்றே பொய்களை புனைந்து அவதூறு செய்பவர்களின் நோக்கம், எம்மை வம்புச் சண்டைக்கு இழுப்பது. தங்களை கவனிக்க வைக்க வேண்டும் என்ற மனப்பிறழ்வு. நாம் அவர்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தால், அதை வைத்து மென்மேலும் விதண்டாவாதம் செய்து கொண்டிருப்பார்கள்.

யாழ்ப்பாண இலக்கிய சந்திப்புக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இலக்கியச் சந்திப்பு நடப்பதற்கு பல மாதங்களுக்கு முன்பிருந்தே,ஷோபாசக்தி குவேர்னிகா என்ற நூலைத் தொகுத்துக் கொண்டிருந்தார். அதில் எனது கட்டுரை ஒன்றும் இடம்பெற்றுள்ளது. மேலும், நெதர்லாந்தில் வசிப்பவர்கள், தொகுப்பு நூலை வாங்க விரும்புவோர் தொடர்பு கொள்வதற்கு எனது மின்னஞ்சல் முகவரியை கொடுத்திருக்கிறார்கள். அதில் தவறு ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நானே இன்னும் குவேர்னிகா நூலை கண்ணால் காணவில்லை.

அது மட்டும் தான். குவேர்னிகாவில் கட்டுரை எழுதியவர்கள் எல்லோரும் இலக்கியச் சந்திப்பில் கலந்து கொண்டவர்களா? சபா நாவலனும், அசோக்கும், மொட்டந்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதில் கெட்டிக் காரர்கள்.

நட்பு அடிப்படையில், பலர் என்னுடன் பழகுகிறார்கள். அதில் என்ன தவறு? அசோக், சபா நாவலன் கூட என்னோடு நட்பு அடிப்படையில் பழகி இருக்கிறார்கள். நாங்கள் நட்புடன் பழகும் எல்லோரும், ஒரே அரசியல் அமைப்பை சேர்ந்தவர்களா? அல்லது அப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால், அது நடக்கக் கூடிய விடயமா?

அசோக், சபா நாவலனின் முக்கியமான பிரச்சினை தாழ்வுச் சிக்கல். புலம்பெயர்ந்த நாடுகளில், யாருடனும் சேராமல் ஒதுங்கி வாழ்கிறார்கள். தங்களைத் தாங்களே தனிமைப் படுத்திக் கொள்கிறார்கள். இருவரும் ஒரு cult மாதிரி நடந்து கொள்கிறார்கள். காழ்ப்புணர்வு காரணமாக, இணையத்தில் வெவ்வேறு போலிப் பெயர்களின் பின்னால் ஒளிந்து கொண்டு, புனை கதைகள் எழுதுவதைத் தவிர வேறெதையும் அறியாதவர்கள். அப்படியானவர்களைப் பார்த்து, நாங்கள் பரிதாபப் படத் தான் முடியும்.

Bhagath said...

உங்களுடைய பதிலுக்கு நன்றி தோழரே. இனியொரு தோழர்கள் முத்திரை குத்துவதைத் தவிர்த்து தோழர்களுடன் விவாதித்துப் பேசி ஒரு முடிவுக்கு வர முயற்சிக்கலாம்.