Monday, January 19, 2015

ஹார்கிஸ் : பிரெஞ்சு அடிவருடிகளான அல்ஜீரிய ஒட்டுக் குழுவினரின் கதை


"ஹார்கிஸ்": இவர்கள் யார் என்று தெரியுமா? தெரியாவிட்டால் ஒரு புலி ஆதரவாளரிடம் கேட்டுப் பாருங்கள். "ஒட்டுக்குழு" என்று பதில் சொல்வார். அல்ஜீரிய விடுதலைப் போரை நசுக்குவதற்காக, பிரெஞ்சு பேரினவாத அரசு பயன்படுத்திய துணைப் படையின் பெயர் தான் ஹார்கிஸ். அல்ஜீரியாவில் அவர்களின் பெயர் "ஒட்டுக் குழு!" 

அதாவது, எஜமான விசுவாசம் காரணமாக பிரான்சுக்கு சேவை செய்த அல்ஜீரிய துணைப் படையினர். விடுதலைக்காக போராடிய அல்ஜீரிய மக்களின் பார்வையில்: "இனத் துரோகிகள்". பிரெஞ்சு இராணுவம், தமது சொந்த இன மக்களை இலட்சக் கணக்கில் இனப்படுகொலை செய்த நேரத்திலும், ஹார்கி ஒட்டுக் குழுவினர் எஜமானனின் காலை நக்கிக் கொண்டிருந்தனர்.

சார்லி எப்டோ தாக்குதலுக்குப் பின்னர், பிரான்ஸில், பிரெஞ்சு பேரினவாத அரசுக்கு அடிவருடும் தமிழ் ஒட்டுக் குழுக்கள் பெருகி விட்டன. பிரெஞ்சு ஏகாதிபத்திய எஜமான் வீசும் எலும்புத் துண்டுகளுக்காக, தாங்களும் வெள்ளையர்கள் போன்று பாவனை செய்து கொள்கின்றனர். 

"பிரெஞ்சுக் கனவான்கள் தமிழர்களின் "உண்மையான" நண்பர்கள்... பிரான்சில் வாழும் தமிழர்கள் பிரெஞ்சு மொழியை சரளமாக பேசி, பிரெஞ்சு சமுதாயத்தில் ஒன்று கலக்க வேண்டும்... பிரெஞ்சு அரசுக்கு விசுவாசமாக சேவை செய்து நற்பெயரை சம்பாதிக்க வேண்டும்..." என்று, அடிமைகள் போன்று எஜமான விசுவாசம் காட்டும் இவர்கள், ஹார்கிஸ் ஒட்டுக் குழுவின் வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

சிறிலங்காவும், ஈழமும் தமிழ் தேசியவாதிகளினால் இரண்டு தேசங்களாக கருதப் படுகின்றன. "சிங்கள சிறிலங்கா, தமிழீழப் பகுதிகளை ஆக்கிரமித்திருக்கிறது..." என்று அவர்கள் சொல்லக் கேள்விப் பட்டிருப்பீர்கள். அல்ஜீரியா உண்மையிலேயே, நூறு வருடங்களுக்கும் மேலாக, பிரான்சின் ஒரு மாகாணமாக ஆளப் பட்டு வந்தது. 

அதன் அர்த்தம், குறைந்த பட்சம் காகிதத்திலாவது, அல்ஜீரியர்களும் பிரெஞ்சுப் பிரஜைகளாக கருதப் பட்டனர். ஆனால், இரண்டாந்தர பிரஜைகளாக உரிமைகள் இன்றி அடக்கப் பட்டனர். "பிரான்சில் வாழும் தமிழர்கள் பிரெஞ்சு மொழியை சரளமாக பேசி, பிரெஞ்சு சமுதாயத்தில் ஒன்று கலக்க வேண்டும்" என்று, இன்றைக்கு நேற்று பிரான்சுக்கு வந்த தமிழ் அடிவருடிகள் கனவு காண்கின்றனர். பிரான்சில் வாழும் அல்ஜீரியர்கள், கடந்த 150 வருடங்களாக, பிரெஞ்சு மொழியை சரளமாகப் பேசிக் கொண்டிருக்கும், பிரெஞ்சு பிரஜைகளாகவே வாழ்ந்து வருகின்றனர்.

அல்ஜீரிய- முஸ்லிம் போர் வீரர்கள், பிரெஞ்சு இராணுவத்தில் சேவை செய்வது, ஏற்கனவே பல வருட காலமாக நடந்து வந்துள்ளது. பிரான்சின் காலனியப் போர்களிலும், அல்ஜீரிய வீரர்கள் போரிட்டுள்ளனர். ஆசியாவில் பிரெஞ்சுச் காலனியாகவிருந்த, வியட்நாம், கம்போடியாவில் நடந்த போர்களிலும் ஏராளமான அல்ஜீரிய வீரர்கள் பலியானார்கள்.

ஐரோப்பாவில் நடந்த முதலாம் உலகப் போரில் மட்டும், கிட்டத் தட்ட ஒரு இலட்சம் அல்ஜீரிய வீரர்கள் பலியானார்கள். இரண்டாம் உலகப் போரிலும் பல்லாயிரக் கணக்கான அல்ஜீரிய வீரர்கள், பிரான்சின் விடுதலைக்காக மரணத்தை தழுவியுள்ளனர். உண்மையில், பல இலட்சம் அல்ஜீரிய படையினரின் உயிர்த் தியாகம், இரண்டு உலகப் போர்களிலும் பிரான்சின் வெற்றியை தீர்மானித்தது.

தமிழீழம் போன்று, அல்ஜீரியா பிரான்சில் இருந்து பிரிந்து தனி நாடாக வேண்டுமென்று கோரிக்கை எழுந்த பின்னர் தான், ஹார்கிஸ் ஒட்டுக்குழு உருவானது. ஏனெனில், அல்ஜீரிய விடுதலைப் போராட்டம் ஆரம்பமானதும், அல்ஜீரிய வீரர்கள் ஏதாவது ஒரு பக்கத்தை தெரிவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பல முன்னாள் பிரஞ்சுப் படை வீரர்கள், FLN விடுதலை இயக்கத்தில் இணைந்து கொண்டனர். 

FLN (Front de Liberation Nationale) தமிழீழம் கோரிப் போராடிய விடுதலைப் புலிகள் போன்று ஒரு தேசிய விடுதலை இயக்கம் ஆகும். ஈழத்தில் தோன்றிய தமிழ் தேசிய அலை காரணமாக, தமிழர்கள் புலிகளை ஆதரித்தது போன்று, அல்ஜீரியாவில் உருவான அல்ஜீரிய தேசிய அலை காரணமாக, அரேபியர்கள் FLN இயக்கத்தை பெருமளவில் ஆதரித்தனர்.

அதனால், பிரான்ஸ் தனக்கு விசுவாசமான ஒட்டுக்குழுவை உருவாக்க வேண்டிய தேவை எழுந்தது. அது தான் ஹார்கிஸ். ஆரம்பத்தில், பிரான்சுக்கு விசுவாசமான ஊர்க்காவல் படையாக அது தோன்றியது. பின்னர், பிரெஞ்சு ஆக்கிரமிப்பு இராணுவத்தின் துணைப் படை ஆகியது.

இன்றைக்கு பிரான்சில் வாழும் பல தமிழர்கள் தம்மையும், பிரெஞ்சு வெள்ளையராக பாவனை செய்து கொள்வதைப் போன்று, அன்றைக்கு பல அல்ஜீரியர்கள் தம்மையும் பிரெஞ்சு வெள்ளையர் என்று கருதிக் கொண்டனர். அப்படியானவர்கள் எஜமான விசுவாசம் காரணமாக ஹார்கிஸ் படையில் சேர்ந்து கொண்டனர்.

ஹார்கி வீரர்கள் பல தரப் பட்ட சமூகப் பின்னணி கொண்டவர்கள். பலர் பரம்பரை பரம்பரையாக பிரெஞ்சு எஜமானுக்கு சேவை செய்து சலுகைகளை அனுபவித்த குடும்பங்களை சேர்ந்தவர்கள். இருப்பினும், FLN பழிவாங்கல் நடவடிக்கைகளினால் பாதிக்கப் பட்டவர்கள் (ஈபிடிபி போன்றவர்கள்), FLN இயக்கத்தினுள் முரண்பட்டு பிரிந்தவர்கள்(கருணா குழு போன்றவர்கள்), போன்றவர்களும் ஹார்கிஸ் ஒட்டுக் குழுவில் சேர்ந்து கொண்டனர்.

பிரான்சில் இருந்து அல்ஜீரியா சுதந்திரம் அடைந்ததும், பிரெஞ்சு அரசுக்கு ஹார்கிஸ் ஒட்டுக் குழுவின் தேவை இருக்கவில்லை. அதனால், பிரெஞ்சு இராணுவத் தளபதிகள் ஹார்கிஸ் படையினரிடம் இருந்த ஆயுதங்களை திருப்பி வாங்கிக் கொண்டு, அல்ஜீரியாவில் தவிக்க விட்டு ஓடி விட்டனர். அல்ஜீரியாவில் முன்பிருந்த பிரெஞ்சு குடியேற்றங்களில் (ஈழத்தில் சிங்களக் குடியேற்றம் மாதிரி) இருந்து வெளியேறிய பல இலட்சம் வெள்ளையின பிரெஞ்சுக் காரர்கள் மட்டுமே பிரான்சினுள் அனுமதிக்கப் பட்டனர். 

தங்களையும் நாயகர்கள் போன்று வரவேற்பார்கள் என்றெண்ணி, பிரான்சுக்கு சென்ற ஹார்கிஸ் ஒட்டுக் குழுவினருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே அவர்களை வரவேற்க யாரும் இருக்கவில்லை என்பது மட்டுமல்ல, வருடக் கணக்காக தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப் பட்டனர். அவர்கள் பிரஞ்சு அரசினால் புறக்கணிக்கப் பட்டார்கள். தற்போது, பிரெஞ்சு சமூகத்தில் ஒன்று கலந்து வாழ்ந்த போதிலும், பிரெஞ்சு தேசத்திற்காக அவர்கள் புரிந்த தியாகம் உதாசீனப் படுத்தப் படுகின்றது.

அதே நேரம், அல்ஜீரியாவில் தங்கி விட்ட ஹார்கிஸ் ஒட்டுக் குழுவினர், மற்றும் அவர்களது குடும்பத்தினர், வெற்றி மமதையில் இருந்த FLN போராளிகளினால் கொல்லப் பட்டனர். மக்களுக்கு முன்னிலையில் மானபங்கப் படுத்தப் பட்டனர். சித்திரவதை செய்யப் பட்டனர். சில இடங்களில், பிரெஞ்சு அடக்குமுறையினால் ஆத்திரமுற்ற பொது மக்களே, முன்னாள் ஹார்கிகளை அடித்துக் கொன்றனர். 

ஆயிரக் கணக்கான ஹார்கி படையினர், முன்பு பிரெஞ்சு அரசு அவர்களுக்கு வழங்கி இருந்த, வீரப் பதங்கங்களை விழுங்கி தற்கொலை செய்து கொண்டனர். அல்ஜீரியா முழுவதும், மொத்தம் ஒரு இலட்சம் ஹார்கிஸ் ஒட்டுக் குழுவினர், மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கொல்லப் பட்டிருக்கலாம் எனக் கணக்கிடப் படுகின்றது.

அல்ஜீரியா விடுதலைப் போராட்ட கால கட்டத்தின் போது, பிரெஞ்சுப் படையினரால் கொல்லப் பட்ட அல்ஜீரிய மக்களின் எண்ணிக்கை பத்து இலட்சத்திற்கும் அதிகமாகும். ஹார்கி அல்ஜீரியர்களே, தமது சொந்த இனத்தவரை கொன்ற சம்பவங்களும் நடந்துள்ளன. சித்திரவதைகள் போன்ற மனித உரிமை மீறல்களிலும், போர்க் குற்றங்களிலும், பிரெஞ்சுப் படையினருடன் ஹார்க்கி ஒட்டுக்குழுவினரும் பங்கெடுத்துள்ளனர். 

அன்று அல்ஜீரியாவில் நடந்த போரில், பல இடங்களில் நடந்த சம்பவங்கள், போர்க் குற்றங்கள் அல்லது இனப்படுகொலை என்று நிரூபிக்கத் தக்கன. அந்த நேரம், ஐ.நா. மன்றம் அவற்றை விசாரிக்கவில்லை. ஏனென்றால், பிரான்ஸ் ஐ.நா. பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரம் கொண்ட மேற்கத்திய வல்லரசு நாடு.

இன்றைக்கு, பிரெஞ்சு பேரினவாத அடக்குமுறைகளுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கும், தமிழ் ஒட்டுக் குழுவினர், ஹார்கி ஒட்டுக்குழுவின் வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், ஒரு காலத்தில் தமிழ் மக்கள் அவர்களை துரோகிகள் என்று ஒதுக்கும் பொழுது, அல்லது பிரெஞ்சு அரசு தனது தேவை முடிந்தவுடன் கை விடும் நேரத்தில், அவர்களுக்கு ஆதரவாக பேசுவதற்கு யாரும் இருக்க மாட்டார்கள்.


மேலதிக தகவல்களுக்கு:

2 comments:

A.Jay Kanthan said...

//// ஒரு காலத்தில் தமிழ் மக்கள் அவர்களை துரோகிகள் என்று ஒதுக்கும் பொழுது, அல்லது பிரெஞ்சு அரசு தனது தேவை முடிந்தவுடன் கை விடும் நேரத்தில், அவர்களுக்கு ஆதரவாக பேசுவதற்கு யாரும் இருக்க மாட்டார்கள்./////

ஸ்ரீ லங்கா அரசு என்றிருக்கவேண்டும் என அஞ்சுகிறேன்

Kalaiyarasan said...

ஸ்ரீ லங்கா அரசு அல்ல, பிரெஞ்சு அரசு. பிரெஞ்சு அரசுக்கு அடிவருடும் தமிழர்கள் நிறையப் பேர் பிரான்சில் வாழ்கின்றனர்.