Sunday, January 29, 2017

ஆசிரியர் யோதிலிங்கத்தின் இடதுசாரிகள் மீதான அவதூறுகளுக்குப் பதில்

ஈழத்தமிழ் சூழலில் வலதுசாரிகள் தம்மை தமிழ்த் தேசிய போர்வையால் மறைத்துக் கொண்டு, காழ்ப்புணர்வுடன் இடதுசாரிகள் மீது அவதூறு பரப்பும் வேலையை தொடர்ந்தும் செய்து கொண்டிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு அரசியல் விஞ்ஞானம் கற்பிக்கும் ஆசிரியர் யோதிலிங்கம் அவர்களில் ஒருவர்.

 அவர் ஒரு தீவிர வலதுசாரிக் கட்சி உறுப்பினராகவோ, ஆதரவாகவோ இருப்பது அவரது அரசியல் தெரிவு. ஆனால், இடதுசாரிகள் மீதான வன்மம் காரணமாக உண்மைக்குப் புறம்பான கதைகளை கூறுவதன் மூலம் தமிழ் மக்கள் சுரண்டப் படும் கொடுமையை மறைக்கப் பார்ப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும் ஆசிரியர் போன்ற அறிவுஜீவிகளின் தவறான கருத்துக்கள், சமூகத்தில் ஏற்படுத்தக் கூடிய தாக்கத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

//ஈழ‌த்து சூழ‌லில் வ‌ல‌துசாரிக‌ள் அயோக்கியர்களாக, பொய்ய‌ர்க‌ளாக‌, புளுக‌ர்க‌ளாக‌ இருந்த‌ன‌ர். தேர்த‌லில் ம‌க்க‌ளை ஏமாற்றி பாரளும‌ன்ற‌ ப‌த‌விக‌ள் எடுப்ப‌தில் குறியாக‌ இருந்த‌ன‌ர். ஆயுத‌ப் போராட்ட‌ம் தொட‌ங்கிய‌தும் புலிக‌ள் அவ‌ர்க‌ளுக்கு ம‌ர‌ண‌த‌ண்ட‌னை விதித்த‌ன‌ர். பலரை துரோகி என்று போட்டுத் தள்ளினார்கள். அதனால், வ‌ல‌துசாரித் த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ள் அனைவ‌ரும் கொழும்புக்கு சென்று அர‌சுட‌ன் ஒட்டிக் கொண்டார்க‌ள். அவ்வாறு தான் ஒட்டுக் குழு உருவானது. 

ஈழத்து சூழலில் வலதுசாரிகள் சாதிவெறியர்களாக இருந்தனர். அத்துடன் இனவாதிகளாக, மதவாதிகளாக, ஆணாதிக்கவாதிகளாகவும் இருந்தனர். 1940களுக்கு பின்னரான காலத்திலும் அவர்கள் மாறவில்லை. தமிழ்த் தேசிய போராட்டத்தில், தமிழ் மக்கள் இவர்களை மதிப்பிடுவதில் பெரும் தவறுகளை இழைத்தனர்.
 
வ‌ர‌லாறு முக்கிய‌ம் ஆசிரிய‌ரே! // 
இவ்வாறு பேஸ்புக்கில் நான் போட்ட பதிவொன்றுக்கு அவர் எந்த மறுப்பும் கூறவில்லை. அது சரியென்றோ, தவறென்றோ கூறவில்லை. அவரது பதிலில், வலதுசாரிகள் பற்றி ஒரு வார்த்தை கூட எழுதவில்லை.

அதற்கு மாறாக, பதில் கூற முடியாமல் வேறு இடத்திற்கு தாவுகிறார். வழமை போல, இடதுசாரிகள் மீது அவதூறு செய்யும் பிரச்சார வேலையை தொடங்கி விடுகிறார்: //இரண்டு வகையான இடதுசாரிகள் இருந்தனர்,பாரம்பரிய இடதுசாரிகள்,விடுதலைஇயக்க இடதுசாரிகள், முதலாம் கூட்டத்தவர் சிங்கள இனவாதத்திற்குள் மூழ்கினர். இரண்டாம் வகைக்குள் eprlf, eros ,nlft ,plft என்போர் அடங்கினர். தனிநபர் பிரச்சினையால் அவ்வமைப்புகள் துண்டு துண்டாகிப் போயின,இவர்களில் பலர் வெறும் கதைகாறர்களாக மட்டும் இருந்தனர்.சிலர் ஒட்டுக்குழுவாகவும் மாறினர். புலிகளை எதிர்ப்பதாகக் கூறி தமிழ்த் தேசியத்திற்கே எதிரிகளாக மாறினர். தேசியசக்திகளிடமிருந்த போராட்ட நேர்மை இவர்களிடம் இருக்கவில்லை.//


இவரது பதில் முழுவதும் வார்த்தை ஜாலங்களால் படிப்பவரின் மனதை மயக்கி தவறான கருத்தை திணிப்பதாக உள்ளது. அதனால், அரிசியில் கல் பொறுக்குவது மாதிரி, ஒவ்வொரு வார்த்தையாக கவனமாக எடுத்து ஆராய வேண்டியுள்ளது.

முதலில் இடதுசாரி என்றால் யார்? ஆசிரியர் யோதிலிங்கம் உண்மையிலேயே தமிழ் மக்களின் (கவனிக்கவும்: மக்களின்) நலன் குறித்து சிந்திப்பவராக இருந்தால், அவரும் ஓர் இடதுசாரியே. அதற்கு மாறாக அவர் முதலாளிகளின் நலன் குறித்து சிந்திப்பவர் என்றால் ஒரு வலதுசாரி. இதில் அவர் எந்தப் பக்கத்தில் நிற்கிறார் என்பதை அவர் தான் விளக்க வேண்டும்.

(தமிழ்த்) தேசியவாதிகள் என்றால், அவர்கள் வலதுசாரிகளோ, இடதுசாரிகளோ அல்ல என்பது மாதிரி வாதிடுவது பாமரத்தனமானது. (தமிழ்த்) தேசியவாதிகள் என்று பொதுவாக சொல்லிக் கொண்டாலும், நிச்சயமாக அதற்குள் வலது - இடது பிரிவுகள் இருக்கும். ஓர் அறிவுஜீவி, அதிலும் அரசியல் விஞ்ஞானம் கற்பிக்கும் ஆசிரியர் பாமரத்தனமாக பேசுவது ஏற்றுக் கொள்ளப் பட முடியாதது.

நீங்கள் என்னதான் புலிகளை ஒரு வலதுசாரி இயக்கமாக காட்ட நினைத்தாலும், அதற்குள்ளும் ஆரம்பம் முதல் இறுதி வரை இடது - வலது வேற்றுமைகள் இருந்தன. அப்படி இல்லாமல் அது பெரும்பான்மை தமிழர்களின் ஆதரவைப் பெற்ற விடுதலை இயக்கமாக இருக்க முடியாது. வலதுசாரிப் புலிகளும், இடதுசாரிப் புலிகளும் முரண்பட்ட இடங்கள் பலவுண்டு. அவர்களுக்கு இடையில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. புலிகள் அமைப்பில் இருந்த பல போராளிகள் இந்த உண்மையை உறுதிப் படுத்தி உள்ளனர்.

"பாரம்பரிய இடதுசாரிகள்" - மாஸ்கோ சார்பு கம்யூனிஸ்ட் கட்சி, சமசமாஜக் கட்சி போன்றவற்றை இவர் அப்படிக் குறிப்பிடுகின்றார். இலங்கையில் சிறிதும் பெரிதுமாக குறைந்தது பத்து இடதுசாரிக் கட்சிகளாவது இருந்தன, தற்போதும் உள்ளன. அவை எல்லாம் சிறிலங்கா அரசை ஆதரித்தன என்று காட்ட முனைவது அபத்தமானது, உள்நோக்கம் கொண்டது.

மாஸ்கோ சார்பு கம்யூனிஸ்ட் கட்சி அரசை ஆதரித்த போதிலும், சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்து நின்றது. அதன் வரலாற்றில் ஒரு தடவையாவது அரசை ஆதரித்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. மேலும் புலிகளின் முக்கிய தலைவர்களாக கருதப்பட்ட புதுவை இரத்தினதுரை, தமிழ்ச்செல்வன் போன்றோர் சீனக் கம்யூனிஸ்ட் கட்சித் தொடர்பால் அரசியல்மயப் பட்டவர்கள். இவர்களை விட வேறு சிலரும் புலிகள் அமைப்பில் இருந்தனர்.

அன்டன் பாலசிங்கம் யார் தெரியுமா? நவ சம சமாஜக் கட்சி உறுப்பினராக இருந்தவர். அவர்களது தொழிலாளர் பாதை பத்திரிகையில் எழுதி வந்தவர். அவர் தான் பிற்காலத்தில் புலிகளின் தத்துவ ஆசிரியர் என்றும் தேசப் பிதா என்றும் புகழப் பட்டார். அது சரி, அன்டன் பாலசிங்கத்தின் சமசமாஜக் கட்சி என்ன செய்தது? ஆசிரியர் யோதிலிங்கம் சொல்வது போல "இனவாதிகளுடன் (அரசுடன்) சேர்ந்து கொண்டது."

இலங்கையில் அன்றும் இன்றும் பல சிறிய இடதுசாரிக் கட்சிகள் தோன்றிக் கொண்டிருந்தன. சில இப்போதும் உள்ளன. அவை எல்லாம் அரசை அல்லது இனவாதிகளை ஆதரிக்கின்றன என்பது, குறுகிய மனப்பான்மை கொண்ட சிறுபிள்ளைத்தனமான வாதம். அவற்றில் சில தமிழரின் உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவாக பேசிக் கொண்டிருக்கின்றன. விக்கிரமபாகு கருணாரத்தின போன்ற சில சிங்கள இடதுசாரிகள் வெளிப்படையாகவே புலிகளை ஆதரித்தனர். இந்த உண்மைகளை மறைப்பதும், திரிபு படுத்தி அவதூறு செய்வதும் ஓர் ஆசிரியருக்கு அழகல்ல.

//முதலாம் கூட்டத்தவர் சிங்கள இனவாதத்திற்குள் மூழ்கினர்.// இது ஒரு பக்கச் சார்பான திரிபுபடுத்தப் பட்ட கருத்து.

அரசியல் விஞ்ஞானம் கற்பிக்கும் ஆசிரியர், முதலில் இலங்கையில் இனப்பிரச்சினை கூர்மையடைந்த பின்னர் நடந்த அரசியல் மாற்றங்களை அவதானிக்க வேண்டும். அதை அலசி ஆராய வேண்டும். சாதாரணமான மூன்றந்தர அரசியல்வாதி மாதிரி காழ்ப்புணர்வுப் பிரச்சாரம் செய்யக் கூடாது.

தெற்கில் சிங்களத் தேசியவாதம் பலமான சக்தியாக உருவானது. அது இடதுசாரிகளையும் மிரட்டிப் பணிய வைத்து தனக்குள் உள்வாங்க முயற்சித்தது. இதே நிலைமை தான் வடக்கிலும் நிலவியது. அங்கு பலமான சக்தியாக இருந்த தமிழ்த் தேசியவாதம், இடதுசாரிகளை மிரட்டி தனக்கு கீழே அடிபணிய வைத்தது.

இந்த நிலைப்பாடு சரியென்று, ஆசிரியர் யோதிலிங்கம் வழிமொழிகிறார். அதாவது, தமிழ்த் தேசியத்தை ஏற்றுக் கொண்டவர்கள் மட்டுமே "நல்ல இடதுசாரிகள்" என்று நற்சான்றிதழ் வழங்குகிறார். இதையே தான் தெற்கில் சிங்களத் தேசியவாதிகளும் செய்தார்கள்! எந்த வித்தியாசமும் இல்லை. எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.

இனவாதம் என்ற கருத்தியலும், தேசியவாதம் என்ற கருத்தியலும் பல இடங்களில் ஒரே அர்த்தத்துடன் பயன்படுத்தப் பட்டு வருகின்றன. தமிழ்த் தேசியவாதிகளைப் பொறுத்தவரையில் எதிரி இனத்தவரான சிங்களவர்கள் பேசுவதெல்லாம் இனவாதம் தான். அதே மாதிரித் தான் சிங்களத் தேசியவாதிகளும் சிந்திக்கிறார்கள். தமிழர்கள் பேசுவதெல்லாம் இனவாதம் என்கிறார்கள்.

முன்பு யாராவது ஒரு தமிழர், புலிகளுக்கு ஆதரவான நியாயத்தை பேசினாலே இனவாதி என்று முத்திரை குத்தினார்கள். முதலமைச்சர் விக்கினேஸ்வரன் முன்வைக்கும் நியாயமான கோரிக்கைகளும் இனவாதம் என்று ஒதுக்கப் படுவதுண்டு.

இன முரண்பாடுகளால் பிளவுபட்ட ஒரு நாட்டில் இந்தப் பிரச்சினை தொடர்ந்தும் இருக்கும். அவர்களுக்கு இவர்கள் இனவாதிகளாக தெரிவார்கள். இவர்களுக்கு அவர்கள் இனவாதிகளாக தெரிவார்கள். இதற்குப் பின்னால், இனங்களை பிரித்தாளும் அரசின் சூழ்ச்சி இருப்பதை யாரும் கண்டுகொள்வதில்லை.

ஆசிரியர் யோதிலிங்கத்திடம் ஒரு கேள்வி. "பாரம்பரிய இடதுசாரிகள் சிங்கள இனவாதத்திற்குள் மூழ்கினர்." என்று சொல்கிறீர்களே. யார் அந்த இனவாதிகள்? அதைக் கொஞ்சம் விளக்க முடியுமா? நான் அவர்கள் தான் வலதுசாரிகள் என்கிறேன். உங்களால் மறுக்க முடியுமா?

சந்தேகம் இருந்தால், நீங்கள் எழுதிய அரசறிவியல் ஓர் அறிமுகம் நூலை வாசித்துப் பாருங்கள். அதிலே தீவிர வலதுசாரிகளான பாசிஸ்டுகள் பற்றி என்ன எழுதி இருக்கிறீர்கள்? //இவர்கள் தீவிர தேசியவாதிகளாகவும், இனவாதிகளாகவும், சோஷலிசத்தை வெறுப்பவர்களாகவும் இருக்கின்றனர்.// இது நீங்கள் எழுதியது தான்!

இனவாதிகளான வலதுசாரிகளுக்குள், இடதுசாரிகள் மூழ்கினார்கள் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? அவர்கள் வலதுசாரிகளாக மாறிவிட்டார்கள் என்று அர்த்தம்! அதாவது அவர்களை இப்போதும் நீங்கள் இடதுசாரிகள் என்று அழைப்பது அரசியல் அறிவியல் படி தவறாகும். ஏன் அந்தத் தவறை தெரிந்து கொண்டே செய்கிறீர்கள்?

//இரண்டாம் வகைக்குள் eprlf, eros ,nlft ,plft என்போர் அடங்கினர். தனிநபர் பிரச்சினையால் அவ்வமைப்புகள் துண்டு துண்டாகிப் போயின//

இது ஒரு அப்பட்டமான வரலாற்றுத் திரிபுபடுத்தல் மட்டுமல்ல, அடுத்த அவதூறுக்கான தயார்படுத்தல். ஆசிரியரே, நீங்கள் எண்பதுகள், தொண்ணூறுகளுக்குப் பிறகு பிறந்த இளைய தலைமுறையை சேர்ந்தவர் அல்ல. ஈழப்போர் தொடங்குவதற்கு முன்பிருந்த நிலைமைகளை தாங்கள் நேரில் கண்டிருப்பீர்கள். எதற்காக இல்லாததை எல்லாம் திரிக்கிறீர்கள்?

1986 ம் ஆண்டிலிருந்து, புலிகள் தம்மைத் தவிர வேறு அமைப்புகள் இயங்குவதை தடை செய்தனர். டெலோவை அழித்தொழித்த நடவடிக்கையின் பின்னர், மற்றைய இயக்கங்களை பகிரங்க அறிவித்தல் மூலம் தடை செய்தனர். போராளிகளிடம் இருந்த ஆயுதங்களை பறித்துக் கொண்டு, வீட்டுக்கு அனுப்பினார்கள். இந்த உண்மை தெரிந்தும் "தனிநபர் பிரச்சினையால் அவ்வமைப்புகள் துண்டு துண்டாகிப் போயின" என்று திரிப்பது எதற்காக?

தனிநபர் பிரச்சினை எல்லா இயக்கங்களிலும் இருந்தன. அவற்றிற்குள் பிளவுகள் ஏற்பட்டன. புலிகளில் இருந்து புளொட் பிரிந்தது. பின்னர் அதிலிருந்து தீப்பொறி பிரிந்தது. ஈரோசில் இருந்து ஈபிஆர்எல்ப் பிரிந்தது. NLFT யில் இருந்து PLFT பிரிந்தது. இந்த உண்மைகள் எல்லோருக்கும் தெரியும். ஆனால், புலிகள் தடை செய்யும் வரை தொடர்ந்தும் இயங்கி வந்தன.

//இவர்களில் பலர் வெறும் கதைகாறர்களாக மட்டும் இருந்தனர்.// இதைக் கேட்கும் பொழுது, கிராமங்களில் பாமர மக்களின் திண்ணைப் பேச்சு போலுள்ளது. எண்பதுகளில் அனேகமாக எல்லா இயக்கங்களும், சிறிலங்கா இராணுவத்திற்கு எதிரான கெரில்லாத் தாக்குதல்களை நடத்தி இருந்தன. ஈழப்போராட்ட வரலாற்றில் முதல் தடவையாக ஈரோஸ் தான் கொழும்பில் குண்டுகளை வெடிக்க வைத்திருந்தது. இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியாது என்று நான் நம்பவில்லை. தெரிந்து கொண்டும் மறைக்கிறீர்கள்.

//சிலர் ஒட்டுக்குழுவாகவும் மாறினர்.// ஏனைய இயக்கங்களை புலிகள் தடை செய்ததும், அவர்களில் பலர் இந்தியாவுக்கு சென்றனர். பலர் தமிழ்நாட்டில் அகதிமுகாம்களில் இருந்தனர். அவர்களில் மீண்டும் ஒன்று சேர்த்த இந்திய அரசு, இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் ஈழத்தில் கொண்டு சென்று இறக்கியது.

அவர்கள் அப்போது இந்திய இராணுவத்தின் துணைப்படையாக அல்லது ஒட்டுக்குழுவாக இருந்தனர். அந்தக் காலத்தில் தான் புலிகளை வேட்டையாடினார்கள். அப்போது புலிகள் என்ன செய்தார்கள்? இலங்கை அரசின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு சென்று, சிறிலங்கா இராணுவத்தின் ஒட்டுக்குழுவாக இருந்தனர். அந்த நேரத்தில் சிங்கள இராணுவம் புலிகளுக்கு ஆயுத விநியோகம் செய்தது. புலிப் போராளிகளை தனது முகாம்களில் மறைத்து வைத்திருந்தது. இது குறித்து ஏற்கனவே இந்திய தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப் பட்டிருந்தது.

ஆசிரியர் யோதிலிங்கம் அவர்களே! இடதுசாரிகள் மீதான காழ்ப்புணர்வு காரணமாக, "இனவாதத்திற்குள் மூழ்கியவர்கள், அல்லது ஒட்டுக்குழுக்கள்" என்று ஒட்டுமொத்த இடதுசாரிகளையும் அவதூறு செய்வதை முதலில் நிறுத்திக் கொள்ளுங்கள். தமிழ்த் தேசியவாதிகள் பற்றியும் இதே மாதிரி சொல்வதற்கு உங்களுக்கு தைரியம் இருக்கிறதா?

பாரம்பரிய தமிழ்த் தேசியவாதிகளான தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் தலைவர்கள் சிறிலங்கா அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணி அரசுக்கு முண்டு கொடுக்கிறது என்ற குற்றச்சாட்டில், அதன் தலைவர் அமிர்தலிங்கம் புலிகளால் சுட்டுக் கொல்லப் பட்டார். உண்மையில், பாரம்பரிய தமிழ்த் தேசியவாதிகள் பெரும்பாலும், புலிகளால் தான் அழித்தொழிக்கப் பட்டனர்.

கூட்டணி மட்டுமல்ல, டெலோ, ஈபிஆர்எல்ப் போன்ற தமிழ்த் தேசியவாதிகள், தசாப்தகாலம் அரச ஒட்டுக்குழுக்களாக இருந்து விட்டு, புலிகளிடம் ஞானஸ்நானம் பெற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் ஒன்று சேர்ந்தார்கள். அதே நேரம் புலிகளில் இருந்து பிரிந்து சென்ற கருணா குழுவினர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற பெயரில் இப்போதும் அரச ஒட்டுக்குழுவாக இருக்கின்றனர்.

தமிழ்த் தேசியவாதிகள் என்றால், அதற்குள் இடதுசாரிகள் அடங்க மாட்டார்களா? ஏற்கனவே இந்தக் கேள்வியை பல தடவைகள் கேட்டு விட்டேன். ஆனால், இன்று வரையில், உங்களிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. என்ன காரணமோ? தாங்களும் வலதுசாரி என்பதாலா? அது சரி, "நான் ஒரு வலதுசாரி தான்" என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்வதற்கு என்ன தயக்கம்? வலதுசாரி என்பது ஒரு கெட்ட வார்த்தை இல்லைத் தானே?

No comments: