Saturday, April 26, 2014

கிரேக்க மத்திய வங்கி குண்டுவெடிப்பு : கம்யூனிச இயக்கம் உரிமைகோரல்



ஏதென்ஸ் நகரில், கிரேக்க மத்திய வங்கிக்கு முன்னால் ஒரு கார் குண்டு வெடித்துள்ளது. ஏப்ரல் 10 அன்று நடந்த இந்த சம்பவம், அன்று எந்த ஊடகத்திலும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப் படவில்லை. அதற்குக் காரணம், குண்டுவெடிப்புக்கு அடுத்த நாள், ஜெர்மன் அதிபர் அங்கெலா மார்கல் கிரீசுக்கு விஜயம் செய்திருந்தார்.

10 ஏப்ரல் 2014, அதிகாலை 5.55 மணிக்கு, 75kg நிறையுள்ள குண்டு வெடித்துள்ளது. குண்டு வைத்தவர்கள், முன்கூட்டியே 5.15 மணியளவில் அது பற்றி அறிவித்திருந்தனர். Efimerida ton Syntakton பத்திரிகை அலுவலகத்திற்கு வந்த தொலைபேசி அழைப்பில், "இன்னும் 40 நிமிடங்களில் குண்டு வெடிக்கும் என்றும், அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களை உடனடியாக அப்புறப் படுத்த வேண்டுமென்றும்..." அனாமதேய குரல் ஒன்று எச்சரித்திருந்தது. உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய பொலிசார், அந்தப் பகுதியில் இருந்த மக்களை வெளியேற்றி, வாகனப் போக்குவரத்தை தடை செய்தனர்.

உலகில் உள்ள, வலதுசாரி தீவிரவாத இயக்கங்களுக்கும், இடதுசாரி தீவிரவாத இயக்கங்களுக்கும் இடையிலான வேறுபாடு இது தான். வலதுசாரி தீவிரவாத அமைப்புகள், குண்டுவெடிக்கும் இடத்தில் பொது மக்களும் கொல்லப் படுவதைப் பற்றிக் கவலைப் படுவதில்லை. எந்தளவு அதிகமான மக்கள் பலியாகின்றனரோ, அந்தளவு வெற்றி கிடைத்து விட்டதாக நம்புவார்கள்.

அதற்கு மாறாக, இடதுசாரி அமைப்புகள், பொது மக்களின் உயிரிழப்புகளை முடிந்த அளவுக்கு தடுக்கப் பார்ப்பார்கள். பொது மக்கள் நடமாடாத நேரமாகப் பார்த்து தான், நேரக் கணிப்பு வெடிகுண்டு வைப்பார்கள். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில், குண்டுவெடிக்கப் போகின்றது என்பதை முன்கூட்டியே அறிவிப்பார்கள். ஏற்கனவே, IRA (பிரிட்டன்), ETA(ஸ்பெயின்) போன்ற இடதுசாரி தேசியவாத இயக்கங்கள், இந்த நடைமுறையை பல தசாப்தங்களாக பின்பற்றி வந்துள்ளன.

அன்றைய குண்டுவெடிப்பில், மத்திய வங்கிக் கட்டிடம் மட்டும் சேதமடைந்தது. யாரும் கொல்லப் படவுமில்லை, யாருக்கும் காயம் ஏற்படவில்லை. "புரட்சிகர போராட்டம்" என்ற இடதுசாரி ஆயுதபாணி இயக்கம், குண்டுவெடிப்புக்கு உரிமை கோரியுள்ளது.

உரிமை கோரல் துண்டுப் பிரசுரத்தில் இருந்து: 
"IMF நிரந்தரப் பிரதிநிதி Wes McGrew, மத்திய வங்கி கட்டிடத்தில் தங்கியிருக்கிறார். கிரீஸ் சர்வதேச நாணய சந்தைக்கு திரும்புவதை எதிர்ப்பதற்காகவும், 10 மார்ச் 2010 ம் ஆண்டு, பொலிசாருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்ட எமது உறுப்பினர் Lambros Foundas நினைவாகவும், இந்த வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. எமது இலட்சியம் லிபெர்ட்டேரியன் கம்யூனிசம்." 
 - Lambros Fountas கமாண்டோ அணி, 
   புரட்சிகர போராட்டம் 

"புரட்சிகர போராட்டம்" (Revolutionary Struggle) என்ற ஆயுதமேந்திய இயக்கம், Nikos Maziotis மற்றும் Panayiota (Paula) Roupa ஆகியோரால் தலைமை தாங்கப் படுகின்றது. இருவரும் 2012 ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சில மாதங்கள் தடுத்து வைக்கப் பட்டிருந்தனர். நிபந்தனையுடனான பெயிலில் விடுதலையாகி, வீட்டில் இருக்க அனுமதித்த பொழுது தலைமறைவாகி விட்டனர். இது போன்றே, சிறைத் தண்டனை அனுபவித்து வந்த, நவம்பர் 17 இயக்க உறுப்பினர் ஒருவரும் தலைமறைவாகி இருந்தார். 

மத்திய வங்கி குண்டுவெடிப்பில், நவம்பர் 17 இயக்கமும் சம்பந்தப் பட்டிருக்கலாம் என்று, பொலிஸ் சந்தேகிக்கின்றது. புரட்சிகர போராட்ட தலைவர்களை கைது செய்ய உதவுவோருக்கு, இரண்டு மில்லியன் யூரோக்கள் சன்மானமாக வழங்குவதாக, பொலிஸ் அறிவித்துள்ளது. புரட்சிகர போராட்டம், ஏற்கனவே பல குண்டுவெடிப்புகளை நடத்தியுள்ளது. ஏதென்ஸ் தலைமை நீதிமன்றம், சிட்டி வங்கி தலைமையகம், பங்குச் சந்தை கட்டிடம் என்பன கடந்த காலங்களில் வெடி குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகின.

 ********* 

கிரேக்க நாட்டில் இயங்கி வந்த, இடதுசாரி புரட்சி இயக்கமாகிய "நவம்பர் 17" மீண்டும் ஆயுதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. அந்த ஆயுதபாணி இயக்கத்தின் பெயரில் முன்பு நடந்த கொலைகள், குண்டுவெடிப்புகளுக்காக கைது செய்யப் பட்ட Christodoulos Xiros (55 வயது) ஏதென்ஸ் சிறைச்சாலையில் 25 வருட தண்டனை அனுபவித்து வந்தார். கடந்த ஜனவரி மாதம், ஒரு வார விடுப்பில் வீட்டுக்கு செல்ல அனுமதித்திருந்த நேரம், அவர் தப்பிச் சென்றுள்ளார். தற்போது தலைமறைவாக ஓரிடத்தில் இருந்து கொண்டு, ஒரு வீடியோவை அனுப்பி வைத்துள்ளார்.

"கிரேக்க நாட்டினை நாசமாக்கும் கொள்ளைக்காரர்கள், பாசிஸ்டுகளுக்கு எதிரான ஆயுதப்போராட்டம் முன்னெடுக்கப் படும்" என்று, Christodoulos Xiros அந்த வீடியோவில் கூறுகின்றார். பின்னணியில் சேகுவேரா, மற்றும் கிரேக்க விடுதலைப் போராட்ட வீரர்களின் படங்கள் காணப் படுகின்றன.

வீடியோ இணைப்பு: http://www.youtube.com/watch?v=yA-EVHfdhy0

நவம்பர் 17 இயக்கம் பற்றி, முன்னர் எழுதிய கட்டுரை:
தொட்டில் ஜனநாயகம் தொடர் புரட்சி வரை; 
http://kalaiy.blogspot.nl/2008/12/blog-post_13.html

*********


கிரேக்க புரட்சிகர ஆயுதப் போராட்டம் குறித்த முன்னைய பதிவுகள்: 

No comments: