Saturday, April 25, 2015

கெனோசீடே (Genocide) : இனப்படுகொலையா? அல்லது மக்கட்படுகொலையா?

Genocide (கெனோசீடே) என்ற சொற்பதத்தினை தமிழில் இனப்படுகொலை என்று மொழிபெயர்த்தவர் யாரென்று தெரியவில்லை. ஆனால், அது பல தடவைகள் சரியான அர்த்ததுடன் பயன்படுத்தப் படுவதில்லை.

Genos (கெனோஸ்) என்ற கிரேக்க சொல்லுக்கு நிகரான சமஸ்கிருத சொல் "கணம்". அதையொத்த தமிழ்ச் சொல் ஜனம் (மக்கள்) ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது.

Genocide என்பது பெரும்பான்மையான உலகமொழிகளில் அவ்வாறே பயன்படுத்தப் பட்டாலும், தமிழ் போன்று பிற மொழிகளிலும் மொழிபெயர்த்து பாவிக்கிறார்கள். ஜெர்மன் மொழியில் Völkermord. டச்சு மொழியில் Volkerenmoord, சுவீடிஷ் மொழியில் Folkmord. டேனிஷ் மொழியில் Folkemord / Folkedrabet.

ஜெர்மன் சொல்லான völk ஆங்கிலத்தில் folk, அதாவது மக்கள் என்ற அர்த்தத்தில் பாவிக்கப் படுகின்றது. சிங்கள மொழியில் கூட, "மக்கள் அழிப்பு" (ජන සංහාරය - ஜன சங்காரம்) என்று தான் மொழிபெயர்த்துள்ளனர்.

ஆகவே, இதனை தமிழில் "மக்கட்படுகொலை" என்று மொழிபெயர்ப்பது தான் சரியானதாக இருக்கும்.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து:

//இனப்படுகொலை (Genocide) ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, மனித இனம் சார்ந்த, இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால் கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது.

இது குறித்து 1948 இல் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் சபை இதை தடைசெய்யப்பட்ட, தண்டணைக்குரிய மற்றும் குற்றமுறை செயலாக ஐ நா சட்ட விதி 2 இன்படி அறிவித்துள்ளது. இதன்படி ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, மனித இனம் சார்ந்த, இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால், உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லை கொடுப்பது, கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது, இனவேறுபாட்டைக் காரணங்காட்டி குழந்தைப் பிறப்பை தடுப்பது, குழந்தைகளை இடம் பெயரச் செய்வது, வேறு எவ்வகையிலாயினும் இனவேறுபாடு காட்டுவது போன்றவை குற்றமுறை செயல்களாக, இனப்படுகொலைக் குற்றங்களாக சர்வதேச தடைச்சட்டத்தின்படிக் குற்றச்செயலாகும். இனப்படுகொலை (Genocide) என்ற வார்த்தை முதன் முதலில் ரபேல் லேம்கின் 1944ல் வெளிவந்த "Axis Rule in Occupied Europe" என்ற புத்தகத்தில் பயன்படுத்தியுள்ளார்.//
அது தொடர்பான என்னுடைய கருத்துக்கள்:
ரஃபேல் லெம்கின் பெருந்திரளான மக்கள் படுகொலையை குறிப்பதற்கு தான் அதைப் பயன்படுத்தினார். ஏற்கனவே யூதப் படுகொலையானது, pogrom (ரஷ்யா), holocaust (ஜெர்மனி) போன்ற ஹீபுரு மொழிச் சொற்களால் அழைக்கப் பட்டு வந்துள்ளன. அதை யூதர்கள் தமக்குரிய சொல்லாக மட்டும் வைத்திருக்க விரும்புகிறார்கள்.

ஜேர்மனியர்களும், யூதர்களும் தனிதனி இனமாக இருக்கவில்லை. ஒரே மொழி பேசும் ஓரின மக்கள் தான். சியோனிஸ்டுகளும், நாஸிகளும் யூதர்களை தனியான இனமாகக் உருவகித்துக் காட்ட முனைந்தனர். ஆயினும், இன்றைய நாகரிக உலகில் அந்தக் கருத்துக்கள் இனவாதமாக கருதப் படுகின்றன.
பொஸ்னியாவில் சேர்பியர்களினால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்களும் தனியான இனம் அல்ல. நிறத்தால், இனத்தால், மொழியால், கலாச்சாரத்தால், செர்பியர்களுக்கு நெருக்கமானவர்கள். மதம் மட்டுமே வேறு வேறு.

மேலும், இந்தோனேசியாவில், குவாத்தமாலாவில், அரசியல் கொள்கை வேறுபாடு காரணமாக நடந்த genocide பற்றி பெரும்பாலான தமிழர்கள் பேசுவதில்லை. கம்போடியாவில் நடந்த genocide பற்றி விசாரிப்பதற்கு ஐ.நா. நீதிமன்றம் அமைக்கப் பட்டது. ஆனால், அது கூட கம்போடியர்களை கொலை செய்த கம்போடியர்களுக்கு எதிரான நீதிமன்றம் தான். ஒரே மொழி பேசும், ஓரின மக்களுக்கு இடையில் நடந்த படுகொலைகளை விசாரிப்பதற்காக அமைக்கப் பட்டது.

"ஒரே மொழி பேசும் மக்களுக்குள் படுகொலை நடந்திருந்தால், அது இனப்படுகொலை ஆகாது" என்று சில தமிழ் அறிவுஜீவிகள் வாதாடுகிறார்கள். அது தவறு. யூதர்களும், ஜெர்மனியர்களும் ஒரே மொழி பேசினார்கள். சேர்பியர்களும், பொஸ்னியர்களும் ஒரே மொழி பேசினார்கள். ஆனால், அவை எல்லாம் genocide என்று தான் அழைக்கப்பட்டன.

Genocide என்பது பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட அரசியல் கலைச்சொல். genos என்ற கிரேக்கச் சொல்லையும், cide என்ற லத்தீன் சொல்லையும் சேர்த்து உருவாக்கப் பட்டது. அப்போது எந்த ஐரோப்பிய மொழியிலும் அப்படி ஒரு சொல் இருக்கவில்லை. genocide என்பது பெருந்தொகையான அளவில் மக்களை படுகொலை செய்வதைக் குறிக்கும். ஐ.நா. வில் அதற்கான வரைவிலக்கணம் கொடுக்க வேண்டிய தேவை எழுந்த பொழுது கூட பல நாடுகளுக்கு இடையில் ஒருமித்த கருத்து இருக்கவில்லை.

குறிப்பாக தமிழில் " இனப்படுகொலை" என்று சொல்லும் அர்த்தத்தில்பயன்படுத்துவதை, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரிட்டன் போன்ற நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால், அவை ஏற்கனவே காலனிகளில் இருந்த பூர்வகுடி இனங்களை அழித்தொழித்து விட்டிருந்தன. 

அதனால், தமிழில் புரிந்து கொள்ளப்படும் "இனப்படுகொலை" என்ற அர்த்தத்தில், மேற்குலகில் பயன்படுத்தப் படுவதில்லை. Genocide என்ற சொல்லின் வரைவிலக்கணத்திற்குள் இனம் என்ற அர்த்தம் வரக்கூடாது என்று அமெரிக்கர்கள் பிடிவாதமாக மறுத்து வந்தனர். ஏனென்றால் செவ்விந்தியர்களை படுகொலை செய்த குற்றச்சாட்டு தம்மீது சுமத்தப்படும் என்ற அச்சம் காரணம்.

நாகரிக உலகின் போக்கிற்கு ஏற்றவாறு தமிழ்மொழியில் திருத்தங்கள் கொண்டு வருவது புதுமை அல்ல. வன்புணர்ச்சி, பாலியல் தொழிலாளி, திருநங்கையர், மாற்றுத் திறனாளி போன்ற பல புதிய சொற்கள், ஏற்கனவே இருந்த விரும்பத்தகாத அர்த்தம் தரும் சொற்களுக்கு மாற்றாக வந்துள்ளன. அதே மாதிரி, இனப்படுகொலை என்பதை மக்கட்படுகொலை என்று திருத்திக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். 


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

இனப் படுகொலை விசாரணை: தோற்றவர்களுக்கு எதிரான வென்றவர்களின் நீதி!
http://kalaiy.blogspot.nl/2014/04/blog-post.html
மேலைத்தேய நிதியில் நடந்த தமிழ் இனப்படுகொலை http://kalaiy.blogspot.nl/2010/10/blog-post_30.html
இந்தோனேசியாவின் இரகசியமான இனப்படுகொலை http://kalaiy.blogspot.nl/2013/03/blog-post_8.html
அமெரிக்க அங்கீகாரம் பெற்ற கம்யூனிச இனவழிப்பு : ஊடகங்களில் இருட்டடிப்பு
http://kalaiy.blogspot.nl/2013/04/blog-post_17.html
கனடா வரலாற்றில் மறைக்கப் பட்ட இனவழிப்பு குற்றங்கள் http://kalaiy.blogspot.nl/2014/06/blog-post_4.html
இனவழிப்பு சாதனையாளன் கொலம்பஸை கௌரவிக்கும் அமெரிக்கர்கள் http://kalaiy.blogspot.nl/2010/10/blog-post_13.html 
உலகம் மறந்து விட்ட உக்ரைனிய- யூத இனவழிப்பு காட்சிகள் http://kalaiy.blogspot.nl/2014/03/blog-post_11.html 
ஐரோப்பியர்கள் இனவழிப்பு செய்த, ஆப்பிரிக்க வெள்ளையினம்! http://kalaiy.blogspot.nl/2012/05/blog-post_21.html 
இனவழிப்பு குற்றவாளிக்கு நோபல் பரிசளிக்கும் அமெரிக்க நீதி
http://kalaiy.blogspot.nl/2012/08/blog-post_6.html

No comments: