Monday, June 16, 2014

அளுத்கம இனக் கலவரம் : பாசிஸ அரசு இயந்திரம் ஓய்வதில்லை


இலங்கையில், அளுத்கம எனும் இடத்தில், முஸ்லிம்களுக்கு எதிராக மிக மோசமான இனக் கலவரம் நடந்துள்ளது.  முஸ்லிம்களின் வீடுகளும், கடைகளும், பொதுபலசேனா குண்டர்களினால் எரிக்கப் பட்டுள்ளன. 1983 க்கு பிறகு நடந்த முதலாவது இனக் கலவரம் இதுவாகும்.

அளுத்கமவில் இன்று நடந்த பொதுக் கூட்டமொன்றில் பேசிய பொதுபல சேனா தலைவர் கலகொட ஞானசேகர தேரோ, "ஒரு சிங்களவன் மேல் கை வைத்தால், இந்த நாட்டில் முஸ்லிம்களின் கதையை முடித்து விடுவோம்." என்று இனவெறி கக்கும் உரையாற்றி உள்ளார். (https://www.colombotelegraph.com/index.php/video-this-will-be-the-end-of-all-muslims-gnanasara-says-prior-to-riots/ ) அதற்குப் பிறகே, மாலையில் கலவரம் நடந்துள்ளது. 1977, 1983 ளில் நடந்த தமிழர்களுக்கு எதிரான இனக் கலவரங்களுக்கு முன்னரும், பலர் இதே மாதிரியான இனவெறியை கக்கினார்கள். (https://www.youtube.com/watch?v=qipU2Qf746c&list=UUJt2pSAQ9hF3cvq6slyLo5g )

சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர், இதே அளுத்கம நகரில், முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான வர்த்தக ஸ்தாபனம் தீ வைத்துக் கொளுத்தப் பட்டது. வர்த்தகப் போட்டி, பொறாமை காரணமாக, அந்த நகரில் உள்ள சிங்கள வர்த்தகர்கள், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை தூண்டி விடுவதாக, எரிக்கப் பட்ட வர்த்தக நிலையத்தின் சொந்தக்காரர் தெரிவித்தார். (

1983 ம் ஆண்டு கலவரத்தின் போதும், தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் இலக்கு வைத்து தாக்கப் பட்டமை இங்கே நினைவுகூரத் தக்கது. இனக் கலவரங்களின் போது தான், முதலாளித்துவ பொருளாதாரமும், இனவாத பாசிசமும் ஒன்றுடன் ஒன்று கை கோர்த்துக் கொள்கின்றன.

இதே நேரம், "83 இனக் கலவரத்திற்குப் பின்னர், அரசாங்கம் இன்னும் பாடம் படிக்கவில்லையா?" என்று சில அறிவுஜீவிகள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அன்றும், இன்றும் அரசாங்கம் தான் படித்த பாடத்தை சரியாகத் தான் நடைமுறைப் படுத்தி வந்துள்ளது. மக்கள் தான் அரசின் நோக்கங்களை புரிந்து கொள்ளாமல், இனவாத, மதவாத சக்திகள் சொல்வதை நம்பி ஏமாந்து போகிறார்கள். 

குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தை தூண்டி விட்ட நரேந்திர மோடி, பத்து வருடங்களுக்குப் பின்னர் இந்தியாவின் பிரதமராகலாம் என்றால், உண்மையில் பாடம் படிக்க வேண்டியவர்கள் யார்?

//தமிழ்ப் பேசும் முஸ்லீம் அப்பாவி மக்கள் மீதான பேரினவாதிகளின் தாக்குதல் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, புலம்பெயர் தமிழ்த் தேசிய பிழைப்புவாத அமைப்புக்கள், தமிழ்த் தேசிய தாதாக்கள் உட்பட ஏனையோர் எந்தக் கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை.// - இவ்வாறு இணையத் தளமொன்றில், ஒரு நண்பர் தனது உள்ளக் குமுறலை வெளிப்படுத்தி உள்ளார். 

எல்லா தமிழ் தேசியவாதிகளும் ஒரே கொள்கை கொண்டவர்கள் அல்ல. தமிழ் தேசியக் கூட்டமைப்பும், சுமேந்திரனும், கலவரத்தை கண்டித்துள்ளமை வரவேற்கத் தக்கது. பாதிக்கப் பட்ட முஸ்லிம் மக்களுக்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர். ஆனால், அந்த தகவல் ஆங்கிலத்தில், டிவிட்டர் செய்தியாக இருந்தது. தமிழிலும் தமது கண்டனத்தை பதிவு செய்துள்ளனரா என்பது தெரியவில்லை.

மேலும் இலங்கையில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் "தமிழ் தேசியவாதிகள்" அல்லர். இருந்திருந்தால், அளுத்கம கலவரத்தை, அனைத்து தமிழ் பேசும் மக்களுக்கும் எதிரான கலவரமாக கருதி இருப்பார்கள். சர்வதேச மட்டத்தில் கலவரத்தை தூண்டி விட்ட சிறிலங்கா அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்திருப்பார்கள். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

உதட்டளவில் தம்மைத் தாமே தமிழ் தேசியவாதிகள் என்று அழைத்துக் கொள்ளும் பலர், மனதளவில் இந்துத்துவா வாதிகள் என்பது இரகசியமல்ல. அவர்களது உண்மையான அரசியல் நிலைப்பாடு, இப்படியான தருணங்களில் வெளிப்படுகின்றது. 

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்து உள்ளூர மகிழ்ச்சி அடைவதும், பழிவாங்கும் உணர்வை வெளிப் படுத்துவதுமாக, சிறுபான்மை இனங்களுக்கு எதிரான அரசின் வன்முறைகளை நியாயப் படுத்துகின்றனர். சிறிலங்கா அரசின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு மிக இலகுவாக பலியாகின்றனர்.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராலயம், முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள- பௌத்த பேரினவாதிகளின் வெறியாட்டத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. நவநீதம் பிள்ளை, பிரான்சிஸ் ஹாரிசன், எரிக் சொல்ஹைம் ஆகியோர், அளுத்கம கலவரம் பற்றிய தகவல்களை சமூக வலைத்தளங்கள் ஊடாக உடனுக்குடன் பகிர்ந்து கொள்வதுடன், அரசுக்கு எதிரான கண்டனங்களையும் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேலே குறிப்பிட்ட அரசியல் சக்திகள் யாவும் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடந்த காலத்தில் இருந்து, பாதிக்கப் பட்ட ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல்கொடுத்த சர்வதேச ஆதரவு சக்திகள். குறிப்பாக வலதுசாரி தமிழ் தேசியவாதிகளால் பெரிதும் மதிக்கப் பட்டவர்கள். அவர்களது நாயகர்களாக போற்றப் பட்டவர்கள்.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான குரல்கள் ஒலித்த போதெல்லாம், அதனை நன்றியோடு பகிர்ந்து கொண்டவர்கள், இன்று தடம் மாறி, பொதுபல சேனாவின் முஸ்லிம் விரோத கலவரத்தை மௌனமாக அங்கீகரிப்பது ஏனோ? ஈழத் தமிழ் சமூகத்தில் இருந்து எழும் ஒரு சில கண்டனக் குரல்களையும் அடக்க முனைவது ஏனோ? முரண்பாடுகளின் மொத்த உருவமே குறுந் தேசியவாதம் தானோ?

3 comments:

Unknown said...

பாகிஸ்தான் உள்பட உலக நாடுகள் அனைத்தும் இணைந்து பயங்கரவாதத்தை இலங்கை தீவில் ஓழித்துகட்டிய பிறகு இலங்கையின் இறையாண்மையை காப்பதற்கு இத்தகைய சம்பவங்களை ராஜபக்சே குடும்பத்தினரை தவிர வேறு எவரும் கவலைபடவோ கருத்து கூறவோ உரிமையில்லை...
இதனை பாகிஸ்தானும் வழிமொழியும்!!!

Unknown said...

உண்மை...

Online money said...

tamilarkkal adi padum pothu kaatti koduththa muslimkalukku support panna vendam......avarkalin velailum thuvesathai parappuvathe.......nammathu velai match parrpathe thavira match villaiyaduvathu illai

Tamils need 2 United