Monday, February 15, 2016

No Sex please! உடலுறவு வேண்டாம், நாங்கள் தமிழ் இன உணர்வாளர்கள்!


"இலங்கையில் காதலர் தினத்தில் 10000 யுவதிகள் கன்னித் தன்மை இழப்பு!"

தமிழ் மக்களின் மனம் கவர்ந்த பிரபல "தமிழ் தேசிய"(?) இணையத் தளமான தமிழ்வின் (லங்காஸ்ரீ) இது போன்ற செய்திகளின் மூலம் தானும் ஒரு "காலாச்சாரக் காவலர்" என்று காட்டிக் கொண்டுள்ளது. 

தமிழ்வின் காதலர் தின ஸ்பெஷல் செய்தி போடுவதற்கு, ஓரிரு மாதங்களுக்கு முன்னர் தான், கொழும்பு நகரில் மேற்கத்திய பாடகர் இக்லேசியாஸ்ஸின் இசைக் கச்சேரி நடந்தது. அப்போது, பதின்ம வயது இலங்கை மகளிர் தமது உள்ளாடைகளை கழற்றி வீசினார்கள். அதையிட்டு கண்டனம் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரி, தானும் ஒரு கலாச்சாரக் காவலர் போன்று காட்டிக் கொண்டார். சிங்கள தேசியவாதிகளும், தமிழ் தேசியவாதிகளும், கூடவே முஸ்லிம் மதவாதிகளும் ஒன்று சேரும் புள்ளியும் இது (கலாச்சாரம்) தான்.

சுவிட்சர்லாந்தில் இருந்து இயங்கும் தமிழ்வின் இணையத்தளம், தனது நாட்டில் வாழும் எத்தனை பெண்கள் கன்னித் தன்மை இழந்துள்ளனர் என்று ஆய்வு செய்து பார்த்திருக்கலாம். ஆனால், அதைச் செய்யப் போனால் தனது குடும்பத்திற்குள்ளேயே பிரச்சினைகள் உருவாகும் என்பது, தமிழ்வின் இணையத் தள நிர்வாகிக்கு தெரியாதா? மஞ்சள் பத்திரிகை மாதிரி "இலங்கையில் காதலர் தினத்தில் 10000 யுவதிகள் கன்னித் தன்மை இழப்பு!" என்று இலங்கையில் வாழும் கன்னிப் பெண்களின் கற்புக்காக கண்ணீர் வடிக்கின்றது.

இலங்கையில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் சகோதரர் தான் லங்காஸ்ரீ நடத்துகிறார். தனது அண்ணனின் தேர்தல் வெற்றிக்காக இலவச விளம்பரம் செய்து வந்தார். அண்ணனும், தம்பியும் தமிழ் தேசியம் பேசியே சம்பாதிக்கத் தெரிந்தவர்கள். "உலகில் அதி புத்திசாலியான மூன்று இனங்கள் மூன்றும் ஆங்கில "J" எழுத்தில் தொடங்குகின்றன. அவை முறையே "ஜப்பானிஸ் (ஜப்பானியர்கள்), ஜூஸ் (யூதர்கள்), ஜாப்பானிஸ் (யாழ்ப்பாணிகள்) என்று பேசி மக்களை கவரத் தெரிந்தவர் ஸ்ரீதரன். அவரது தம்பி, சுவிட்சர்லாந்தில் இருந்து கொண்டே, தமிழர்கள் யூதர்களை பின்பற்ற வேண்டும் என்று ஆலோசனை கூறி வந்தார்.

தங்களை மட்டுமே புத்திசாலிகள் என்று கருதிக் கொள்ளும் யூத சியோனிஸ்டுகள், இஸ்ரேல் என்ற தேசத்தை உருவாக்கிய பின்னர் யூதர்கள் மட்டுமே பிரஜைகளாக இருக்கலாம் என்று சட்டம் இயற்றினார்கள். அதாவது, விபச்சாரிகள் கூட யூத இனத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அதற்குப் பெயர் தான் யூத தேசியவாதம். ஆனாலும் ஒரு பிரச்சினை இருந்தது. 

யூதப் பெண்கள் ஒழுக்கத்தில் சிறந்தவர்கள் என்று தேசியவாதப் பெருமிதம் பேசிக் கொண்டே பாலியல் தொழிலை அனுமதிக்கலாமா? அதனால், ரஷ்யாவில் இருந்து குடியேறிய பாலியல் தொழிலாளர்களின் சேவைகளை பயன்படுத்திக் கொள்கிறார்கள். இஸ்ரேலில் வசிப்பவர்களை கேட்டுப் பாருங்கள். "நதாஷா"(Natasha) என்ற ரஷ்யப் பெயர் அங்கே பாலியல் தொழிலாளர்களை குறிக்கப் பயன்படுத்தப் படுகின்றது. அந்தப் பெண்களும் யூதர்கள் தான் என்பதை இங்கே சொல்லத் தேவையில்லை.

யூதர்களைப் பார்த்து சூடு போட்டுக் கொண்ட தமிழ் இன உணர்வாளர்கள், தமிழ்க் கலாச்சாரத்தில் கை வைக்காமல் இருப்பார்களா? "காதலர் தினத்தன்று யுவதிகள் கன்னித் தன்மையை இழக்கிறார்கள்...", "பத்துப் பேருடன் படுத்தெழும்பிய பள்ளிக்கூட மாணவி..." என்று செய்திகளை வெளியிட்டு, இலங்கையில் வாழும் தமிழ்ப் பெண்கள் கற்புக் கெடாமல் வாழ வேண்டும் என்று எச்சரிக்கிறார்கள். திருமணத்திற்கு முன்னரான பாலுறவை நிராகரிக்கும் பழமைவாதிகளின் கூச்சல் இணையத் தளத்தில் எதிரொலிக்கிறது.

"இதற்குத் தான் தமிழர்களுக்கான தனி நாடு வேண்டுமென்பது! தமிழீழத்தில் மணமுறிவு கிடையாது, பாலியல் தொழிலாளர்கள் இருக்க மாட்டார்கள், தகாத உறவுகளுக்கு இடமேயில்லை. பெண்களின் கன்னித்தன்மை பாதுகாக்கப் படும்." புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ் இன உணர்வாளர்கள், இப்படி பிரச்சாரம் செய்து தான் தமிழீழத்திற்கு ஆதரவு திரட்டுகிறார்கள். நல்லது, ஒருவேளை தமிழீழம் கிடைத்தால், அங்கே குடும்பத்துடன் சென்று குடியேற தயாராக இருக்கிறார்களா? 

கலாச்சாரக் காவலர்களின் போதனைகள் இன்று நேற்று ஆரம்பிக்கவில்லை. அது காலங் காலமாக நடந்து வருகின்றது. ஈழப் போராட்டம் ஆரம்பித்த காலங்களில், ஆயுத முனையில் கலாச்சாரம் போதிக்கப் பட்டது. எண்பதுகளில் வந்த தென்னிந்திய திரைப்படங்கள் மூலம் டிஸ்கோ நடனம் பிரபலமாகியது. இயக்கங்களின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ் குடாநாட்டிலும் அந்தக் கலாச்சாரம் பரவியது. 

ஊருக்கு ஊர் மேடைகள் போட்டு, டிஸ்கோ நடனம் ஆடினார்கள். தமிழகத்து பேபி ஷாலினி மாதிரி பாவனை செய்யும், ஈழத்து பேபி ஷாலினியும் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வந்தார். பிறகென்ன? ஒரு போராளி இயக்கம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, டிஸ்கோ நடன விழாக்கள் அடியோடு நிறுத்தப் பட்டன. "ஈழத்து பேபி ஷாலினி" இந்தியாவுக்கு அகதியாக சென்றார்.

எண்பதுகளில் தான் இலங்கையில் தொலைக்காட்சிப் பெட்டிகளும், வீடியோ கசெட்டுகளும் அறிமுகமாகின. எல்லோரிடமும் வாங்கிப் பாவிக்க வசதியில்லாத நிலையில், சினிமாப் படங்களை வாடகைக்கு எடுத்து பார்த்தார்கள். ஊருக்கு ஊர் வீடியோ கசெட் வாடைக்கு விடும் கடைகள் முளைத்தன. வீடியோக் கடைக்காரர்கள், சினிமாப் படங்களுடன், ஆபாசப் (போர்னோகிராபி) படங்களையும் வாடகைக்கு விட்டு வந்தார்கள்.

கலாச்சாரக் காவலர்கள் ஆயுதங்களுடன் திரிந்த காலகட்டம் அது. ஆபாசப் பட விநியோகம் பற்றிக் கேள்விப் பட்டால் சும்மா இருப்பார்களா? எமது ஊரில் இருந்த வீடியோக் கடையை டெலோ இயக்கத்தை சேர்ந்தவர்கள் சூறையாடினார்கள். அங்கிருந்த வீடியோ காசெட்டுகளை எல்லாம் பறிமுதல் செய்து கடையை மூடச் செய்தார்கள். ஆபாசப் படங்கள் வாடகைக்கு விட்டதற்கு, அது தான் தண்டனையாம். 

இரண்டு வருடங்களுக்குப் பிறகு, புலிகளுக்கும், டெலோவுக்கும் இடையில் மோதல் வெடித்தது. கல்வியங்காடு எனுமிடத்தில் இருந்த டெலோ தலைமை முகாமை கைப்பற்றிய புலிகள், அங்கிருந்து நிறைய ஆபாசப் படக் காசெட்டுகளை கைப்பற்றினார்களாம். இந்தத் தகவலை அப்போது புலிகள் தான் அறிவித்தனர்.

எண்பதுகளில் தான் யாழ் நகரில் நவீன சந்தை கட்டப் பட்டது. அப்போது யாழ் குடாநாட்டிலேயே பெரிய வர்த்தக மையமாக திகழ்ந்த நவீன சந்தைப் பகுதியில், பாலியல் தொழிலாளர்களும் அதிகரித்தனர். அவர்கள் தமது வாடிக்கையாளர்களை பிடிப்பதற்கு அது வசதியாக அமைந்து விட்டது. தமிழீழத்திற்கான போராட்டம் சிங்கள இராணுவத்திற்கு எதிராக மட்டுமல்லாது, சமூகவிரோதிகளுக்கும் எதிராக நடந்து கொண்டிருந்த காலம் அது. போராளி இயக்கங்கள் பாலியல் தொழிலாளர்களை சுட்டுக் கொன்று மின் கம்பத்தில் கட்டி விட்டன. அதற்குப் பிறகு யாழ்ப்பாணத்தில் எங்குமே பாலியல் தொழிலாளர்களை காணக் கிடைக்கவில்லை.

கன்னித் தன்மை இழப்பு, தகாத உறவு, பாலியல் தொழில், இவை மட்டும் தான் கலாச்சாரக் காவலர்களின் முக்கியமான பிரச்சினையாக இருக்கவில்லை. அந்தக் காலங்களில், அரச அங்கீகாரம் பெற்ற மதுபான சாலைகள் மிகவும் அரிதாக காணப் பட்டன. ஒன்றிரண்டு யாழ்நகர் போன்ற இடங்களில் இருந்தன. அனேகமாக கள்ளுக் கடைகள் தான் குடி மக்களின் ஒரேயொரு புகலிடம். ஊருக்கு ஊர் தவறணைகள் இருந்தன. 

அன்றிருந்த எல்லா ஈழ விடுதலை இயக்கங்களும் கலாச்சாரத்தை பாதுகாக்க கிளம்பிய நேரம், NLFT என்ற இயக்கம் கொஞ்சம் வித்தியாசமாக சிந்தித்தது. பல ஊர்களில் இருந்த கள்ளுத் தவறணைகளை தீயிட்டுக் கொளுத்தியது. எரித்து விட்டு அதற்கு விளக்கம் சொல்லி துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்தது. இதன் மூலம் மது விலக்கை அமுல்படுத்துகிறார்களாம்.

தற்போது மேற்கத்திய புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் கலாச்சாரக் காவலர்களுக்கு ஒரே கவலை. வட இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்ட மதுபானங்களை விற்பனை செய்யும் கடைகள் அதிகரித்து விட்டன. இதனால், தமிழர்கள் குடிகாரர்களாகி வருகிறார்கள் என்று கவலைப் படுகிறார்கள். புலிகள் வைத்திருந்த de facto தமிழீழத்தில் கூட, கள்ளுத் தவறணைகள் இயங்கின. பனையில் இருந்து எடுக்கப் பட்ட வடி சாராயம் விற்கப் பட்டது. சாராயம் வடிக்கும் தொழிற்சாலையை புலிகளே நடத்தினார்கள்.

அது சரி, சுதந்திரமான மேற்கத்திய நாடுகளில் வாழும் தமிழர்கள் குடிப்பதில்லையா என்று யாரும் கேட்டு விடக் கூடாது. அவர்கள் ஐரோப்பியக் கலாச்சாரத்தில் ஒன்று கலந்து விட்டார்கள். புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் பாக்கியம் பெற்ற தமிழ் ஆண்கள் மட்டுமல்ல, தமிழ்ப் பெண்களும் குடித்து விட்டு கூத்தடிக்கலாம். இதெல்லாம் இங்கே சாதாரணமான விடயம் என்று சொல்வார்கள். ஆனால், இலங்கையில் வாழும் "பக்குவப் படாத" தமிழ் மக்களுக்கு தான் இந்த அறிவுரை எல்லாம்.

எதற்காக புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்கள், இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு "கலாச்சாரம் பற்றி பாடம்" எடுக்கிறார்கள்? புலம்பெயர்ந்து சென்றவர்களில் பெரும்பான்மையானோர் யாழ்ப்பாணத் தமிழர்கள். விவசாய உற்பத்தி குறைவாகவுள்ள யாழ் தீபகற்பத்தில் இருந்து, முன்னொரு காலத்தில் கொழும்பு சென்று உத்தியோகம் பார்த்தார்கள். அவர்கள் அனுப்பிய பணத்தில் செல்வச் செழிப்பு ஏற்பட்டது. அப்போது அதை "மணியோடர் பொருளாதாரம்" என்று சொன்னார்கள்.

ஈழப் போர் தொடங்கிய பின்னர், ஏராளமான இளம் வயதினர், புலம்பெயர்ந்து மேற்கத்திய நாடுகளுக்கு சென்றார்கள். அவர்கள் அங்கிருந்து அனுப்பிய பணத்தில் யாழ் குடாநாட்டின் செல்வம் மேலும் வளர்ந்தது. பெரும்பாலும் பணம் அனுப்புவோர் நெருங்கிய உறவினராக இருந்தாலும், காலப்போக்கில் அது ஒரு சமூகப் பிரிவினையை உண்டாக்கியது. ஊரில் இருக்கும் மக்கள் எல்லோரும் தாம் அனுப்பும் அந்நிய செலாவணியில் வசதியாக வாழ்வதாக புலம்பெயர்ந்தோர் நினைத்துக் கொண்டனர். அது ஓரளவு உண்மையும் கூட. ஆனால், வெளிநாட்டுப் பணத்தில் தங்கியிராத நிறைய குடும்பங்கள் இருக்கின்றன என்ற உண்மையை அவர்கள் உணரவில்லை.

இதற்கிடையே களத்தில் போராடிக் கொண்டிருந்த புலிகள் இயக்கத்திற்கும் புலம்பெயர்ந்த தமிழர்களே பெருமளவு நிதியுதவி செய்திருந்தனர். ஆனால், புலிகள் முற்றுமுழுதாக வெளிநாட்டுப் பணத்தில் மட்டுமே தங்கியிருந்தார்கள் என்று சொல்ல முடியாது. அவர்களது வருமானத்தில் பெரும்பகுதி சட்டபூர்வமாக, சிலநேரம் சட்டவிரோதமாக நடந்த வணிக நிறுவனங்களில் இருந்தும் கிடைத்து வந்தது. இருப்பினும், தங்களது பணத்தில் தான் போராட்டம் நடப்பதாக புலம்பெயர்ந்த தமிழர்கள் இறுமாப்புக் கொண்டிருந்தனர்.

இது ஒரு வகையில், பணக்கார கொடையாளி நாடுகளுக்கும், கடன் வாங்கும் ஏழை நாடுகளுக்கும் இடையிலான உறவு போன்றது. இலங்கைக்கு கடன் வழங்கும் IMF, உலகவங்கி போன்றன, பல நிபந்தனைகளை விதிப்பதில்லையா? அதே மாதிரித் தான் புலம்பெயர்ந்த தமிழர்களும் நடந்து கொள்கிறார்கள். பணம் கொடுப்பதால் தமக்கு அறிவுரை கூறும் அதிகாரம் வந்து விடுவதாக நினைத்துக் கொள்கிறார்கள். இலங்கையில் வாழும் தமிழர்களின் கலாச்சார சீர்கேடுகளை தடுத்து அவர்களை நல்வழிப் படுத்தும் பொறுப்பு தமக்குள்ளதாக நினைத்துக் கொள்கிறார்கள்.

No comments: