Friday, October 10, 2014

யேமன் குண்டுவெடிப்பு : அமெரிக்காவுக்கு ஆபத்தில் உதவும் அல்கைதா நண்பன்


அல்கைதாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் அப்படி என்ன நெருக்கமோ தெரியவில்லை. அடிக்கடி அமெரிக்காவுக்கு, ஆபத்தில் உதவும் நல்ல நண்பனாக அல்கைதா இருக்கின்றது. அதற்கு இன்னொரு உதாரணம், சானா நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பும், அதிலே ஐம்பதுக்கும் அதிகமான பொதுமக்கள் பலியான சம்பவமும். அண்மையில் யேமனில் நடந்து வரும் அரசியல் மாற்றங்கள், அமெரிக்காவுக்கு அல்கைதாவின் உதவி என்றென்றும் தேவைப்படும் என்பதை உணர்த்தி நிற்கின்றன.

யேமன் நாட்டில், கடந்த சில மாதங்களாக, ஷியா இஸ்லாமிய சமூகத்தின் விடுதலைக்காக போராடும் ஹூதி கிளர்ச்சிப் படைகள், பெருமளவு பகுதிகளை பிடித்துள்ளன. வட யேமனில் வாழும் செய்யிடி இஸ்லாமிய பிரிவினரின் இயக்கமான "அன்சர் அல்லா" (அல்லாவின் உதவியாளர்கள்), வெளிநாடுகளிலும், பொது மக்களாலும் ஹூதி கிளர்ச்சிப் படை என்று அழைக்கப் படுகின்றது. அதற்குக் காரணம், இறைதூதர் முகமது நபியின் வழித்தோன்றல்கள் என்று கூறிக்கொள்ளும் ஹூதி குலத்தை சேர்ந்தவர்களே, அந்த இயக்கத்திற்கு தலைமை தாங்குகின்றனர். செய்யிடி இஸ்லாமியர்கள், முன்னர் பல நூறாண்டுகளாக யேமனை ஆண்டு வந்தனர்.

உலகம் முழுவதும், சிரியா, ஈராக்கில் நடக்கும் யுத்தங்களை பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், ஹூதி கிளர்ச்சிப் படையினர், தலைநகர் சானா வரையில் முன்னேறி வந்து விட்டனர். வெளிநாட்டு ஊடகங்கள் அதிக கவனம் செலுத்தா விட்டாலும், யேமனில் நடக்கும் அரசியல் மாற்றங்களை, அமெரிக்கா பதற்றத்துடன் கவனித்துக் கொண்டிருந்தது. ஓர் அமெரிக்க எதிர்ப்பு இயக்கம், யேமனின் ஆட்சியை கைப்பற்றுவதா? கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் தனது ஆதிக்கத்தை வைத்திருக்க விரும்பும் அமெரிக்கா அதனை எவ்வாறு அனுமதிக்கும்? அமெரிக்காவுக்கு அது ஒரு கெட்ட கனவாகவே இருக்கும்.

அமெரிக்கா திடுக்கிட்டு அலறித் துடித்தமைக்கு காரணம் இருக்கின்றது. கடந்த வாரம் தலைநகர் சானா, ஹூதி கிளர்ச்சிப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அதைத் தொடர்ந்து, சானாவில் இருக்கும் அரசு அலுவலகங்கள் எல்லாம் ஹூதி படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளன. நகரமெங்கும் ஹூதி போராளிகள் மட்டுமே ஆயுதங்களுடன் நடமாடுகின்றனர். யேமன் இராணுவம் பெயருக்குக் கூட அங்கே இல்லை. அது மட்டுமல்ல, நகரில் எல்லா இடங்களிலும், அமெரிக்க எதிர்ப்பு கோஷங்களைக் கொண்ட சுவரொட்டிகள் முளைத்தன. "அமெரிக்கா ஒழிக! இஸ்ரேல் ஒழிக!" போன்ற வாசகங்கள் காணப்பட்டன.

யேமனில் இன்னொரு ஈரான் உருவாகிக் கொண்டிருப்பதாக நினைத்து அமெரிக்கா அஞ்சியது. அதனால் ஐ.நா. வை அனுப்பி மத்தியஸ்தம் செய்து வைத்தது. ஐ.நா. ஆலோசனையின் படி, முன்பிருந்த யேமன் அரசாங்கம், ஹூதி கிளர்ச்சியாளர்களுடன் ஒரு பொது உடன்பாட்டிற்கு வந்தது. முந்திய அரசுப் பிரதிநிதிகள், அன்சார் அல்லா இயக்கத்துடன் அரசு அதிகாரத்தை பங்கிட்டுக் கொண்டனர்.

ஹூதி கிளர்ச்சியாளர்கள், யேமன் அரசில் பங்கெடுப்பது, பலருக்குப் பிடிக்கவில்லை. ஷியா கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் உதவி வருவதால், யேமன் ஈரானின் செல்வாக்கு மண்டலத்திற்குள் வந்து விடும் என்று அஞ்சினார்கள். குறிப்பாக அமெரிக்காவும், அல்கைதாவும் இந்த விடயத்தில் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டிருந்தன. இருவருக்கும் பொது எதிரி ஈரான். அதனால், அல்கைதாவும், அமெரிக்காவும் ஒன்று சேர்ந்ததில் வியப்பில்லை.

அல்கைதா முழுக்க முழுக்க சன்னி முஸ்லிம் பிரிவை சேர்ந்த, ஒரு சில மதவெறியர்களின் இயக்கமாக உள்ளது. யேமனில் அல்கைதா என்பது வெளிநாடுகளுக்கு தெரியப் படுத்துவதற்கான பெயர் மட்டுமே. உள்ளூர் மக்கள் அவர்களை "சலாபி தீவிரவாதிகள்" என்று அழைக்கின்றனர். அனேகமாக எல்லா அரபு நாடுகளிலும் நடக்கும் சமூக விடுதலைப் போராட்டத்தை, மதவாத கலவரங்களாக திசைதிருப்பி விடுவது தான், அல்கைதாவின் குறிக்கோள். அந்த விடயத்தில், அமெரிக்காவுக்கும், அல்கைதாவுக்கும் இடையில் புரிந்துணர்வு நிலவுகின்றது.

கடந்த சில நாட்களாக, ஐ.நா. அனுசரணையுடன் கொண்டு வரப்பட்ட சமாதான ஒப்பந்தத்தை குழப்புவதற்கு, அமெரிக்கா சதி செய்து வந்தது. அந்த சதியின் விளைவாக Ahmed Awad bin Mubarak பிரதமராக நியமிக்கப் பட்டார். ஆனால், ஹூதி கிளர்ச்சியாளர்கள், அந்த நியமனத்தை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். பின் முபாரக் ஓர் அமெரிக்கக் கைக்கூலி என்பதால், அந்நிய தலையீடு அதிகரிக்கும் என்ற காரணத்தைக் காட்டி நிராகரித்து வந்தது.

தலைநகர் சானாவில், பின் முபாரக்கிற்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. அதனால், (அமெரிக்காவால்) பிரதமராக நியமிக்கப்பட்ட பின் முபாரக் பதவி விலகி உள்ளார். அந்த சம்பவம் நடந்து ஒரு மணித்தியாலம் கூட ஆகவில்லை. சானாவில், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு நடுவில் நுளைந்த அல்கைதா தற்கொலைக் கொலையாளி, ஒரு கார்க் குண்டை வெடிக்க வைத்துள்ளார். அந்தக் குண்டுவெடிப்பில் ஐம்பதுக்கும் அதிகமானோர் கொல்லப் பட்டனர். யேமனில் தொடர்ந்தும் பதற்றம் நிலவி வருகின்றது. அனேகமாக, சிரியாவில் நடப்பதைப் போன்று, யேமனில் ஒரு உள்நாட்டுப் போரை கொண்டு வருவது, அமெரிக்காவினதும், அல்கைதாவினதும் நோக்கமாக இருக்கலாம்.


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
1.சவூதி அனுப்பிய ஹஜ் வெடி குண்டுகள்
2.யேமன்: நேற்று நண்பர்கள், இன்று எதிரிகள்
3.அரபிக் கடலோரம் அல்கைதா வேட்டை ஆரம்பம்
4.வடக்கு வளர்கிறது, தெற்கு தேய்கிறது, அல்கைதா பாய்கிறது!
5.ஈழத்தில் இடி முழங்கினால் யேமனில் மழை பொழிகிறது

No comments: