Tuesday, March 20, 2018

மொங்கோலியர் ஆட்சியில் சீனாவில் குடியேறிய சோழ வணிகர்கள்


இந்து மத புராணக் கதையொன்றை காட்டும் சோழர் கால கல்வெட்டு. தென் சீனாவில் உள்ள குவாங்ஸௌ (Quanzou) நகரத்தில் கண்டெடுக்கப் பட்டது. 13 ம் நூற்றாண்டில் இருந்த, சிவன் கோயில் ஒன்றின் எஞ்சிய பகுதி அது.

அந்தக் கோயில் தற்போது இடிபாடுகளுடன் காணப்படுகின்றது. ஒரு காலத்தில், குவாங் ஸௌ நகரில் இந்து-தமிழர்கள் வாழ்ந்ததற்கான அடையாளம் அது.

சீன, தமிழ் மொழியில் எழுதப்பட்ட கல்வெட்டுகளும், குவாங் ஸௌ அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டுள்ளன. "சீனாவை ஆண்ட மொங்கோலிய சக்கரவர்த்தி செங்கிஸ்கானுக்கு நல்லாசி வேண்டி கட்டப்பட்ட கோயில்" என்று ஒன்றில் எழுதப் பட்டுள்ளது. அன்றைய சோழ சாம்ராஜ்யத்திற்கும், செங்கிஸ்கானுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பை இது காட்டுகின்றது.

சோழ நாட்டு தமிழ் வணிகர்கள், சீனாவுடன் வர்த்தகத் தொடர்பு வைத்திருந்தனர். அவர்களில் சிலர், குவாங் ஸௌ நகரில் தங்கி விட்டனர். அன்று சீனாவை ஆண்ட சொங் அரச பரம்பரைக்கும், சோழர்களுக்கும் இடையில் கடல் வாணிபம் தொடர்பாக அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டன. இதனால், மொங்கோலியாவில் இருந்து படையெடுத்து வந்த செங்கிஸ்கானுக்கு சோழ வணிகர்கள் உதவினார்கள்.

செங்கிஸ்கான் சாம்ராஜ்யத்தில், இந்து மதம் உட்பட, அனைத்து மதங்களுக்கும் சுதந்திரம் வழங்கப் பட்டிருந்தது. பிற்காலத்தில் சீனாவில் இந்து மதம் அழிந்து விட்டாலும், இருபதாம் நூற்றாண்டு வரையில், இந்து மத சம்பிரதாயங்களை பின்பற்றுவோர் (சோழ நாட்டு தமிழர்களின் வம்சாவளியினர் ?) வாழ்ந்து வந்துள்ளனர். மாவோவின் கலாச்சாரப் புரட்சியில், அவை எல்லாம் நிலப்பிரபுத்துவ எச்சங்களாக கருதப்பட்டு தடை செய்யப்பட்டன. (Quanzhou Overseas-relations History Museum; http://www.chinamuseums.com/quanzhou_overseas.htm )

மொங்கோலிய சாம்ராஜ்யத்தில் பன்னாட்டு வர்த்தகம் ஊக்குவிக்கப் பட்டது. இன்றுள்ள மாதிரி வர்த்தகர்களுக்கு இடையில் பணப் பரிமாற்றங்கள் இலகுவாக நடந்து கொண்டிருந்தது. இன்று பரவலாக புழக்கத்தில் உள்ள நாணயத்தாள்கள், பதின்மூன்றாம் நூற்றாண்டு மொங்கோலிய சாம்ராஜ்யம் முழுவதும் பயன்பாட்டில் இருந்தது. பண்டைய சீனர்கள் கண்டுபிடித்த "பறக்கும் காசு" என அழைக்கப்பட்ட நாணயத் தாள், அதாவது கடதாசியில் அச்சிடப் பட்ட நாணயத் தாள் வணிகத்தை இலகுபடுத்தி இருந்தது.

அப்போது சீனாவை ஆண்ட மொங்கோலிய கான் சக்கரவர்த்தியின் அரசுப் பிரதிநிதிகள், இந்த நாணயத் தாளை அச்சிட்டு கையொப்பமிட்டு கொடுத்தனர். அதில் கான் சக்கரவர்த்தியின் முத்திரை பொறிக்கப் பட்டிருந்தது. அதன் பிறகு அந்த நாணயத் தால் சாம்ராஜ்யத்தின் எந்த மூலையிலும் செல்லுபடியானது.

அந்த நாணயத் தாள் கொடுத்து எந்தப் பொருளும் வாங்க முடிந்தது. விலை உயர்ந்த ஆடம்பர பொருட்களான முத்துக்கள், நவரத்தினக் கற்கள் கூட வாங்கலாம். எல்லா வணிகர்களும் நாணயத் தாள்கள் வைத்திருந்தனர்.

அதே நேரம், 17 ம் நூற்றாண்டு வரையில், ஐரோப்பாவில் நாணயத்தாள் பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை. அப்போதெல்லாம் ஐரோப்பியர்கள் தங்க, வெள்ளி நாணயக் குற்றிகளை காவிக் கொண்டு திரிந்தனர்.

உலக வரலாற்றில் மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை கட்டி ஆண்டவர்கள் மொங்கோலியர்கள் தான். அது பற்றிய எதிர்மறையான தகவல்களே வரலாற்று நூல்களில் பதிவுசெய்யப் பட்டுள்ளன. இருப்பினும், மொங்கோலிய சாம்ராஜ்யத்தில் இருந்த சமூக, பொருளாதார, தொழில்நுட்ப வளர்ச்சிகள் ஐரோப்பாவுக்கு வருவதற்கு நீண்ட காலம் எடுத்தது.

பதின்மூன்றாம் நூற்றாண்டில், உலகில் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை கட்டி ஆள்வது இலகுவான காரியம் அல்ல. அதை நடைமுறைப் படுத்துவதற்காக தபால் சேவை கொண்டுவரப் பட்டது. மேற்கே கருங்கடலில் இருந்து கிழக்கே பசுபிக் சமுத்திரம் வரையில், தபால் சேவை சிறப்பாக இயங்கியது.

சாம்ராஜ்யத்திற்குள் இருந்த மாகாணங்களில் இருந்தும் செல்லும் அனைத்துப் பாதைகளும், (சீனாவில் இருந்த) தலைநகர் கான்பாலிக்கை வந்தடைந்தன. 40 அல்லது 70 கிலோமீட்டர் தூரத்திற்கு ஒரு தபால் நிலையம் இருந்தது.

அங்கிருந்து தபால் கொண்டு செல்வதற்கு 200 தொடக்கம் 400 வரையிலான குதிரைகள் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தன. சராசரியாக ஒரு கடிதம், ஒரு நாளைக்கு நானூறு கிலோமீட்டர் பயணம் செய்திருக்கும். ஐரோப்பாவில், 19ம் நூற்றாண்டில் தான் இது போன்று ரயில் வண்டி மூலம் கொண்டு செல்லும் தபால் சேவை அறிமுகப் படுத்தப் பட்டது.

மேலும் கான் சக்கரவர்த்தியின் சாம்ராஜ்யம் அனைத்து மக்களுக்குமான நலன்புரி அரசாங்கமாகவும் இயங்கியது. களஞ்சிய அறைகளில் எந்நேரமும் தானியங்கள் சேர்த்து வைக்கப் பட்டிருக்கும். விளைச்சல் குறைவான காலத்தில் மானிய அடிப்படையில் மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப் படும். அத்துடன் ஏழைகளுக்கும் பகிர்ந்தளிக்கப் பட்டது.

ஏழைகளுக்கு தேவையான உணவு மட்டுமல்லாது, உடைகளையும் அரசு கொடுத்தது. கோடை காலம், குளிர் காலத்திற்கு அவசியமான உடைகள் வழங்கப் பட்டன. இதற்காக ஆடை தயாரிப்பாளர்கள் ஒரு நாள் உழைப்பை அரசுக்கு வரியாக செலுத்த வேண்டி இருந்தது. யார் யாருக்கு உடுபுடைவகள் வழங்க வேண்டும் என்ற விபரங்களை அரசு அலுவலர்கள் குறித்து வைத்திருந்தனர். ஐரோப்பாவில், பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்து தான், இது போன்ற நலன்புரி அரசு நடைமுறைக்கு வந்தது.

1 comment:

Unknown said...

மிகக் கொடுரமான சிலுவை யுத்தமும் செங்கிஸ்கான் ஆட்சியில் தானே அரங்கேறியது தோழர்.