Friday, March 16, 2018

நேட்டோவின் "எல்லை கடந்த பயங்கரவாதம்"

சோவியத் யூனியனுக்குள் நேட்டோவின் "எல்லை கடந்த பயங்கரவாதம்".

ஒரு நோர்வே நாட்டு உளவாளியின் வாக்குமூலம்.

பனிப்போர் காலத்தில், சோவியத் ஒன்றியத்திற்குள் உளவு பார்ப்பதற்கும், பயங்கரவாத தாக்குதல்களை நடத்தவும், நேட்டோ நாடுகளை சேர்ந்த உளவாளிகள் ஈடுபடுத்தப் பட்டனர். 

ஊடுருவல் குறித்து, பல தடவைகள் சோவியத் ஒன்றியம் முறையிட்டு வந்த போதிலும், அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும், அந்தக் குற்றச்சாட்டுகளை "கம்யூனிச பிரச்சாரம்" என்று நிராகரித்து வந்தன. தற்போது, நோர்வே நாட்டு சி.ஐ.ஏ. உளவாளி ஒருவர், மரணப் படுக்கையில் இருக்கையில் அந்த இரகசியத்தை போட்டுடைத்துள்ளார்.

வடக்கு நோர்வேயில் வாழ்ந்த, ஒரு சாதாரண பாடசாலை ஆசிரியரான Arne Lund, தான் ஒரு சி.ஐ.ஏ. உளவாளி என்ற தகவலை, தனது ஆறு மகள் மாரிடமும் சொல்லாமல் மறைத்து வந்துள்ளார். இறுதியாக, இறப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர், ஊடகங்களுக்கு அந்த இரகசியத்தை தெரிவித்தார். இவரைப் போன்ற நேட்டோ உளவாளிகள் பலர் இருந்த போதிலும், முன்னாள் உளவாளி ஒருவர் தனது செயல்கள் பற்றிய வாக்குமூலம் கொடுத்துள்ளமை, இதுவே முதல் தடவை.

சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த Arne Lund, தனது நடவடிக்கைகள் பற்றி, மனைவியிடம் கூட கூறாமல் மறைத்து வந்துள்ளார். அடிக்கடி வீட்டுக்கு வராமல் இருப்பதைக் கண்ட மனைவி, விஷயம் தெரியாமல், அவர் மேல் சந்தேகப் பட்டிருக்கிறார். 

சி.ஐ.ஏ. இவரை ஊடுருவல் பணியில் ஈடுபடுத்திய காலத்தில் எல்லாம், வேறு இடத்திற்கு படிக்கச் செல்வதாக கூறியுள்ளார். Arne Lund, வட நோர்வேயில் உள்ள Hammerfest எனுமிடத்திற்கு கப்பலில் சென்று, சி.ஐ.ஏ. தொடர்பாளரை சந்திப்பார்.

அவர்கள் பின்லாந்து எல்லையோரம் உள்ள, Karasjok எனும் நகரத்திற்கு செல்வார்கள். அங்கிருந்து சாதாரண பேரூந்து வண்டியில் ஏறி, பின்லாந்தில் உள்ள Ivalo என்ற இடத்தை சென்றடைவார்கள். 

இவாலோ நகரில் இருந்து தான், சோவியத் யூனியனுக்குள் ஊடுருவும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும். சோவியத் நாட்டு எல்லையோரம் உள்ள Virtaniemi, மற்றும் Raja-Jooseppi ஆகிய பின்னிஷ் நகரங்கள், நேட்டோவின் ஊடுருவல் நடவடிக்கைக்கு பயன்படுத்தப் பட்டு வந்தன.

அவர்கள் சட்டவிரோதமாக எல்லை கடந்து செல்வதற்கு, பின்லாந்து நாட்டு உளவாளி ஒருவர் உதவுவார். தான் சி.ஐ.ஏ. இடம் இருந்து எவ்வளவு சம்பாதித்தேன் என்று சொல்லாத ஆர்னே லுண்ட், பின்னிஷ் உளவாளிக்கு ஒரு வருட, அல்லது இரு வருட சம்பளப் பணம் கொடுக்கப் பட்டதாக தெரிவித்தார். ஆயுதங்களுடனும், தொலைத்தொடர்புக் கருவிகளுடனும், சோவியத் யூனியன் பிரதேசத்திற்குள் ஊடுருவும் நேட்டோ அணியினர், உளவறிந்த பின்னர் திரும்பி வருவது வழக்கம்.

குறைந்தது ஏழு தடவைகள், அவ்வாறு சோவியத் நாட்டுக்குள் ஊடுருவி உளவு பார்த்ததாக, ஆர்னே லுண்ட் தெரிவித்தார். ஆனால், கடைசித் தடவையாக நடந்த ஊடுருவலில் தவறு நேர்ந்து விட்டது. தற்செயலாக சோவியத் பாதுகாப்புப் படையினரின் கண்களில் சிக்கியுள்ளனர். 

அதனால், நேட்டோ ஊடுருவல் அணியினர், எதிரில் வந்த மூன்று சோவியத் படையினரை சுட்டுக் கொன்று விட்டு, தப்பிச் சென்றுள்ளனர். ஆர்னே லுண்ட், தன்னிடம் இருந்த சைலன்சர் பூட்டிய துப்பாக்கியால், அவர்களை சுட்டுக் கொன்றதாக தெரிவித்துள்ளார்.

ஆர்னே லுண்ட் விவரித்த இரகசிய ஊடுருவல்கள் யாவும், ஐம்பதுக்களில், அறுபதுகளில் இடம்பெற்றவை. எண்பதுகளில் ஒரு தடவை, நேட்டோ ஆயுதங்கள் சிலவற்றை கண்டெடுத்ததாக சோவியத் அரசு அறிவித்திருந்தது. அப்போது அதனை யாரும் பொருட் படுத்தவில்லை. அமெரிக்க ஆதரவாளர்கள், அந்த செய்தியை "வழமையான சோவியத் பிரச்சாரம்" என்று புறக்கணித்து வந்தனர்.

பனிப்போர் காலத்தில் நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை, ஆர்னே லுண்ட் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், "Agentens skriftemål" என்ற பெயரில் ஒரு ஆவணப்படம் தயாரிக்கப் பட்டுள்ளது. நோர்வீஜிய NRK1 தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

ஆவணப் படத்திற்கான இணைப்பு:
Brennpunkt , Agentens skriftemål
https://tv.nrk.no/serie/brennpunkt/mdup11001913/29-10-2013

1 comment:

Murali said...

அமெரிக்க ஏகாதிபத்திய ஓநாய்கள் என்று தங்கள் குற்றச்செயல்களை ஏற்றுள்ளார்கள்? உழைக்கும் மக்களின் சோசலிச ஜனநாயக அரசை ஒழிப்பதில் எத்தனை வகை கொடூரமான செயல்கள்.வரலாறு எப்போதும் உண்மைகளை மறைப்பதில்லை.கலையின் பணிக்கு வாழ்த்துக்கள்.