Thursday, April 16, 2015

சிலி இனப்படுகொலை : வர்க்கத் துவேஷிகளும் ஆபத்தான தீய சக்திகள் தான்


வர்க்கத் துவேஷம் என்பது, இனத் துவேஷத்திற்கு சற்றிலும் குறைவில்லாத தீய குணம் தான். அதனால், வர்க்க விரோதிகளும், இனவெறியர்கள் போன்றே ஆபத்தானவர்களாக கருதப் பட வேண்டும். 

1973 ஆம் ஆண்டு, சிலியில் பினோச்சேயின் சர்வாதிகார ஆட்சி வரும் வரையில், அங்கே எந்தவொரு இடதுசாரி தீவிரவாத அமைப்பும் ஆயுதப் போராட்டம் நடத்தவில்லை. சிலி கம்யூனிஸ்ட் கட்சியுடன் சேர்ந்து ஜனநாயக சோஷலிசத்தை கொண்டு வர விரும்பிய அய்யேண்டே ஆட்சிக் காலத்தில், வலதுசாரிகள், முதலாளிய ஆதரவாளர்கள் யாரும் தண்டிக்கப் படவில்லை. 

ஆயினும், இராணுவ ஜெனரல் பினோச்சே தலைமையில் ஆட்சியைக் கைப்பற்றிய, CIA மற்றும் வலதுசாரி சதிப்புரட்சியாளர்கள், இடதுசாரி, கம்யூனிச சக்திகள் மீது கொலைவெறி கொண்டு பாய்ந்தார்கள். ஈவிரக்கமின்றி சித்திரவதை செய்து கொன்று குவித்தார்கள். சமுதாயத்தில் நிலவும் வர்க்கத் துவேஷம் கூட, இனப்படுகொலைக்கு வழிவகுக்கலாம் என்பதை சிலியில் நடந்த சம்பவங்கள் நிரூபிக்கின்றன. 

ஜனநாயகப் பொதுத் தேர்தலில் தெரிவான சோஷலிச ஜனாதிபதி அய்யேண்டே ஆட்சி நடத்திய காலத்திலேயே, CIA அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை தூண்டி விட்டது. வெனிசுவேலாவில் நடந்ததைப் போன்று, சிலியிலும் மத்தியதர வர்க்க மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர். முகாம்களில் இருந்த படையினரை உசுப்பி விடுவதற்காக, மத்தியதரவர்க்க பெண்கள் முகாம்களுக்குள் தானியங்களை வீசினார்கள். படையினர் கோழைகள், கோழிகள் போன்றவர்கள் என்று சீண்டுவதே அதன் நோக்கம். அரசுக்கு எதிராக இராணுவத்தை திருப்பி விட இது போதாதா?

இராணுவ சர்வாதிகார அரசு, அனைத்து அரசியல் கட்சிகளையும் தடை செய்தது. பிரஜைகளுக்கான சட்டப் பாதுகாப்பை இரத்து செய்தது. சோஷலிசம் மட்டுமல்ல, ஜனநாயகத்திற்கு ஆதரவானவர்கள் கூட கைது செய்யப் பட்டு துன்புறுத்தப் பட்டனர். அவர்களை அடைத்து வைப்பதற்கு நாடு முழுவதும் நூற்றுக் கணக்கான தடுப்பு முகாம்கள் உருவாகின.

தலைநகரில் உள்ள மிகப் பெரிய விளையாட்டு மைதானமான Estadio Nacional இல், சதிப்புரட்சிக்கு அடுத்த நாள் மட்டும் தொழில்நுட்பக் கல்லூரியை சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்களான 600 பேர் கொண்டு வரப் பட்டு சித்திரவதை செய்யப் பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் உயிரோடு திரும்பிச் செல்லவில்லை. இராணுவ சர்வாதிகார ஆட்சி நடந்த 17 வருட காலங்களில், குறைந்தது 40000 பேர் அங்கு கொண்டு வரப் பட்டுள்ளனர்.

அய்யேண்டே பதவிக்கு வருவதற்கு தேர்தலில் ஒட்டுப் போட்ட, பெருமளவு வாக்காளர்கள் வாழ்ந்த இடங்களின் மீது ஹெலிகாப்டர் தாக்குதல் நடத்தப் பட்டது. பினோச்சேயின் நேரடி உத்தரவின் பேரில், நூற்றுக்கணக்கான கைதிகள் ஆள்நடமாட்டமில்லாத பகுதிகளுக்கு கொண்டு செல்லப் பட்டனர். படையினர் அங்கு அவர்களை துண்டு துண்டாக வெட்டினார்கள். சிலரை உயிரோடு கொளுத்தினார்கள். பலரது கால் எலும்புகள் முறிக்கப் பட்டன. கண்கள் தோண்டியெடுக்கப் பட்டன. உயிரற்ற உடல்கள் குப்பைக் குவியல்களுடன் வீசப் பட்டன. அன்று பலியானவர்கள் செய்த ஒரேயொரு குற்றம், சோஷலிச மாற்றத்திற்காக ஒரு ஜனநாயக அரசை ஆதரித்தது தான்.

நிச்சயமாக, எல்லா இராணுவ அதிகாரிகளும் மக்களுக்கு எதிரான அராஜகச் செயல்களில் ஈடுபடவில்லை. ஆனால், மறுத்தவர்கள் அதிகாரிகளாக இருந்தாலும் கைது செய்யப் பட்டு சித்திரவதை செய்யப் பட்டனர். இரக்கமற்று கொலை செய்யப் பட்டனர். Carlos Prats என்ற இராணுவ அதிகாரி, சதிப்புரட்சியில் ஈடுபட மறுத்து ஆர்ஜெந்தீனாவுக்கு தப்பியோடினார். அங்கு வைத்து கார்க் குண்டுவெடிப்பு மூலம் கொலை செய்யப் பட்டார்.

மக்கள் மத்தியில் பயங்கரத்தை விதைப்பதற்காகவே DINA (Dirección de Inteligencia Nacional) என்றொரு புலனாய்வுப் பிரிவு உருவாக்கப் பட்டது. அந்தப் பிரிவின் கட்டுப்பாட்டில் இருந்த Villa Grimaldi எனும் சித்திரவதை முகாமில் சொல்லொணா கொடுமைகள் நடந்துள்ளன. 

1978 ம் ஆண்டு முகாம் மூடும் வரையில், குறைந்தது 4500 இளைஞர்களும், யுவதிகளும் சித்திரவதை செய்யப் பட்டனர். வன்புணர்ச்சி, மின்சார அதிர்ச்சி கொடுத்தல், நீருக்குள் அமிழ்த்தல், போன்ற கொடுமைகள் தினந்தோறும் நடந்துள்ளன. பெண்கள் விசேடமாக பாலியல் ரீதியாக துன்புறுத்தப் பட்டனர். பெண்ணுறுப்புக்குள் எலியை அல்லது சிலந்தியை பிடித்து விட்டார்கள். நாய்களுடன், ஆண் குடும்ப உறுப்பினருடன் உடலுறவு கொள்ள வேண்டுமென பலவந்தப் படுத்தப் பட்டனர்.

17 வருட கால இராணுவ சர்வாதிகார ஆட்சிக் காலத்தில், பினோச்சே இடதுசாரிகள் அனைவரையும் அழிக்க விரும்பினான். கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகள், மற்றும் ஜனநாயக இடதுசாரிகள் எல்லோரையும், அவர்களது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் உட்பட அழித்தொழிப்பதே நோக்கமாக இருந்தது. 

சிலியில் இராணுவ சர்வாதிகார ஆட்சி நடந்த காலங்களில், குறைந்தது 82000 பேர் கைது செய்யப் பட்டனர். 30000 பேர் சித்திரவதை செய்யப் பட்டனர். 3000 பேர் கொல்லப் பட்டனர். சிலியில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்கள், Report of the Chilean National Commission for Truth and Reconcilliation இல் பதிவு செய்யப் பட்டுள்ளன.  

இராணுவ சதிப்புரட்சியின் பின்னர், அமெரிக்க பொருளாதார நிபுணர்களின் வழிகாட்டலின் கீழ் சிலி மறுசீரமைக்கப் பட்டது. தென் அமெரிக்காவின் நவ தாராளவாத கொள்கையின் பரிசோதனைச் சாலையாக பயன்படுத்தப் பட்டது. அதாவது, பொருளாதாரத்தில் அரசு தலையிடக் கூடாது. முதலாளிகளுக்கு வேண்டியளவு சுதந்திரம் வழங்கப் பட்டது. இதனை நிறைவேற்றிய நிபுணர் குழுவில், நோபல் பரிசு பெற்ற மில்ட்டன் பிறீட்மன் கூட அங்கம் வகித்திருந்தார். சிலி சதிப்புரட்சியிலும், அதற்குப் பின்னரான இனப்படுகொலையிலும் அமெரிக்காவின் பங்களிப்பு இருந்துள்ளதை யாராலும் மறுக்க முடியாது.

வலதுசாரி இராணுவ சர்வாதிகாரி பினோச்சேயினால், இடதுசாரி சக்திகளை பலவீனப் படுத்த முடிந்ததே தவிர, முற்றாக அழிக்க முடியவில்லை. தொண்ணூறுகளின் இறுதியில் மீண்டும் ஜனநாயக ஆட்சி கொண்டு வரப் பட்டது. அப்போது சட்டபூர்வமாக அங்கீகரிக்கப் பட்ட சிலி கம்யூனிஸ்ட் கட்சி, சோஷலிசக் கட்சி என்பன தற்போது வளர்ந்து வருகின்றன. 2006 ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் மீண்டும் ஒரு சோஷலிஸ்ட், சிலியின் முதலாவது பெண் ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப் பட்டார். 

2014 ம் நடந்த தேர்தலில், இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியான Michelle Bachelet, பினோச்சே சர்வாதிகாரத்தினால் பாதிக்கப் பட்டவர். அவரது தந்தை அல்பேர்ட்டோ படையினரால் கொலை செய்யப் பட்டார். அப்போது நாட்டை விட்டு வெளியேறிய Michelle Bachelet, 1979 ம் ஆண்டு திரும்பி வந்து அரசியலில் ஈடுபட்டார்.

சிலி தொடர்பான முன்னைய பதிவு:
9/11 சிலியின் ஜனநாயகப் படுகொலை நினைவுதினம்

No comments: