Thursday, February 27, 2014

மேற்குலக ஜனநாயகம் ஆதரித்த உக்ரைனிய நாஜிகளின் சதிப்புரட்சி

கீவ் நகரசபை கட்டிடத்தில் தொங்கவிடப் பட்டுள்ள, உக்ரைனிய - நாஜி இனப்படுகொலையாளி ஸ்டெபன் பண்டேராவின் உருவப் படம்.

உக்ரைனில் "புரட்சி" நடந்துள்ளதாக, மேற்கத்திய ஊடகங்கள் படம் காட்டிக் கொண்டிருந்தன. தமிழ் வலதுசாரிகளும் அந்தப் "புரட்சியை" வரவேற்றார்கள். உண்மையில் யார் அந்தப் புரட்சியாளர்கள்? உக்ரைனின் நவ நாஸிகள், நவ பாசிஸ்டுகள் தான் மேற்குலகம் ஆதரித்த "புரட்சியாளர்கள்". உக்ரைனின் தலைநகரம் கீவை தமது கட்டுப்பாடுப்பாட்டில் கொண்டு வந்த பின்னர், நகர சபைக் கட்டிடத்தில் "பல புரட்சிக் கொடிகள்" பறந்தன. நாஜி, பாசிசக் கொடிகள் மட்டுமல்ல, அமெரிக்க வெள்ளையின நிறவெறியர்களின் கொடியும் அங்கே பறந்தது.

இரண்டாம் உலகப்போர் காலத்தில், நாஜிகளுடன் கூட்டுச் சேர்ந்து எழுபதாயிரம் போலிஷ் மக்களையும், யூதர்களையும் இனப் படுகொலை செய்த, உக்ரைனிய தேசியவாதிகளின் தலைவர் ஸ்டெபன் பண்டேராவின் ஆளுயர உருவப்படம், கீவ் நகரசபை மண்டபத்தினுள் வைக்கப் பட்டது. உலகம் முழுவதும், தாம் ஜனநாயகத்தை பாதுகாப்பதாக பீற்றிக் கொள்ளும் அமெரிக்காவும், பிரிட்டனும், ஐரோப்பிய ஒன்றியமும், உக்ரைனில் ஜனநாயக விரோத பாசிஸ்டுகளை ஆதரித்தார்கள். இதெல்லாம் பகிரங்கமாக நடந்து கொண்டிருந்தது. தற்காலத்தில் பாசிஸ்டுகளும், பாசிச அனுதாபிகளும் வெளிப்படையாகவே நடந்து கொள்கிறார்கள். யாருக்கும் வெட்கமில்லை.

கடந்த சில வாரங்களாக, கீவ் நகர வீதிகளை மறித்து, கூடாரங்களை அமைத்து தங்கியிருந்த பாசிசப் புரட்சியாளர்கள், அந்தப் பிரதேசங்களை தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் என்று அறிவித்திருந்தனர். அந்தக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள், நவ நாஜிகள், அல்லது உக்ரைனிய தேசியவாதிகளை மட்டுமே அனுமதித்தார்கள். மேற்கத்திய ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி கிடைத்திருக்கும் என்பதை இங்கே குறிப்பிடத் தேவையில்லை.

"பாசிச ஆர்ப்பாட்டக்காரர்களை சாதாரண மக்கள் போன்றும், அவர்கள் உக்ரைனிய பொலிஸ் படையை மட்டுமே எதிர்த்துப் போராடுவது போன்றும்", மேற்கத்திய ஊடகங்கள் பிரச்சாரம் செய்து வந்தன. ஆனால், உண்மை நிலைமை வேறு. பாசிஸ்டுகள், "உக்ரைனிய பொலிசை மட்டுமே, தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் அனுமதிக்கவில்லை" என்று நினைப்பது தவறு. உக்ரைன் அரசுக்கு எதிரான இடதுசாரிகளையும் தான் அனுமதிக்கவில்லை. சில இடங்களில், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் என்று அடையாளம் காணப் பட்டோர் கடுமையாக தாக்கப் பட்டனர்.

பாசிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் இருந்த கீவ் நகரப் பகுதிகள், கம்யூனிஸ்டுகள் செல்ல முடியாத ஆபத்தான இடங்களாக கருதப் பட்டன. கம்யூனிஸ்டுகள் மட்டுமல்ல, வேறெந்த கொள்கையை பின்பற்றும் இடதுசாரி அங்கே சென்றிருந்தாலும், அடித்துக் கொன்றிருப்பார்கள். ஆர்ப்பாட்டம் செய்த நவ நாஜிகளிடம் தாராளமாக பணம் புழங்கியது. (எல்லாம் மேற்குலக ஜனநாயகவாதிகள் அளித்த நன்கொடை தான்.) பலர் இராணுவ சீருடை அணிந்திருந்தார்கள். ஹிட்லர் காலத்து, நாஜி இராணுவ ஹெல்மெட் அணிந்திருந்தார்கள். அவர்களிடம் கத்தி, பொல்லு, கோடாலி போன்ற பயங்கரமான ஆயுதங்கள் இருந்தன. 

அனார்கிஸ்டுகள் கம்யூனிஸ்டுகள் அல்லர். எந்தவொரு அரச கட்டமைப்பையும் எதிர்க்கும், புரட்சிகரமான இடதுசாரி கொள்கையை பின்பற்றுபவர்கள். அவர்களைப் பொறுத்தவரையில், நடைமுறையில் உள்ள எல்லா அரசாங்கமும் எதிரி தான். அதனால் தான், தமிழில் "அராஜகவாதிகள்" (அரசு அற்றவர்கள்) என்றும் அழைக்கப் படுகின்றனர்.

சுமார் முப்பது உக்ரைனிய அனார்கிஸ்டுகள், கீவ் நகர ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ள சென்றனர். ஆனால், பாசிஸ்டுகள் அவர்களை அங்கே அனுமதிக்கவில்லை.
"இது எமது கட்டுப்பாட்டுப் பிரதேசம். வெளியே போங்கள்!" என்று கத்தினார்கள்.
"நாங்கள் அனார்கிஸ்டுகள். அரசை எதிர்ப்பவர்கள். நாங்களும் உங்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்திருக்கிறோம்..."பதிலளித்தனர் அனார்கிஸ்டுகள்.
"அனார்கிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள், ரஷ்யர்கள், யூதர்கள் என்று யாரையும் இங்கே அனுமதிக்க முடியாது." என்று பாசிஸ்டுகள் தமது சுயரூபத்தைக் காட்டினார்கள்.

ரஷ்ய ஆதரவு ஜனாதிபதி யனுகோவிச், ஒரு நவ லிபரல்வாதி என்பதற்காக, அவரை எதிர்க்கும் அனார்கிஸ்டுகள், ஒரு சில நாட்கள் அங்கே நின்று அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். திடீரென ஒரு நாள், நூற்றுக் கணக்கான பாசிஸ்டுகள் அவர்களை சுற்றிவளைத்தார்கள். அவர்கள் கைகளில் கத்தி, கோடாலிகள் போன்ற பயங்கரமான ஆயுதங்கள் இருந்தன. அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள சென்றவர்களுக்கே இந்த நிலைமை என்றால், யனுகோவிச் அரசை ஆதரித்தவர்களின் நிலைமை என்னவாகி இருக்கும் என்பதை, இங்கே சொல்லத் தேவையில்லை.

"அமைதி வழியில்" ஆர்ப்பாட்டம் செய்த யனுகோவிச் அரசு எதிர்ப்பாளர்கள் கூட, போலிஸ், மற்றும் மாற்றுக் கருத்தாளர்கள் என்று பலரைக் கொலை செய்திருக்கிறார்கள் என்ற தகவல், எந்த ஊடகத்திலும் வெளிவந்திருக்காது. ஒரு இரத்தக்களரியை தவிர்ப்பதற்காக வெளியேறிய அனார்கிஸ்டுகள், அதற்குப் பிறகு அந்தப் பக்கம் எட்டியும் பார்க்கவில்லை. அப்போது தான், அனார்கிஸ்ட் குழுவினருக்கு ஒரு உண்மை உறைத்தது. உக்ரைனில் நடந்தது ஒரு மக்கள் எழுச்சி அல்ல. மாறாக, பாசிஸ்டுகளின் சதிப்புரட்சி. இதைத் தான், "உக்ரைன் மக்களின் ஜனநாயகத்திற்கான புரட்சி" என்று மேற்கத்திய அரசுகளும், ஊடகங்களும் புளுகிக் கொண்டிருக்கின்றன.

உக்ரைன் நாட்டின் இனப்பிரச்சினை : ரஷ்ய, உக்ரைனிய இனப் பாகுபாடும், அரசியல் பிரிவினையும். 

உக்ரைன் நாட்டில், தற்போது அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஓய்ந்து விட்டன. ரஷ்ய ஆதரவு ஜனாதிபதி யனுகோவிச் பதவி விலகி உள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் ஆதரிக்கும் புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ளது. எல்லாம் சுபமாக முடிந்து விட்டது என்று, மேற்கத்திய நாடுகள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளன. ஆனால், உக்ரைன் நாட்டின் பிரச்சினை இன்னும் தீரவில்லை. உலகில் பெரிய நாடுகளில் ஒன்றான உக்ரைனில், மேற்கில் உக்ரைனிய மொழி பேசுவோரும், தென் கிழக்கில் ரஷ்ய மொழி பேசுவோரும் வாழ்கின்றனர். இரண்டு இனங்களுக்கு இடையிலான பிளவு அதிகமாகி உள்ளது.

ரஷ்ய, உக்ரைன் இனப் பிரச்சினையும் ஒரு மொழி அடிப்படையிலான பிரச்சினை தான். இரண்டுக்கும் இடையிலான வித்தியாசம், தமிழும், மலையாளமும் அளவிற்கும் இல்லை. தமிழகத் தமிழும், ஈழத் தமிழும் மாதிரி, இரண்டு மொழிகளும் மிகவும் நெருக்கமானவை. ஆனால், மொழியியல் அறிஞர்கள், உக்ரைனியனை தனித்துவமான மொழியாக வளர்த்தெடுத்து விட்டனர். இருபதாம் நூற்றாண்டில், இரண்டு மொழி பேசும் மக்களுக்கு இடையிலான முரண்பாடு, இரு தரப்பு அரசியல்வாதிகளால், அவர்களது குறுகிய நலன்களுக்காக பயன்படுத்தப் பட்டு வந்துள்ளது. அது இன்னமும் தொடர்கின்றது.


இரண்டாம் உலகப்போர் காலத்தில், நாஜி ஜெர்மனி படையெடுத்த நேரம், உக்ரைனிய தேசியவாதிகள் நாஜிப் படைகளுடன் கூட்டுச் சேர்ந்தனர். அன்றிலிருந்து இன்று வரை, ரஷ்யர்களும், உக்ரைனியர்களும் ஒருவரை ஒருவர் எதிரிகளாக கருதிக் கொள்கின்றனர். இரண்டு மொழிப் பிரிவினருக்கு இடையிலான இனக் குரோதம், சகல இடங்களிலும் வெளிப்படுகின்றது. உக்ரைனியர்கள், ரஷ்யர்களை "ஏகாதிபத்தியவாதிகள்" என்று குற்றம் சுமத்துவார்கள். ரஷ்யர்கள், உக்ரைனியர்களை "பாசிஸ்டுகள்/ நாஜிகள்" என்று குற்றம் சாட்டுவார்கள்.

சோவியத் கூட்டமைப்பில் இருந்து, உக்ரைன் பிரிந்து சென்று தனி நாடான பின்னர், இனப் பிரச்சினை முன்னரை விட அதிகமாக கூர்மையடைந்துள்ளது. தலைநகரமும், அரசும் எந்த இனத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதிலான இழுபறி நிலைமை தான், தற்போது அந்த நாட்டில் நடக்கும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் மூல காரணம். மேலதிகமாக, உலக வல்லரசுகளான ஜெர்மனிக்கும், ரஷ்யாவுக்கும் இடையில் நடக்கும் கயிறிழுப்புப் போட்டியும், நிலைமையை மோசமடைய வைக்கிறது.

உக்ரைனில் இருந்து இறுதியாகக் கிடைத்த தகவலின் படி, ரஷ்யர்கள் பெரும்பான்மையாக வாழும் கிரீமியா தீபகற்பம், உக்ரைனில் இருந்து பிரிவதற்கான ஆயத்தங்களை செய்து வருகின்றது. ரஷ்ய உல்லாசப் பிரயாணிகளை கவரும், அழகிய கடற்கரைகளை கொண்ட கிரீமியா, அறுபது வருடங்களுக்கு முன்னர், உக்ரைனுக்கு தாரை வார்க்கப் பட்டது. அப்போது எல்லாம் சோவியத் யூனியன் என்ற ஒரே நாட்டின் கீழ் இருந்த படியால், அன்று அது பெரிய தாக்கத்தை உண்டாக்கவில்லை. ஆனால், இன்றைய நிலைமை வேறு. 

தலைநகர் கீவில் ஆட்சி மாறிய உடனேயே, கிரிமியாவில் பறந்த உக்ரைனிய தேசியக் கொடி இறக்கப் பட்டது. அங்கே தற்போது ரஷ்யக் கொடி பறக்கின்றது. அதைத் தவிர, சட்டத்திற்கு புறம்பான ஆயுதக் குழுக்கள் உருவாக்கப் படுகின்றன. அவற்றில் தொண்டர்களாக சேரும் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கப் படுகின்றது. உக்ரைன் ஒரு உள்நாட்டு யுத்தத்தை சந்திக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.

உடைக்கப் பட்ட லெனின் சிலை இருந்த இடத்தில், நாஜி சுலோகங்களும், பாசிச சின்னங்களும் கிறுக்கப் பட்டுள்ளன. 
உக்ரைனில் மேற்குலக சார்பான அரசாங்கம் பதவியேற்றவுடன் செய்த முதல் வேலை என்ன தெரியுமா? லெனின் சிலைகளையும், பிற சோவியத் கால சின்னங்களையும் உடைப்பது. அநேகமாக, உக்ரைனிய மொழிப் பெரும்பான்மை சமூகம் வாழும் பகுதிகளில், பரவலாக சிலை உடைப்புகள் நடக்கின்றன. "ஆஹா... மீண்டும் லெனின் சிலைகளை உடைக்கிறார்களா? நல்ல விடயம் தானே!" என்று சில தமிழ் வலதுசாரிகள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கலாம்.

கொஞ்சம் பொறுங்கள்....

இந்தப் படத்தை நன்றாக உற்றுப் பாருங்கள். வீழ்த்தப் பட்ட சிலை வைக்கப் பட்டிருந்த, அடித் தளத்தில் ஏதோ கிறுக்கி இருக்கிறார்கள். சில சின்னங்களையும் வரைந்திருக்கிறார்கள். அவை என்ன? ஆமாம், நாகரிக உலகில் தடை செய்யப்பட்ட, "நாஜி/பாசிச சின்னங்கள்" தான் அவை.

இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். லெனின் சிலைகளை விழுத்தியவர்கள் வேறு யாருமல்ல. உக்ரைனிய நவ நாஜிகள். சோவியத் யூனியன் வீழ்ந்த காலத்தில், லெனின் சிலைகளை உடைத்தவர்களும் அவர்கள் தான். இரண்டாம் உலகப்போர் காலத்தில், 1941 ம் ஆண்டு சோவியத் யூனியனின் பல பகுதிகளை ஆக்கிரமித்த நாஜிப் படையினர் தான், முதன் முதலாக லெனின் சிலைகளை உடைத்துக் காட்டினார்கள்.

இன்று நவ நாஜிகளும், நவ பாசிஸ்டுகளும் லெனின் சிலைகளை காணுமிடங்களில் எல்லாம் உடைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது அவர்களின் பரம்பரைத் தொழில் போலும். அதனை உலகம் முழுவதும் உள்ள, நாஜி / பாசிச அனுதாபிகள் வரவேற்கிறார்கள். இவர்களுக்காக இன்னொரு ஸ்டாலின்கிராட் காத்துக் கொண்டிருக்கிறது.


Neo-Nazi threat in new Ukraine


No comments: