Thursday, December 29, 2016

மருதனாமடம் ஆஞ்சநேயர் சிலை உடைக்க வாருங்கள் தமிழ்த் தேசியர்களே!


முல்லைத்தீவு நகரத்தின் மத்தியில் அமைக்கப்பட்டு வந்த காந்தி சிலை இனந்தெரியாதோரால் உடைத்து சோதமாக்கப்பட்டுள்ளது. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகனின் நிதி ஒதுக்கீட்டிலேயே இந்தச் சிலை அமைக்கப்பட்டு வந்தது. 

இந்த சம்பவத்தை தொடர்ந்து, தீவிர தமிழ்த் தேசியர்கள் என சொல்லிக் கொள்பவர்கள், தமது சமூக வலைத்தளங்களில் சிலை உடைப்பை ஆதரித்து கருத்திட்டனர். அதில் அவர்கள் "காந்தி சிலை இந்திய மேலாதிக்கத்தின் குறியீடாக இருந்ததாலேயே உடைக்கப் பட்டதாக நியாயப் படுத்தினார்கள். மேலும், இந்திய தூதரகம் வடக்கு, கிழக்கில் நூறு காந்தி சிலைகளை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர்களே தெரிவித்தனர்.

முல்லைத்தீவில் காந்தி சிலை உடைத்தவர்களுக்கும், அதை ஆதரித்தவர்களுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள்! மருதனாமடம் சந்தியில் உள்ள இந்த ஆஞ்சநேயர் சிலையை எப்போது உடைக்கப் போகிறீர்கள்? காந்தி சிலை இந்திய பிராந்திய மேலாதிக்கத்தின் குறியீடு என்றால், ஆஞ்சநேயர் சிலை மட்டும் என்னவாம்?

சைவ சமயிகளான ஈழத் தமிழர் மத்தியில், வரலாற்றில் என்றைக்குமே ஆஞ்சநேயர் வழிபாடு இருந்ததில்லை. ஈழத்தமிழருக்கு புத்தர் சிலையும், அனுமார் சிலையும் ஆக்கிரமிப்புச் சின்னங்கள் தான். இலங்கையை உள்ளடக்கிய அகண்ட இந்தியாவுக்கு உரிமை கோரும் இந்துத்துவா வாதிகள் தான் அதை ஆரம்பித்தார்கள். அதுவும் தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் தான் பிரமாண்டமான அனுமார் சிலைகள் வைக்கப் பட்டுள்ளன.

இராமாயணத்தில் இராமருடன் ஒத்துழைத்த "இனத்துரோகி" அனுமான், இலங்கை மீது படையெடுக்க உதவிய "குரங்குப் படை" என்ற ஒட்டுக்குழுவின் தலைவனாக இருந்தான். அதற்கான நன்றிக் கடனாகத் தான், ஆக்கிரமிப்பாளன் இராமன் அனுமானை வழிபாட்டுக்கு உரியவன் ஆக்கினான்.

சிங்கள- பௌத்த பேரினவாதிகள், இலங்கை முழுவதும் புத்தர் சிலை வைப்பதைப் போல, ஹிந்தி- இந்து பேரினவாதிகள் இந்தியா முழுவதும் இராமர் சிலை வைத்தார்கள். ஆனால், அதே ஹிந்து - இந்து பேரினவாதிகள், தமிழ்நாட்டிலும் இலங்கையிலும், இராமன் சிலைக்கு பதிலாக அனுமான் சிலை வைக்கும் நோக்கம் என்ன?

இது "இராமாயண கால மனப்பான்மை" இல்லாமல் வேறென்ன? அதாவது, தமிழர்களை "குரங்குகளாக" சித்தரிப்பதும், இனத்துரோகி அனுமானை வழிபட வைப்பதும், எந்தளவு மோசமான கலாச்சார வன்முறை? காந்தியை விட மிகவும் மோசமான, இந்திய மேலாதிக்கக் குறியீடு தான் ஆஞ்சநேயர். அந்த சிலையை உடைப்பதற்கு ஏன் இன்னும் தயக்கம்?

இலங்கையில் முதன்முதலாக மலையகத்தில் ரம்பொடை எனும் ஊரில் தான் ஆஞ்சநேயர் சிலை அமைக்கப் பட்டது. ரம்பொடை என்ற பெயர் கூட "ராம் படை" என்பது மருவி வந்திருக்கலாம் என்று காரணம் சொல்கிறார்கள்.

அதாவது, இலங்கையில் இராமனின் ஆக்கிரமிப்பு இராணுவம் இருந்த இடத்தை நினைவுகூர்வதற்காக, அந்த இடத்தில் ஆஞ்சநேயர் சிலை வைத்திருக்கிறார்கள்! அப்படியானால் எதற்காக வடக்கே மருதனாமடத்தில் ஆஞ்சநேயர் சிலை வைத்தார்கள்?

"நவீன இராமன்" ராஜீவ் காந்தி அனுப்பிய இந்திய இராணுவம், முகாமிட்டிருந்த இடத்தை நினைவுகூர்வதற்காகவா மருதனாமடத்தில் ஆஞ்சநேயர் சிலை வைக்கப் பட்டது? புலிகளுக்கும், இந்திய இராணுவத்திற்கும் இடையில் யுத்தம் மூண்ட காலத்தில், மருதனாமடம் பகுதியில் ஓர் அதிகாரி உட்பட ஏராளமான இந்தியப் படையினர் கொல்லப் பட்டனர். 


ரம்பொடையில் மட்டுமல்லாது, மருதனாமடத்தில் வைக்கப் பட்டுள்ள ஆஞ்சநேயர் சிலைகள், முழுக்க முழுக்க இந்திய அரசின் நிதியுதவியுடன் தான் கட்டப் பட்டன. இது ஒன்றும் இரகசியம் இல்லை. மருதனாமடத்தில் ஆஞ்சநேயர் சிலைக்கு அருகில் புதிதாக கோயிலும் கட்டப் பட்டுள்ளது. அங்கே ஆஞ்சநேயர் வழிபாடு நடக்கிறது. கோயில் கட்டிய நிதி இந்தியாவுடையது.

இந்திய மேலாதிக்கத்தின் குறியீடான ஆஞ்சநேயர் சிலை உடைக்கப் படப் போகும் நன்னாளை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்போம். காந்தி சிலையுடைத்த ஈழத் தமிழ் தேசிய உணர்வாளர்கள், ஆஞ்சநேயர் சிலை உடைப்பையும் ஆதரிப்பார்கள் என்று நம்புவோம்.

No comments: