Wednesday, December 17, 2014

பபுவா நியூ கினியாவில் தமிழ் மொழி!


பபுவா நியூ கினி பற்றி கேள்விப் பட்ட தமிழர்கள் மிகக் குறைவு. பபுவா மக்களும் தமிழர்களைப் பற்றி அறிந்திருக்க மாட்டார்கள். தமிழகத்திற்கும், பபுவா நியூ கினிக்கும் நடுவில் எட்டாயிரம் கிலோ மீட்டர் தூரம்! இத்தனை தொலைவில் வாழும் பழங்குடி மக்களின் மொழியில் ஆயிரக் கணக்கான தமிழ்ச் சொற்கள் புழங்கி வருகின்றன.

பல இடங்களின் பெயர்கள், நபர்களின் பெயர்கள் தமிழ் போன்று ஒலிக்கின்றன. உதாரணத்திற்கு: வா (Wau), கரிமுகம் (Karimui), பூ (Pua), இரவி (Erave), லிங்கம், நாகம் இன்னும் பல. ஒரு மலைக்குப் பெயர் "காவேரி ஹில்ஸ்". அங்கே நிலம் இன்றைக்கும் "பூமி" என்றே அழைக்கப் படுகின்றது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில், பபுவா நியூ கினியா பற்றி வெளியுலகிற்கு தெரியாமல் இருந்தது. ஆங்கிலேய, டச்சு காலனியாதிக்கவாதிகள் அந்தப் பிரதேசத்தை "கண்டுபிடித்த" போது, புராதன கால மனித சமுதாயம் இருப்பதை கண்டறிந்தார்கள்.

காலனிய ஆட்சி காரணமாக, பெரும்பான்மையான பபுவா மக்கள் கிறிஸ்தவர்களாக மாறி விட்டார்கள். அதனால், கிறிஸ்தவப் பெயரை சூட்டிக் கொண்டாலும், குடும்பப் பெயராக பபுவா மொழிப் பெயர் ஒன்றை வைத்துக் கொள்கின்றனர். அவையும் தமிழ் போன்றே ஒலிக்கின்றன. உதாரணத்திற்கு: Kuala (குள்ளன்), Muliah (மூலை), Koleala (கோழிக் காரன்)... இன்றைய பபுவா பாராளுமன்றம் அமைந்திருக்கும் இடத்தின் பெயர் Waigani (வாய்க் காரன்).

இதை கேட்ட உடனே, "பார்த்தீர்களா! கல் தோன்றா மண் தோன்றாக் காலத்திற்கு முந்திய தமிழ்..." என்று இனப் பெருமை பேசக் கிளம்பி விடாதீர்கள். "தமிழ்" என்ற பெயர்ச் சொல் நவீன காலத்திற்குரியது. அதற்கு முன்னர் எழுதப் படாத பல மொழிகளை முன் - தமிழ் (Proto - Tamil) என்று அழைக்கலாம்.

அது ஒரே மொழியாகவோ, அல்லது பல மொழிகளின் சேர்க்கையாகவோ இருந்திருக்கலாம். அதைப் பற்றி அதிகம் தெரியாத படியால் தான், தமிழ் என்ற பொதுப் பெயரால் அழைக்கிறோம். மேலும் இந்தோனேசியாவில் பேசப்படும் மொழிகளில் சமஸ்கிருதச் சொற்கள் கலந்திருப்பது ஏற்கனவே தெரிந்த விடயம்.

இன்றைக்கும் பபுவா நியூ கினியில் பல நூறு வித்தியாசமான மொழிகள் பேசப் படுகின்றன. (இந்தோனேசியாவின் ஒரு பகுதியான மேற்கு பபுவாவிலும் அதே மொழிகள் பேசப் படுகின்றன.) ஏற்கனவே பல அழிந்து விட்டன. கிறிஸ்தவ மதம் பரப்பச் சென்றவர்கள், பெரும்பான்மை மொழிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வந்தனர். ஆங்கிலேய பேரினவாதிகள் (அல்லது அவுஸ்திரேலியர்கள்) அவுஸ்திரேலியாவின் பூர்வீகப் பெயர்களை அழித்து விட்டு, அவற்றை ஆங்கில மயப் படுத்தினார்கள். ஆனால், பபுவா நியூ கினியாவில் ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகப் புகுத்தினார்கள்.

பபுவாவில் பூர்வீக இடப் பெயர்கள் அப்படியே இருந்தாலும், ஆங்கில மயமாக்கல் காரணமாக சில மாற்றங்களுக்குள்ளாகி இருக்கலாம். டச்சுக் காரர்களின் காலனிய மேலாதிக்கத்திற்கு உட்பட்டிருந்த பபுவா பிரதேசம், பிற்காலத்தில் இந்தோனேசிய ஆக்கிரமிப்பினால் மேலும் பாதிப்புக்குள்ளாகியது.

எழுத்து வடிவம் இல்லாதிருந்த பபுவா மக்களின் பூர்வீகம் குறித்து அறிந்து கொள்வது கடினம். ஆயினும், அவர்கள் ஏதோ ஒரு வகையில் தமிழர்களுடன் தொடர்புடையவர்கள் என்பதை, மொழிகளுக்கு இடையிலான ஒற்றுமை எடுத்துக் காட்டுகின்றது. இவை எல்லாம், நாம் இது வரை காலமும் படித்து வந்த சரித்திரம் பொய்யானது என்பதை நிரூபிக்கின்றன. 

இராமாயணக் கதை கூட ஆதியில் வேறு விதமாக சொல்லப் பட்டிருக்கலாம். அது இந்தியாவில் நடந்திருக்க வேண்டும் என்ற அவசியமும் கிடையாது. பபுவாவில் சில இடங்களின் பெயர்கள், "ராம் - இராவண சகோதரர்கள்" என்று உள்ளன. இராமாயணக் கதை நடந்ததாக கருதப்பட்ட கால கட்டத்திற்கு முந்திய காலத்தில் இருந்தே,  பபுவாவில் மனித இனங்கள் இருந்து வருகின்றன.)

தமிழர்களின் பூர்வீகம் இந்தியா அல்லது "குமரி கண்டம்" என்பது, இனத் தூய்மைவாதம் சார்ந்த நவீன கால அரசியல் கோட்பாடு. தமிழர்களின் பூர்வீகம், ஆப்பிரிக்காவோ அல்லது பபுவா நியூ கினியாவாகவோ கூட இருக்கலாம். ஏன் அந்தத் திசையில் யாரும் ஆய்வு செய்வதில்லை? தற்கால பூகோள அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பு தான், பபுவா கருப்பின மக்களோடு எங்களை இனங் காண விடாமல் தடுக்கின்றது.

மேலதிக தகவல்களுக்கு:

பபுவா பற்றிய முன்னைய பதிவுகள்:

No comments: