Sunday, December 21, 2014

இடதுசாரி ஆவிகளை எழுப்பும் திருமுருகன் காந்தியின் இடது சந்தர்ப்பவாதம்

இல்லாத எதிராளிகளுடன் காற்றில் கம்பு சுழற்றுவதைப் போல, மே பதினேழு தலைவர் திருமுருகன் காந்தி, "இடதுசாரிகள் அதைச் செய்யவில்லை... இதைச் செய்யவில்லை..." என்று குற்றப் பத்திரிகை வாசிக்கிறார். "2009 ம் ஆண்டு, ஏகாதிபத்தியம் புலிகளை அழித்த நேரம், உலகம் முழுவதும் உள்ள இடதுசாரிகள், மக்களை அணி திரட்டி போராட்டம் நடத்தவில்லையாம்." இது உண்மைக்கு புறம்பான கட்டுக்கதை.

ஏகாதிபத்தியம் என்பதே இடதுசாரிகளின் கொள்கை சார்ந்தது தான். புலிகள் இருந்த காலத்தில் "சிங்கள ஏகாதிபத்தியம்" பற்றி மட்டுமே பேசினார்கள். மேற்கத்திய நாடுகளை அவர்கள் ஏகாதிபத்தியமாக பார்க்கவில்லை. இன்றைக்கும், 95% ஈழப் புலி ஆதரவாளர்களின் கொள்கையும் அது தான். ஏகாதிபத்தியம் என்ற ஒன்று இல்லவே இல்லை என்று மறுப்பார்கள்.

திருமுருகன் காந்தி, ஏகாதிபத்தியமே புலிகளை அழித்தது என்று கூறுவதன் மூலம் தன்னையும் ஓர் இடதுசாரி சிந்தனையாளராகக் காட்டிக் கொள்கிறார். அதற்குப் பிறகு, இடதுசாரிகளை குறை கூறும் முரண்பாட்டை தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. 

"இடது சந்தர்ப்பவாத அரசியல்"  அவரது நலன்களுக்கு வசதியாக இருக்கிறது என்றால், அவர் குற்றஞ் சாட்டும் "இடதுசாரிகளும்" அதே இடது சந்தர்ப்பவாதிகளாகத் தான் இருப்பார்கள் என்ற உண்மையை அறியாதது ஏனோ?

திருமுருகன் காந்தி கூறும் அதே ஏகாதிபத்தியம், புலிகளை அழிப்பதற்கு 25 வருடங்களுக்கு முன்னரே, இடதுசாரிகள், அல்லது மார்க்சிய லெனினிஸ்டுகளை அழித்தொழித்து விட்டது என்ற உண்மை அவருக்குத் தெரியாதா? தொண்ணூறுகளில் நடந்த பெர்லின் மதில் வீழ்ச்சி, சோவியத் யூனியன் உடைவு, இவற்றிற்குப் பின்னர், "கம்யூனிசம் புதைகுழிக்குள் போன வரலாறு" தெரியாதா? 

"இடதுசாரிய கொள்கைகள் காலாவதியாகி விட்டன" என்று, பல "இடதுசாரிகளே" பாதை மாறிய கதை தெரியாதா? அதற்குப் பிறகு தேசியவாதமே நிரந்தரமான, நிலையான கொள்கை என்று, சில முன்னாள் இடதுசாரிகள் கூட நம்பத்தொடங்கினார்கள் என்பது தெரியாதா? தமிழ்நாட்டிலேயே அதற்குப் பல உதாரணங்கள் உள்ளன.

25 வருடங்களுக்கு முன்னர், 1991 ல் அழிந்து போன இடதுசாரிகள், 2009 ல் புலிகளை காப்பாற்ற ஓடி வரவில்லை என்று, திருமுருகன் காந்தி குற்றஞ் சாட்டுவது, இந்த வருடத்தின் மிகச் சிறந்த காமெடி. அவர் இன்னமும் பனிப்போர் காலத்தில் வாழ்வதாகவே எனக்குப் படுகின்றது. ஏனெனில், இடதுசாரிகள், மார்க்சிய லெனினிஸ்டுகள் பற்றி அவர் கொடுக்கும் "ஓவர் பில்ட் அப் வியாக்கியானம்" சிரிப்பை வரவழைக்கிறது.

என்னவோ இடதுசாரிகள் தான், இப்போதும் உலகை நடுநடுங்க வைக்கிறார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இடதுசாரிகள் அந்தளவு பலமாக இருந்தால், அமெரிக்கா தனது "பயங்கரவாதத்திற்கு எதிரான போரை", முஸ்லிம்களுக்கு எதிராக அல்ல, இடதுசாரிகளுக்கு எதிராக நடத்தி இருந்திருக்கும்.

ஆயினும், திருமுருகன் காந்தி இங்கே மிகவும் தைரியமாக, ஒரு முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கிறார். உண்மையில் சர்வதேச இடதுசாரிகள் புலிகளுக்கு ஆதரவாக இருந்தார்கள். புலிகள் ஒரு பக்கம், இலங்கை, இந்தியா, அல்லது சர்வதேசத்தில் இடதுசாரிகளுடனும் தொடர்பு வைத்திருந்தார்கள். ஆனால் மறு பக்கத்தில், உலக அரசியல் போக்குகளில் இடதுசாரிகளின் பங்களிப்பு மிகவும் குறைவு என்று அலட்சியப் படுத்தினார்கள். 

குறிப்பிடத் தக்க சிங்கள இடதுசாரிகள் கூட, புலிகளின் நண்பர்களாக இருந்தார்கள். விக்கிரமபாகு கருணாரத்ன போன்ற சிங்கள இடதுசாரிகள் புலிகளின் மேடைகளில் தோன்றி பேசினார்கள். ஒரு தலைமறைவு சிங்கள இடதுசாரிக் குழுவுக்கு, புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் ஆயுதப் பயிற்சி அளிக்கப் பட்டிருந்தது. அவர்கள் கொழும்பில் புலிகளுக்காக குண்டுகளை வெடிக்க வைத்திருக்கிறார்கள்.

அதே நேரம், இந்தியாவில் ஆயுதப் புரட்சிக்கு போராடிய இடதுசாரிகளை புலிகள் புறக்கணித்ததும் வரலாறு. தமிழ் நாட்டின் பிரிவினைக்காக ஆயுதமேந்திப் போராடிய தமிழ்நாடு விடுதலைப் படை, புலிகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக இந்திய புலனாய்வுத்துறை குற்றஞ் சாட்டி வந்தது. பிற்காலத்தில் மாவோயிஸ்டுகளுக்கு புலிகள் பயிற்சி அளிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. "இந்திய அரசின் தலையீட்டை தடுக்கும் வகையில் இடதுசாரிகள் மக்களை அணிதிரட்டவில்லை." என்று, 2009 க்குப் பிறகு அரசியலுக்கு வந்த திருமுருகன் காந்தி கண்டுபிடிக்கிறார். 

உண்மையில், இந்திய மக்களை அணிதிரட்டக் கூடிய இடதுசாரிகளை புலிகள் ஆதரிக்காமல் புறக்கணித்து வந்தனர். அதற்குக் காரணம், இந்திய அரசின் எதிரிகளுடன் தொடர்பு வைத்தால், இந்திய மத்திய அரசை பகைக்க வேண்டியிருக்கும் என்ற எச்சரிக்கை உணர்வேயன்றி வேறொன்றுமில்லை. அதற்குப் பதிலாக, இந்திய அரசுக்கு முண்டு கொடுத்த வைகோ, ராமதாஸ், நெடுமாறன் வகையறாக்களுடன் நெருங்கிய உறவைப் பேணி வந்தனர். அவர்களை மலை போல் நம்பி இருந்தார்கள்.

மேலும் இங்கே முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், புலிகள் ஒரு பலவீனமான அரசியல் சக்தியாக கருதிய இடதுசாரிகளை என்றைக்குமே பொருட்படுத்தவில்லை. இலங்கையில், இந்தியாவில் மட்டுமல்லாது, சர்வதேச மட்டத்திலும், ஓர் அரசியல் அழுத்தம் கொடுக்கும் அளவிற்கு, இடதுசாரிகளுக்கு அரசியல் பலம் அல்லது செல்வாக்கு கிடையாது என்று புலிகள் நம்பினார்கள். 

மேற்கத்திய நாடுகளில் இயங்கிய, மிகச் சிறிய மார்க்சிய லெனினிச கட்சிகள், மாவோயிச கட்சிகள், அனார்க்கிஸ்ட் குழுக்கள், ட்ராஸ்கிச சோஷலிச கட்சிகள் இவற்றுடனும் புலம்பெயர்ந்த புலி செயற்பாட்டாளர்கள் தொடர்பு வைத்திருந்தார்கள். 2009 ம் ஆண்டு ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு அவர்களும் உதவி செய்திருக்கிறார்கள். அதனை ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியும். புலி ஆதரவு ஆர்ப்பாட்டங்களுக்கு இடதுசாரிகள் வழமையாக சென்று வந்தனர். ஆனால், இடதுசாரிகளின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட புலி ஆதரவாளர்களை விரல் விட்டு எண்ண முடியும். அநேகமாக இல்லையெனலாம்.

உண்மையில் புலிகள், திருமுருகன் காந்தி முதன்மைக் குற்றவாளிகளாக சுட்டிக் காட்டும், அதே மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகளின் உதவியை நாடினார்கள். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையிலான ஒற்றைத் துருவ உலக அரசியலில், இடதுசாரிகளை  விட வலதுசாரிகள் பிரயோசனமாக இருப்பார்கள் என்று நம்பினார்கள். அதனால், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனுக்கு தேர்தல் நிதி வழங்கினார்கள். 2008 ம் ஆண்டு தொடங்கப் பட்ட, "ஒபாமாவுக்கான தமிழர்  அமைப்பு" இன்னமும் இயங்குகின்றது.  (பார்க்க: http://www.prweb.com/releases/2008/10/prweb1426594.htm)

புலம்பெயர்ந்த புலிகளின் செயற்பாட்டாளர்கள் பலர், அந்தந்த நாடுகளில் உள்ள ஆளும் கட்சிகளின் உறுப்பினர்களாக கூட இருந்திருக்கிறார்கள். இன்னமும் இருக்கிறார்கள். உதாரணத்திற்கு, கனடாவின் பிரபல தமிழ் அரசியல்வாதியான ராதிகா சிற்சபேசன் ஒரு புலி ஆதரவாளர் என்பது இரகசியம் அல்ல. ஆனால், அவர் உறுப்பினராக உள்ள NDP கட்சி, ஆப்கானிஸ்தான், ஈராக் மீதான கனடாவின் ஏகாதிபத்திய போர்களுக்கு ஆதரவாக இருந்தது.  (NDP: Part of the Imperialist System, http://www.pcr-rcp.ca/en/archives/741)

உண்மையில், திருமுருகன் காந்தியிடமும், ஏகாதிபத்தியம் பற்றிய தெளிவான விளக்கம் கிடையாது. புலிகள் அழியும் போது மட்டும் தானா, ஏகாதிபத்தியம் என்ற ஒன்று இருப்பது அவர் கண்களுக்கு தெரிந்தது? அதற்கு  முன்னரும், பின்னரும் ஏகாதிபத்தியம் என்ன செய்தது என்று சொல்வாரா?  இலங்கை போன்ற மூன்றாமுலக நாடுகளில், இனங்களை மோத விட்டு வேடிக்கை பார்ப்பதும், யுத்தங்களை உண்டாக்கி ஆயுதங்களை விற்பதும் ஏகாதிபத்தியம் தான். அதற்காக இரண்டு பக்கமும் நண்பனாக நடிப்பார்கள். இறுதியில் மறுகாலனியாதிக்கத்தில் கொண்டு வந்து முடிப்பார்கள்.


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

No comments: