Monday, July 14, 2014

பாலஸ்தீன பிரச்சினையால் உலக பொருளாதார நெருக்கடி உண்டாகும்

பாலஸ்தீன பிரச்சினை, எந்தளவு தூரம் உலகப் பொருளாதாரத்தை, தங்களது சொந்த வாழ்க்கையையும் பாதிக்க வல்லது என்ற உண்மை பலருக்குத் தெரிவதில்லை.

அரபு நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து, எண்ணை தர மாட்டோம் என்று பகிஷ்கரிப்பு செய்தால் என்ன நடக்கும்? அது உலகம் முழுவதும், இது வரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை கொண்டு வரும். அந்த நிலைமை ஏற்கனவே ஒரு தடவை ஏற்பட்டிருந்தது என்பதை பலர் மறந்து விட்டார்கள்.

1967 ம் ஆண்டு நடந்த போரில் தான் இஸ்ரேல் இன்றுள்ள பாலஸ்தீன பிரதேசங்களை (காஸா, மேற்குக் கரை) ஆக்கிரமித்தது. அத்துடன் நில்லாது, சிரியாவின் கோலான் குன்றுகளையும், எகிப்தின் சினாய் பகுதியையும் ஆக்கிரமித்தது.

1973 ம் ஆண்டு, ஆறு வருடங்களுக்கு முன்னர் தாம் இழந்த பிரதேசங்களை மீட்பதற்காக, சிரியாவும், எகிப்தும், இஸ்ரேலுக்கு எதிராக போர் தொடுத்தன. இஸ்ரேலில் அது யொம் கிப்பூர் யுத்தம் என்று அழைக்கப் படுகின்றது. அந்தப் போரிலும், அதற்கு முன்னரும், அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆயுத விநியோகம் செய்து வந்தது. உண்மையில் அமெரிக்க உதவி காரணமாகவே இஸ்ரேல் போர்களில் வென்று வந்தது. 

இதனால், இஸ்ரேலுக்கு உதவும் மேற்கத்திய நாடுகளை தண்டிப்பதற்காக, அரபு நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து எண்ணை தர மறுத்து விட்டன. அமெரிக்கா, கனடா, பிரிட்டன், நெதர்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகள், எண்ணை ஏற்றுமதித் தடையால் பெரிதும் பாதிக்கப் பட்டிருந்தன. அந்தக் காலங்களில் வீதிகளில் ஒரு வாகனம் கூட ஓடவில்லை.

எண்ணைத் தடையானது, பல மேற்கத்திய நாடுகளை, அமெரிக்காவின் மத்திய கிழக்கு நிலைப்பாட்டில் இருந்து விலக வைத்தது. நேட்டோ கூட்டமைப்பில், அமெரிக்காவுக்கும் மேற்கு ஐரோப்பாவுக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டது. பங்குச் சந்தைகள் சரிவை நோக்கிச் சென்றன. எண்ணைத் தடை இன்னும் சில மாதங்கள் நீடித்து இருந்தால், மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரம் சுக்கு நூறாக நொறுங்கி இருக்கும்.

உண்மையில், அன்றைய நெருக்கடி காரணமாக மேற்குலக நாடுகள் நேரடியாக பாதிக்கப் பட்டாலும், பிற உலக நாடுகளிலும் அது பல பொருளாதாரப் பிரச்சனைகளை உண்டாக்கியது. அன்றிருந்த சோவியத் எதிர் முகாம் இன்று இல்லை. உலகில் அனேகமாக எல்லா நாடுகளும் அமெரிக்காவின் பொருளாதாரத்தில் தங்கி உள்ளன. அப்படியான நிலையில், இன்று ஓர் எண்ணைத் தடை ஏற்பட்டால்? விளைவுகளை கற்பனை செய்து பார்க்கவே முடியாது.

அன்றைய காலங்களில், மத்திய கிழக்கு முழுவதும் முற்போக்கு அரபு தேசியவாதம் பிரபலமாக இருந்தது. எகிப்து, சிரியா, ஈராக் ஆகிய நாடுகள், அரபு தேசியவாதத்தை ஏகாதிபத்திய எதிர்ப்பு விடுதலைப் போராட்டமாக மாற்றிக் காட்டின. தாங்கள் ஒன்று பட்டால், உலக வல்லரசான அமெரிக்காவை கூட காலடியில் விழ வைக்கலாம் என்று உணர்ந்து கொண்டன. சவூதி அரேபியா போன்ற பிற்போக்கான மன்னராட்சி நாடுகள் கூட, வேறு வழியின்றி அதைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இருந்தது. அதனால், அரபு நாடுகளின் ஒற்றுமையை குலைப்பதற்காக அமெரிக்கா பல சூழ்ச்சிகளில் இறங்கியது.

உலகில் இனியொரு தடவை எண்ணைத் தடை வரக் கூடாது என்பதற்காக அமெரிக்கா பல திட்டங்களை வகுத்தது. அதில் முக்கியமானது இஸ்லாமியவாதம். எண்ணைத் தடை காரணமாக, உலகச் சந்தையில் எண்ணையின் விலை நான்கு மடங்கு அதிகமாக உயர்ந்தது. சவூதி அரேபியாவின் கஜானா நிரம்பி வழிந்தது. உலகம் முழுவதும் கடும்போக்கு இஸ்லாமியவாத வளர்ப்பதற்கு அந்தப் பணத்தை பயன்படுத்துமாறு அமெரிக்காவே ஆலோசனை வழங்கியது. இன்று பல உலக நாடுகளில் அட்டகாசம் செய்யும் வகாபிச தீவிரவாதக் குழுக்கள் பல, அன்றைய சவூதி பெட்ரோலிய டாலரில் உருவாக்கப் பட்டவை தான்.

யாரை எப்படி வளைக்க வேண்டும் என்று அமெரிக்கர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். வஞ்சகப் புகழ்ச்சியில் அமெரிக்கர்களை வெல்ல ஆள் கிடையாது. முன்னொரு காலத்தில் இந்தியாவை காலனிப் படுத்திய பிரிட்டிஷ்காரர்கள், "நீங்கள் ஆன்மீகத்தில் சிறந்த மதத்தை கொண்டிருக்கிறீர்கள்" என்று இந்துக்களின் முதுகில் தட்டிக் கொடுத்தார்கள். "முன்தோன்றிய மூத்த குடி உங்களுடையது" என்று தமிழர்களின் முதுகில் தட்டிக் கொடுத்தார்கள். அமெரிக்கர்களும் அதே வழியை பின் பற்றி, இஸ்லாமியர்களின் "மதப் பெருமைகளை" மீட்டுக் கொடுத்தார்கள். இன்று எல்லா அரபு நாடுகளிலும், நாசர் முன்மொழிந்த முற்போக்கு அரபு தேசியவாதம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் விட்டது.

பாலஸ்தீன பிரச்சினையை "முஸ்லிம்களின் பிரச்சினை" என்று மதவாத நோக்கில் பார்ப்பவர்கள் தான் அதிகம். முஸ்லிம்கள் மட்டுமல்ல, முஸ்லிம் அல்லாதவர்களும் அப்படியான கருத்துக்களை பரப்புவதற்கு, தீயாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். "உலகில் இத்தனை முஸ்லிம் நாடுகள் இருந்தும், எதற்காக பாலஸ்தீன பிரச்சினையை தீர்க்க முடியவில்லை?" என்று சிலர் தங்களை புத்திசாலிகளாக நினைத்துக் கொண்டு கேள்வி எழுப்புகின்றனர். அடிப்படையில் அவர்களும் மதவாதிகள் தான். "உலகில் இத்தனை கிறிஸ்தவ நாடுகள் இருந்தும் என்ன செய்து கொண்டிருக்கின்றன?" என்ற கேள்வியை அவர்கள் கேட்க மாட்டார்கள்.

பாலஸ்தீனர்களில் குறைந்தது பத்து சத வீதமானோர் கிறிஸ்தவர்கள். அது மட்டுமல்ல, இயேசு கிறிஸ்து பிறந்த பெத்லஹெம் உட்பட, விவிலிய நூலில் கூறப்படும் பல இடங்கள் பாலஸ்தீனத்தில் உள்ளன. அந்த இடங்களில் இப்போதும் வாழும் கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையானோர் பாலஸ்தீன அரேபியர்கள். எதற்காக உலக கிறிஸ்தவர்கள் யாரும் தமது புனித பூமியை பாதுகாக்க முன்வரவில்லை? கிறிஸ்துவின் காலத்தில் இருந்து அங்கு வாழும் கிறிஸ்தவ- பாலஸ்தீனர்களை காப்பாற்ற முன் வரவில்லை?

ஒரு காலத்தில் பாலஸ்தீன இயக்கங்கள், ஈழ விடுதலை அமைப்புகளுக்கு இராணுவப் பயிற்சி வழங்கின. அந்தக் காலங்களில், ஈழத்திற்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையில் நெருக்கமான தொடர்புகள் பேணப் பட்டு வந்தன. அந்த உண்மையை இன்றைக்கு பலர் மறந்து விட்டார்கள். சிலர் வேண்டுமென்றே மறைக்கிறார்கள்.

பாலஸ்தீனர்களையும், தமிழர்களையும் ஒன்று சேர விடாது பிரித்து வைத்ததில், மொசாட், சிஐஏ உளவாளிகளின் பங்கு இருந்ததை குறைத்து மதிப்பிட முடியாது. அந்த சூழ்ச்சி வெற்றி பெற்றதன் பின்னணியில், அந்நிய கைக்கூலிகளின் ஏகாதிபத்திய ஆதரவு பிரச்சாரமும் இருந்துள்ளது. அதன் மூலம் பல தசாப்தங்களாக, தமிழர்கள் பாலஸ்தீனத்தை பற்றி நினைக்க விடாது தடுத்து வந்தனர். பழைய தொடர்புகள் எல்லாம் துண்டிக்கப் பட்டு விட்டன.

இன்று பாலஸ்தீனத்தில் வாழும் சாதாரண மக்களுக்கு இலங்கை எங்கே இருக்கிறது என்பது கூடத் தெரியாது. ஈழப்போர் குறித்த செய்திகளுக்கு மேற்கத்திய ஊடகங்களே ஆர்வம் காட்டாத நிலையில், அரபு ஊடகங்களை பற்றி எதுவும் சொல்லத் தேவையில்லை. பாலஸ்தீனம் மட்டும் அல்ல, இஸ்ரேலில் வாழும் மக்களுக்கும் இலங்கையில் நடந்த போர் பற்றி எதுவும் தெரியாது. பெரும்பான்மையான இஸ்ரேலிய யூதர்களுக்கு, தமிழர்கள் என்ற இனம் உலகில் வாழும் உண்மை கூடத் தெரியாது. இந்த நிலைமையில், பாலஸ்தீனர்களை மட்டுமே குற்றம் சாட்டும் போக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவான யூதர்கள் 

No comments: