Tuesday, February 07, 2017

முதலாம் உலகப் போருக்கு மூல காரணமான பெர்லின் - பாக்தாத் ரயில் பாதை

முதலாம் உலகப் போருக்கு காரணமாக இருந்தது முதலாளித்துவம் என்ற உண்மை வரலாற்று நூல்களில் மறைக்கப் பட்டு வருகின்றது. இருப்பினும் சம்பந்தப் பட்ட ஐரோப்பிய நாடுகளின் போருக்கான தயார்ப் படுத்தல்களை ஆராயும் ஒருவர் அந்த உண்மையை கண்டறிவார்.

சரஜெவோ என்ற திரைப்படம், 2014 ம் ஆண்டில் வெளியாகி பல விருதுகளைப் பெற்றிருந்தது. ஆஸ்திரிய இளவரசரின் கொலை தொடர்பாக விசாரணை நடத்தும் அதிகாரியின் கோணத்தில் இருந்து திரைக்கதை அமைக்கப் பட்டுள்ளது. (பட விமர்சனத்தை இந்த இணைப்பில் வாசிக்கவும் : “Sarajevo”: Saga of 1914 joins ranks of great pacifist films )

Leo Pfeffer ஒரு நேர்மையான அதிகாரியாக கொலைக்கு காரணம் என்னவென்ற உண்மையை கண்டுபிடிக்கிறார். அதன் முடிவுகள் அதிர்ச்சி அளிக்கின்றன. இது உள்வீட்டு சதி என்ற உண்மை தெரிய வருகின்றது. உண்மையை கண்டறிந்த விசாரணை அதிகாரியும் மிரட்டப் படுகின்றார்.

முதலாம் உலகப்போருக்கு காரணமாக பெரும்பாலான வரலாற்று நூல்களில் எழுதப் பட்டுள்ள புனைகதையை தான் இன்றைக்கும் மாணவர்கள் படிக்கிறார்கள். அது அன்று ஆஸ்திரிய அரசினால் சோடிக்கப் பட்ட கதை என்பது பலருக்குத் தெரியாது.

//ஆஸ்திரிய இளவரசர் பிரான்ஸ் பெரினன்ட் கொலைக்கு காரணமாக இருந்த காவ்ரிலோ பிரின்சிப்பும் அவனது தோழர்களும் செர்பிய தேசியவாதிகள். அவர்களுக்குப் பின்னால் பேரினவாத அபிலாஷைகள் கொண்ட செர்பியா இருந்தது. அந்தத் தாக்குதல் ஆஸ்திரியா மீதான போர்ப் பிரகடனமாக எடுத்துக் கொள்ள பட்டது.....// இது சரித்திரப் புத்தகம் சொல்லும் கதை. ஆனால் அது சொல்லாத கதை ஒன்றுள்ளது.

எதற்காக பேர்டினன்ட் இளவரசரின் வருகைக்கு போதுமான அளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் படவில்லை? ஏற்கனவே கொந்தளிப்பான பிரதேசத்திற்கு வருகை தரும் ஓர் இளவரசருக்கு முப்பது போலீஸ்காரர்களின் பாதுகாப்பு போதுமானதா? சரஜெவோவில் இருந்த ஆஸ்திரிய இராணுவத்திற்கு வேறு பொறுப்புகள் கொடுத்து இடம் மாற்றிய உயர் மட்ட அதிகாரி யார்? மேலும் இளவரசின் மோட்டார் வாகனம் பவனி வரும் பாதைகள் பற்றிய விபரங்கள் ஏற்கனவே பத்திரிகைகளில் வெளியாகி இருந்தன. இது தாக்குதல் நடத்துவோருக்கு சாதகமாக அமையாதா?

இளவரசர் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள் அனைவரும் செர்பியர்கள் தான். அதிலும் போஸ்னிய செர்பியர்கள். தலைமறைவாக இயங்கிய இரகசியக் குழு ஒன்றின் உறுப்பினர்கள். ஆனால், விசாரணைகளின் பொழுது அவர்கள் யாரும் தம்மை செர்பிய தேசியவாதிகளாக காட்டிக் கொள்ளவில்லை. அதற்கு மாறாக பல்லினங்களை உள்ளடக்கிய யூகோஸ்லேவியா தேசியத்தில் நம்பிக்கை கொண்டிருந்தனர். புரட்சி, சோஷலிசம், தொழிலாளர் அரசு பற்றியும் பேசினார்கள்.

சுருக்கமாக, அவர்கள் ஆஸ்திரிய ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலை அடைவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருந்தனர். அது எந்தக் கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று அக்கறை கொள்ளவில்லை. அதாவது அவர்கள் சரித்திர நூல்கள் குறிப்படுவது மாதிரி, "செர்பிய தேசியவாதிகளோ" அல்லது "செர்பிய பேரினவாதிகளோ" அல்ல.

விசாரணையின் பொழுது இன்னொரு உண்மையும் தெரிய வந்தது. இளவரசரைக் கொல்லும் தாக்குதல் திட்டத்திற்கு செர்பியா ஒத்துழைக்கவில்லை. உண்மையில் அன்றிருந்த அரசியல் சூழலில்  அப்படியான தாக்குதல் தனக்கு நன்மை பயக்காது என்று செர்பியா திடமாக  நம்பியது. ரஷ்யாவும் அதற்கு எதிராக இருந்தது.

தாக்குதலுக்கு செர்பியா உதவி செய்யவில்லை என்றால், வேறு யார் உதவினார்கள்? விசாரணையின் பெறுபேறுகள் யாவும் போஸ்னியாவை நிர்வகித்த ஆஸ்திரிய அதிகார வர்க்கத்தை குற்றம் சாட்டின. அதாவது, சில போர் வெறியர்களே இதற்குக் காரணம். அவர்களே சில தீவிரவாத செர்பிய இளைஞர்களுக்கு பணம் கொடுத்து தாக்குதல் நடத்த வைத்து இருக்கிறார்கள். 

தங்களது இளவரசரை தாமே கொலை செய்வதால், ஆஸ்திரியர்களுக்கு என்ன ஆதாயம்? செர்பியா மீது போர் தொடுக்க விரும்பிய, ஆஸ்திரிய போர் வெறியர்களின் திட்டங்களுக்கு அந்த இளவரசர் எதிராக இருந்தார். அதனால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் அடித்து விழுத்தினார்கள். போருக்கு தடையாக இருந்த இளவரசர் தீர்த்துக் கட்டப் பட்டார். அதை சாட்டாக வைத்து செர்பியா மீது போர்ப் பிரகடனம் செய்யலாம்.

எதற்காக செர்பியா மீது போர் தொடுக்க வேண்டும்? தொழிற்புரட்சி பற்றிக் கேள்விப் பட்டிருப்போம். தொழிற்புரட்சி என்பது உண்மையில் முதலாளித்துவத்தின் வளர்ச்சிக் கட்டம். அது ரயில் பாதை அமைப்பது போன்ற, அதிக இலாபம் தரும் மிகப் பிரமாண்டமான திட்டங்களை நிறைவேற்றியது.

பெர்லினில் இருந்து பாக்தாத் வரையில் ரயில் பாதை அமைப்பதற்கு பல நிறுவனங்கள் விரும்பின. எதிர்காலத்தில் அதனால் கிடைக்கக் கூடிய மிகப் பெரிய இலாபத்திற்காக கனவு கண்டன. அரச மட்டத்திலும் பலர் பங்குதாரராக இணைந்து கொண்டனர். போஸ்னியா ஆளுநரும் அவர்களில் ஒருவர்.

அன்றைய ஐரோப்பிய அரசியல் சூழலில், பெர்லின் முதல் பாக்தாத் வரையிலான ரயில் பாதை செல்லும் நாடுகள் எல்லாம் நட்பு நாடுகளாக இருந்தன. ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரி, அத்துடன் துருக்கியும் நட்பு நாடுகள். அன்று ஈராக் முழுவதும் துருக்கியின் ஆட்சியின் கீழ் இருந்தது. ஆகவே ரயில் பாதையை எந்தத் தடங்கலும் இல்லாமல் அமைக்க முடியும். ஆனால், இடையில் செர்பியா மட்டுமே பகை நாடாக இருந்தது.

தவிர்க்க முடியாது, பெர்லின் - பாத்தாத் ரயில்பாதை செர்பியாவுக்கு ஊடாகத் தான் செல்ல வேண்டும். அதனால் செர்பியா மீது படையெடுத்து ஆக்கிரமிப்பது தான் திட்டம். ஆனால், எதிர்பாராத விதமாக போரின் முடிவுகள் வேறு விதமாக அமைந்து விட்டன. ஜெர்மனியும், ஆஸ்திரியாவும் தோல்வியடைந்தன. அதற்குப் பிறகு மிகப் பெரிய அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. பெர்லின் - பாக்தாத் ரயில்பாதை திட்டமும் கிடப்பில் போடப் பட்டது.

ஐரோப்பாவில் முதலாளித்துவ வளர்ச்சியானது ஓர் உலகப் போரை மட்டும் கொண்டு வரக் காரணமாக இருக்கவில்லை. இருபதாம் நூற்றாண்டுக்குப் பின்னர் பல உலக நாடுகளில் சாதாரணமான விடயங்களாகி விட்ட, இனப்படுகொலை, இனச்சுத்திகரிப்பு போன்றனவும் முதலாளித்துவம் கொண்டு வந்தது தான். ஆஸ்திரிய இளவரசர் கொலையுடன் தான் அவை ஆரம்பமாகின.

இளவரசரின் கொலைக்கு பழிவாங்குவது என்ற சாட்டில், போஸ்னியாவில் வாழ்ந்த செர்பிய குடிமக்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப் பட்டன. ஆஸ்திரிய படையினர், குரோவாசிய, முஸ்லிம் ஒட்டுக் குழுக்களை உருவாக்கினார்கள். அவர்களுக்கு ஆயுதங்கள் கொடுத்து செர்பியர்கள் மீது தாக்குதல் நடத்த தூண்டி விட்டார்கள். இதனால் ஆயிரக் கணக்கான செர்பியர்கள் கொல்லப் பட்டு, சொத்துக்கள் அழிக்கப் பட்டன. பல கிராமங்களில் இனச் சுத்திகரிப்பு நடந்தது.

முதலாம் உலகப் போர் தொடங்கியதுமே, எதிர்பார்த்த மாதிரி ஆஸ்திரியா செர்பியாவை ஆக்கிரமித்தது. அதைத் தொடர்ந்து இலட்சக் கணக்கான செர்பியர்கள், ஹங்கேரியில் இருந்த தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப் பட்டனர். பிற்காலத்தில் நாஸிகள் கட்டிய தடுப்பு முகாம்களுக்கு சற்றிலும் குறைவில்லாத அந்த முகாம்களில் நிலவிய வசதிக் குறைபாடு, தொற்று நோய்கள் காரணமாக ஆயிரக் கணக்கான செர்பியர்கள் இறந்தனர்.

No comments: