Tuesday, April 10, 2018

ஈழப்போர் கூட மார்க்ஸிய பார்வையில் ஒரு வர்க்கப் போராட்டம் தான்

ஆப்கான் மக்கள் குறித்து எங்கெல்ஸ் எழுதிய குறிப்புகள், புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்த  ஈழத் தமிழ் மக்களுக்கும் வெகுவாகப் பொருந்துகின்றது. "ஆப்கான் மக்கள் துணிவு மிக்க, சுதந்திரமான இனத்தவர்கள். அவர்கள் கிராமிய மயமான அல்லது விவசாய தொழில்களில் மட்டுமே ஈடுபடுகின்றனர்... போரானது கிளர்ச்சியூட்டுவதாகவும், சலிப்பூட்டும் முதலாளித்துவ தொழில் பொறிமுறையின் ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலை அளிப்பதாகவும் இருந்தது." (Engels, On Afghanistan (1857))

முப்பதாண்டு கால ஈழப்போராட்டம், மேற்கத்திய ஏகாதிபத்தியத்திற்கு சவாலாக விளங்கியதை பலர் உணர்வதில்லை. ஸ்ரீலங்கா படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்கள், உலகமயமாக்கல் என்ற மேலைத்தேய கலாச்சார ஆக்கிரமிப்பின் கீழ் வந்து கொண்டிருந்தது. அதே நேரம், புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த "De Facto தமிழீழம்" அதற்கு எதிர்த் திசையில் பயணித்துக் கொண்டிருந்தது. மேலைத்தேய ஆடம்பர நுகர்பொருட்கள் எதுவும் அங்கே நுளைய முடியவில்லை.

உலகம் முழுவதும் அமெரிக்க கலாச்சார நோய்க் கிருமிகள் வேகமாக பரவிக் கொண்டிருந்த காலத்தில், ஈழம் ஒரு அமெரிக்க கலாச்சாரத் தடுப்பு காப்பு முகாமாக இருந்தது. "மின்சாரம் இன்றி வாழ்வில்லை" என்று நம்பிக் கொண்டிருக்கும் உலகில், ஈழத் தமிழ்மக்கள் தசாப்த காலமாக மின்சாரம் இன்றி வாழ்ந்து காட்டினார்கள். வெறும் நூறு கிலோ மீட்டர் பரப்பளவு மண்ணில் வாழ்ந்த இலட்சக் கணக்கான மக்கள், உலகமயமாக்கலை ஒதுக்கித் தள்ளி விட்டு, முப்பதாண்டுகள் வாழ முடிந்திருக்கிறது.

சாதாரண ஈழத் தமிழ் மக்கள் எந்தவொரு மார்க்சிய நூலையும் படிக்கவில்லை. ஆனால், வர்க்கப் போராட்டம் என்றால் என்னவென்று தமது வாழ்வியல் அனுபவங்கள் ஊடாக அறிந்து வைத்திருந்தார்கள். முதலாளிகளின் கால்களை நக்கிப் பிழைக்கும் நடுத்தர வர்க்க அறிவுஜீவிகள் சிலர் இந்த உண்மையை மறைக்கப் பார்ப்பார்கள்.

ஒரு சில உதாரணங்களை இங்கே தருகிறேன். யாழ் குடாநாட்டில், நன்னீர்க் கிணறுகள் எல்லாம் ஒன்றில் உயர்சாதியினரின் அல்லது அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் காணிகளுக்குள் இருக்கும். தாழ்த்தப்பட்ட சாதியினர் அருகிலேயே குடியிருந்தாலும், அவர்களின் கிணறுகளில் உவர் நீர் தான் கிடைக்கும். ஈழப்போர் தொடங்கியதும், சில கிராமங்களில் இருந்த கோயில் கிணறுகளை தலித் மக்கள் கைப்பற்றிக் கொண்டனர்.

அதே போன்று, பல தசாப்த காலமாக, ஊரில் உள்ள வசதியான, உயர்சாதியினரின் வீடுகளுக்கு தான் மின்சார இணைப்புக் கிடைத்தது. அருகிலேயே வாழ்ந்த, தாழ்த்தப்பட்ட சாதியினரான ஏழைத் தமிழர்களின் குடிசை வீடுகளில், மின்சாரம் அதிக செலவு பிடிக்கும் ஆடம்பரமாகவே இருந்து வந்தது. 

ஈழப்போர் தொடங்கிய ஆரம்ப காலத்தில், அரசு இயந்திரம் செயலற்றுப் போனது. அந்த இடைவெளியை பயன்படுத்திக் கொண்ட குடிசைவாசிகள், தெருவோர மின்கம்பிகளில் இருந்து திருட்டு மின்சாரம் எடுக்கத் தொடங்கி விட்டனர். சில தொழில்நுட்ப அறிவு பெற்ற குடிசை வாழ் இளைஞர்கள், எமது ஊரில் இருந்த அனைத்து குடிசைகளுக்கும் மின் இணைப்பு ஏற்படுத்திக் கொடுத்தனர்.

அதுவரை காலமும் குப்பி விளக்கு எரிந்து கொண்டிருந்த குடிசைகளில், அன்று முதல் மின்விளக்குகள் ஒளிர்ந்தன. சிலநேரம், மின்சார சபை ஊழியர்கள் வந்து இணைப்பை அறுத்து விட்டுச் செல்வார்கள். இலங்கை அரச நிறுவனமான மின்சார சபைக்கு தகவல் கொடுப்பது (அல்லது காட்டிக் கொடுப்பது), ஆண்டாண்டு காலமாக மின்சாரத்தை அனுபவித்து வரும் வசதி படைத்த மேல் சாதியினர் என்பது குறிப்பிடத் தக்கது. 

இறுதியில், ஸ்ரீலங்கா அரசு, முழு யாழ் குடாநாட்டிற்குமான மின் விநியோகத்தை தடை செய்து விட்டது. அதற்குப் பிறகு, எல்லோரும் சரி சமமாக எண்ணை விளக்குகளை பயன்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. போர் தீவிரமடைந்த காலங்களில், புலிகளே பல மின்மாற்றிகளை குண்டு வைத்து தகர்த்திருந்தனர்.

ஈழப் போர் நடந்த காலங்களில், வர்க்கப் போராட்டமும் மட்டுப் படுத்தப் பட்ட அளவில் நடந்து கொண்டிருந்தது. ஆரம்ப காலங்களில், போரில் இருந்து தப்புவதற்காக வெளிநாடுகளுக்கு சென்ற பணக்கார தமிழர்களின், வெறுமையாகக் கிடந்த வீடுகள் உடைக்கப் பட்டன. குடிசைகளில் வாழ்ந்த ஏழைத் தமிழர்கள் அங்கு சென்று குடியேறினார்கள். ஊரில் இல்லாத பணக்கார விவசாயிகளின் நிலங்களை ஆக்கிரமித்த நிலமற்ற விவசாயிகள், அங்கு பயிர் செய்கைகளில் ஈடுபட்டனர்.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் ஏற்படுத்தப் பட்ட பின்னர், பொருளாதார வளங்களும் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. அவர்களும் வெளிநாடு சென்ற பணக்காரத் தமிழர்களின் வீடுகளை, காணிகளை பறிமுதல் செய்து, தமது இயக்க உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு பகிர்ந்தளித்தனர். "போராளிக் குடும்பங்கள்" அல்லது "மாவீரர் குடும்பங்கள்" என்று, புலிகள் அமைப்புடன் சம்பந்தப் பட்ட குடும்பங்கள் பல, மார்க்சியம் வரையறுத்த பாட்டாளி வர்க்கத்திற்குள் அடங்குவன. குடிசைகளில் வாழ்ந்தவர்களுக்கு கல்வீடுகள் கிடைத்தன. நிலமற்ற விவசாயிகளுக்கு பயிர் செய்ய சிறுதுண்டு நிலமாவது கிடைத்தது.

புலிகள் மார்க்சிய புரட்சியாளர்கள் அல்லர். ஆரம்ப காலங்களில், போலி இடதுசாரிகளாக காட்டிக் கொண்டனர். ஆனால், ஒரு விடுதலைப் போராட்டம் அடிப்படையில் இடதுசாரிய தன்மை கொண்டது. அதாவது, மக்கள் மயப் பட்டது. ஈழத்திற்கான சுதந்திரப் போரை தமது தோள்களில் சுமந்த, பாட்டாளி வர்க்க தமிழர்களின் வர்க்கப் போராட்ட அபிலாஷைகளுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இல்லாவிட்டால், தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு அடி கூட முன்னோக்கி நகர்ந்திருக்காது.

பிரபாகரனோ, புலிகளோ மார்க்சியம் பேசவில்லை. அது பற்றி அறிந்திருக்கவும் மாட்டார்கள். ஆனால், அவர்களது போராட்ட நடைமுறையானது, மார்க்சிய தத்துவார்த்த அடிப்படையின்றி சாத்தியப் படவில்லை. ஒரு போராட்டம் நடத்த வேண்டுமானால், உயிரை துச்சமென மத்தித்து போராடும் துணிவுடைய போராளிகளை சேர்க்க வேண்டும். யார் போராளிகளாக இணைந்து கொள்ள முன்வருவார்கள்? தமிழ் மேட்டுக்குடியை சேர்ந்த பிள்ளைகள் போராட முன்வருவார்களா?

ஒரு சிறிய ஆய்வை செய்து பாருங்கள். புலிகள் அமைப்பில் இருந்த போராளிகளில், மேட்டுக்குடியினர் எத்தனை சதவிகிதம்? வசதிபடைத்த தமிழ்க் குடும்பத்தை சேர்ந்த ஒரு பிள்ளை கூட, "கரும்புலி" ஆகவில்லை என்பது ஒரு கசப்பான உண்மை. நடுத்தர வர்க்க பெற்றோர்கள், தமது பிள்ளைகளை பல்கலைக்கழகம் வரையில் படிக்க வைத்து, கைநிறைய சம்பளம் வாங்கும் உத்தியோகத்திற்கு வழிகாட்டினார்கள்.

ஓரளவு வசதி படைத்த தமிழர்கள், தங்கள் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தார்கள். வசதி படைத்த தமிழனின் பிள்ளை, வெளிநாடு சென்று சம்பாதித்து அனுப்பினான். அவன் குடும்பம் ஊரில் புதுப் பணக்காரர் அந்தஸ்தை பெற்றது. அதே நேரம், ஏழைத் தமிழனின் பிள்ளை புலிகள் இயக்கத்தில் சேர்ந்து போராடி மாண்டான். அவனது குடும்பம் வறுமையில் வாடியது. வசதிபடைத்த தமிழனின் பிள்ளை, பல்கலைக்கழகம் சென்று பட்டம் வாங்கி விட்டு உத்தியோகம் பார்க்கிறான்.

ஏழைத் தமிழனின் பிள்ளை, எட்டாம் வகுப்பையும் முடிக்காமல் புலிப் போராளியாக மாறி, விடுதலைக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தான். "தமிழர்கள் மத்தியில் வர்க்கப் பிரச்சினை இல்லை, மார்க்சியவாதிகள் மட்டுமே வர்க்க வேறுபாட்டை வளர்த்து, சமூகத்தை கூறுபோடுகின்றார்கள்." என்று நடுத்தர வர்க்க அறிவுஜீவிகள் வர்க்கப் போராட்டத்தை மறுதலிக்கின்றனர். கனவான்களே! மேலே நான் எழுதிய யதார்த்தம், ஈழத்தில் நிலவும் வர்க்க முரண்பாட்டை எடுத்துக் காட்டவில்லையா?

புலிகள் இயக்கத்தில் சேர்ந்த போராளிகளில் பெரும்பான்மையானோர், குறைந்தது 80% மாகிலும், மார்க்சியம் கூறுவது போல, இழப்பதற்கு எதுவுமற்ற பாட்டாளிவர்க்க தமிழர்கள். இந்த உண்மையை உங்களால் மறுக்க முடியுமா? வசதி படைத்த நடுத்தர வர்க்க இளைஞர்கள் சிலரும் போராளிகளாக இருந்தனர். ஆனால், அவர்களது எண்ணிக்கை மிகக் குறைவு. 10% இருந்தால் கூட மிக அதிகம். 

நடுத்தர வர்க்க அறிவுஜீவிகளின் பரப்புரைகளுக்கு மாறாகத் தான், ஈழத்தின் யதார்த்தம் இருந்தது. மார்க்சியம் சரியானது என்பதை, புலிகள் தமது போராட்டம் மூலம் மெய்ப்பித்திருந்தனர். மார்க்சியம் எதிர்வு கூறிய, பாட்டாளி மக்களின் பங்களிப்பின்றி புலிகளின் போராட்டம் சாத்தியப் பட்டிருக்குமா?

புலிப் போராளிகள் ஒன்றில் வறிய குடும்பப் பின்னணி கொண்டவர்கள், அல்லது தாழ்த்தப் பட்ட சாதிகளை சேர்ந்தவர்கள். இவர்களை விட, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களான மட்டக்களப்பு, அம்பாறை, வன்னி, மலையகத்தை சேர்ந்த இளைஞர்கள் தான் பெருமளவில் சேர்ந்திருந்தனர். 

சுருக்கமாக, மார்க்சியம் கூறுவது போல, "இழப்பதற்கு எதுவுமற்ற பாட்டாளி வர்க்க மக்கள்" தான் போராடினார்கள். தமிழ் சமுதாயம் எந்தளவு மோசமாக வர்க்க ரீதியாக பிளவுபட்டுள்ளது என்பது இதிலிருந்து தெளிவாகும். இதற்குப் பிறகும், "தமிழர்கள் மத்தியில் வர்க்க வேறுபாடு கிடையாது... மார்க்சியம் தமிழர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யவில்லை..." என்றெல்லாம் பிதற்றினால், நீங்கள் தமிழ் மக்களிடம் இருந்து அன்னியப் பட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தமாகும்.

No comments: