Friday, August 07, 2015

கம்யூனிச எதிர்ப்பு புளுகுகளை எழுதிய போலி "சரித்திர" ஆசிரியர் காலமானார்!


மேற்குலக முதலாளிய எஜமானர்களின் அடியாளாக, வரலாறு என்ற பெயரில் புனைகதைகளை எழுதி வந்த Robert Conquest, தனது 98 வது வயதில் கலிபோர்னியாவில் (3-8-2015) காலமானார். சோவியத் யூனியனில் நடந்த "ஸ்டாலினின் படுகொலைகள்" பற்றிய பொய்களை பரப்புரை செய்த, மேற்குலக "சரித்திர" ஆசிரியர் அவர் தான்.

ஆங்கில-அமெரிக்க பெற்றோருக்கு பிறந்த ரொபேர்ட், பனிப்போர் காலத்தில் டாலர்களை அள்ளிக் கொடுத்த, எஜமானர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்வதற்காக, "ஸ்டாலினின் பயங்கரம்" (The Great Terror) என்ற நூலை எழுதினார்.

அவர் ஓர் உண்மையான "சரித்திர" ஆசிரியராக இருந்தால், எதற்கு ஸ்டாலினின் படுகொலைகள் பற்றிய நூலை, சோவியத் யூனியனின் ஜென்ம விரோதியான அமெரிக்காவில் இருந்து வெளியிட வேண்டும்? எதிரி தரப்பினால் தெரிவிக்கப் படும் தகவல்கள் நம்பக் கூடியனவா?

ரொபேர்ட் ஒரு நேர்மையான "சரித்திர" ஆசிரியராக இருந்திருந்தால், அன்று அமெரிக்காவை, அல்லது சோவியத் யூனியனை சார்ந்திராத, "அணிசேரா நாடு" ஒன்றில் இருந்து எழுதி வெளியிட்டிருக்கலாமே? அமெரிக்க அரசின் நிதியுதவியுடன், அமெரிக்காவில் வெளியான ஒரு நூல் எந்தளவு நம்பகத் தன்மை வாய்ந்தது?

"கம்யூனிச எதிர்ப்பாளர்களின் பைபிள்" என்று கருதப் படும் அந்த நூலை மேற்கோள் காட்டியே, இன்று வரையில் ஸ்டாலினுக்கு எதிரான அவதூறுகள் பரப்பப் பட்டு வருகின்றன. ஸ்டாலின் இருபது மில்லியன் பேரை கொலை செய்ததாக தெரிவிக்கப்படும் "புள்ளி விபரம்(?)", அந்த நூலில் இருந்து தான் பெறப் பட்டது. (அதற்கு எந்த ஆதாரமும் இல்லாமலே எழுதி இருந்தார்.)

திருஞான சம்பந்தர் தனது ஞானக்கண்ணால் கோயிலைப் பார்த்து தேவாரம் பாடியதைப் போல, இந்த "சரித்திர" ஆசிரியரும், சோவியத் யூனியனுக்கு செல்லாமலே, கற்பனையில் கண்ட காட்சிகளை புத்தமாக எழுதினார். அந்த ஆதாரமற்ற பொய்களை இன்றும் பலர் இரை மீட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பிரச்சார நோக்கில், வேண்டுமென்றே எண்ணிக்கைகளை மிகைப் படுத்தி எழுதுவதாக, அப்போதே இவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. சோவியத் யூனியன் கலைக்கப் பட்ட பின்னர் வெளிச்சத்திற்கு வந்த இரகசிய ஆவணங்கள், இவரது "தகவல்கள்" யாவும் மிகைப் படுத்தல்கள் என்பதை நிரூபித்து இருந்தன.

சோவியத் யூனியன் பக்கம் எட்டியும் பார்த்திராத, ரஷ்ய மொழி தெரியாத ரொபேர்ட், தனது நூலுக்கு தேவையான "ஆதாரங்களை" எங்கிருந்து பெற்றார்? சந்தேகத்திற்கிடமின்றி ஜெர்மன் நாஸிகளின் பிரச்சார ஊடகங்களில் இருந்து தான். ஏனென்றால், பல வருடங்களாக ஜெர்மன் உளவுத்துறை தான் சோவியத் யூனியனுக்குள் என்ன நடக்கிறது என்ற உளவுத் தகவல்களை சேகரித்துக் கொண்டிருந்தது. அதற்கான வளங்கள் நிறையவே இருந்தன. 

உதாரணத்திற்கு, உக்ரைனிய பாசிஸ்டுகள் அல்லது தேசியவாதிகள், நாஸிகளுடன் தொடர்பில் இருந்தனர். நாஸி ஆக்கிரமிப்புக் காலத்தில், உக்ரைனிய சுயாட்சிப் பிரதேசத்தை வைத்திருந்தனர். உக்ரைனிய பஞ்சம் தொடர்பான பல தகவல்கள் அங்கிருந்து கிடைத்தவை தான்.

அந்த "ஆதாரங்களின்" அடிப்படையில் தான், "உக்ரைனிய பஞ்சத்தில் பல இலட்சம் பேர் மாண்டதற்கு ஸ்டாலின் தான் காரணம்" என்று தனது நூலில் கூசாமல் புளுகினார். ஆனால், அன்று உக்ரைனின் ஒரு பகுதி மட்டுமே சோவியத் பிரதேசமாக இருந்தது என்பதையும், ஐரோப்பிய நாடுகள் எல்லாவற்றிலும் பஞ்சம் தலைவிரித்தாடியது என்பதும், இந்த போலி "சரித்திர" ஆசிரியருக்கு தெரியாமல் போனதில் வியப்பில்லை. (பார்க்க: உக்ரைனிய பஞ்சம்: உண்மையும், புனை கதைகளும்; http://kalaiy.blogspot.nl/2014/11/blog-post_22.html )

ஒரு பகுதி பஞ்சத்திற்கு ஸ்டாலின் காரணமாக இருந்தாலும் கூட, உண்மையில் ஸ்டாலின் அறிமுகப் படுத்திய விவசாய கூட்டுறவு உற்பத்தி முறை, பஞ்சத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. ரொபேர்ட் அந்தத் தகவலை தலைகீழாக புரட்டிப் போட்டுள்ளார். பொய் சொல்வதற்கு கூட தைரியம் வேண்டும். அது இந்த போலி "சரித்திர" ஆசிரியர் ரொபேர்ட் இடம் நிறையவே உள்ளது.

அவரால் எப்படி பொய்களை துணிந்து பரப்புரை செய்ய முடிந்தது? சாம்ராஜ்யத்தை ஆளும் சக்கரவர்த்திகள் மனது வைத்தால் எதுவும் சாத்தியமே! மேற்குலகில், முதலாளித்துவ கடும்போக்காளர்கள் என மக்களால் வெறுக்கப் பட்ட ஆட்சியாளர்களான, ரொனால்ட் ரீகன், மார்க்கிரட் தாட்சர் போன்றோருக்கு இவர் தான் குரு நாதர். அதனால் தான், அவர்களே நேரடியாக அழைத்துக் கௌரவித்தார்கள்.

அண்மையில் கூட, இனப்படுகொலையாளி ஜோர்ஜ் புஷ் இவருக்கு விருது வழங்கி இருந்தார். 20 ம் நூற்றாண்டில் நடந்த ஸ்டாலினின் படுகொலைகள் பற்றி நூல் எழுதிய ஒருவர், 21 ம் நூற்றாண்டில் படுகொலைகள் செய்த ஜோர்ஜ் புஷ்ஷின் இரத்தக் கறை படிந்த கரங்களால் விருது வாங்குவதற்கு கூச்சப் படவில்லை!

"ரொபேர்ட் எழுதிய நூலை வாசித்த பின்னர் தான், ஸ்டாலின் நடத்திய படுகொலைகள் பற்றிய "உண்மைகளை" தான் அறிந்து கொண்டதாகவும், மரபு மார்க்சியரான கலையரசனுக்கு இவர் இப்போதும் பொய்யரோ?" என்று முகநூலில் ஒரு கம்யூனிச எதிர்ப்பாளர் ஆதங்கப் பட்டிருந்தார். நண்பர்களே, கலையரசன் சொல்கிறார் என்பதற்காக எதையும் நம்பத் தேவையில்லை. 

Robert Conquest யார் என்பதை நீங்களாகவே தேடிப் பாருங்கள். உலகம் முழுவதும் கம்யூனிசத்தை எதிர்த்து பொய்களை பரப்புவதற்காக நியமிக்கப் பட்ட, பிரிட்டிஷ் அரசின் உளவாளியாக வேலை செய்தவர் தான் இந்த போலி "சரித்திர" ஆசிரியர் Robert Conquest! அதற்கான ஆதாரங்கள் உள்ளன!

Information Research Department (IRD)என்பது பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சின் கீழ் செயற்பட்ட புலனாய்வுத்துறை ஆகும். அதிலே ஏராளமான அறிவுஜீவிகளும், ஊடகவியலாளர்களும் கூலிக்கு அமர்த்தப் பட்டிருந்தனர். அவர்களில் ஒருவர் தான் Robert Conquest! அவர்களது வேலையே புனைகதைகள் எழுதுவது தான். கம்யூனிசம், சோவியத் யூனியன், ஸ்டாலின் பற்றி எப்படியான கட்டுக்கதைகளையும், பொய்களையும் எழுதி பரப்புரை செய்யலாம். மக்கள் மனதில் கம்யூனிசத்தின் மேல் வெறுப்பு வரச் செய்ய வேண்டும். அது தான் முக்கியம்.

பல தடவைகள், CIA, IRD, இரண்டும் சேர்ந்து கூட்டு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. அதன் நடவடிக்கைகள் ஐரோப்பாவுக்குள் மட்டும் நின்று விடவில்லை. குறிப்பாக, இந்தோனேசியாவில் சுகார்னோ அரசுக்கு ஆதரவளித்து வந்த இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சி, அதன் பொய்ப் பரப்புரைகளினால் கடுமையான பின்னடைவுகளுக்கு உள்ளானது. இந்தோனேசியாவுக்கு அயலில் இருந்த, பிரிட்டிஷ் காலனி நாடுகளான சிங்கப்பூர், மலேசியாவில், அது தளம் அமைத்து செயற்பட்டது. அங்கிருந்து கொண்டு, வானொலி மற்றும் பல ஊடகங்களை பயன்படுத்தி, கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரம் செய்யப் பட்டது.

ஏற்கனவே பிரிட்டிஷ் புலனாய்வுத்துறைக்கு வேலை செய்த ஜோர்ஜ் ஆர்வெல் என்ற நாவலாசிரியர் எழுதிய "விலங்குப் பண்ணை", அரபி, சீனம், போன்ற பல உலக மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டு இலவசமாக விநியோகிக்கப் பட்டது. அதற்கான செலவுகளை IRD பொறுப்பெடுத்தது. அப்படிப் பட்ட IRD இன் சேவையில் இருந்த Robert Conquest எழுதிய, ஸ்டாலினைப் பற்றிய "சரித்திர" நூல், எந்தளவு நம்பகத் தன்மை வாய்ந்தது? கம்யூனிச எதிர்ப்புக் காய்ச்சலால் பீடிக்கப் பட்ட அறிவுஜீவிகளே பதில் சொல்லுங்கள்!

No comments: